வள்ளலார் – நங்கநல்லூர் J K SIVAN
இன்று தைப்பூச நன்னாள்.
ஆண்டுதோறும் தைப்பூச நன்னாளில் வடலூரில் ஏழு திரைகள் விலகி ஜோதி தரிசனம் நிகழும். ஒவ்வொரு திரைக்கும் ஒவ்வொரு சக்தி என்பது நம்பிக்கை. (கண்ணாடிக் கதவுகளில்) கறுப்புத்திரை என்பது மாயா சக்தி, நீலத்திரை – கிரியாசக்தி, பச்சைத் திரை – பராசக்தி, சிவப்புத் திரை – இச்சா சக்தி, பொன்வண்ணத் திரை – ஞானசக்தி, வெண்மைத் திரை – ஆதிசக்தி, கலப்புத்திரை – சிற்சக்தி
கருமை, நீலம், பசுமை, சிவப்பு, பொன்மை, வெண்மை, கலப்பு என ஒன்றிற்கொன்று நிற அடர்த்தி குறைந்து வரும் ஏழு திரைகள் விலக, தூய கன்ணாடியின் வழியே பேரொளிப் பிழம்பை ஞான சபையில் வள்ளலார் அமைத்தது எதற்கெனில், மாயா சக்தி என்னும் திரைகள் விலகி மனம் தூய்மை பெற்றதும், உள்ளொளியாய் இறைவன் விளக்கம் தருகிறான் என்பதைப் புறத்தில் காட்டுவதற்காக.
“அருள் ஒளிவிளங்கிட ஆணவம் எனும்ஓர் இருளற என்உளத்து ஏற்றிய விளக்கே (அகவல், 1495–-96) என்று அருட்பெருஞ் ஜோதி அகவலில் வள்ளலார் கூறியிருப்பதும் இதைத்தான்.
அருட்பெருஞ்சோதியாகிய இறைவனை ஜோதி வடிவில் அன்று தரிசிக்கிறோம்
தைப்பூச நாளில் விடியற்காலையில் மேற்கே சந்திரனும் கிழக்கே சூரியனும் காணப்பெறும். அந்த நேரத்தில்தான் ஞான சபையில் அருட் பெருஞ்ஜோதியைக் காட்டியருளினார் வள்ளலார். இதனை உணர்த்தும் விதமாக ஆண்டுதோறும் தைப்பூச நாளில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
வள்ளலார் எழுதிய ஒரு சில வாக்கியங்கள் மனதைத் தொடுகிறது. உலகில் எல்லா உயிர்களும் பசியின்றி வாழ பகவானை வேண்டிய ஒரு உத்தமர் வள்ளலார். ஜீவ காருண்யத்தின் மானிட அவதாரம்.
வள்ளலார் எழுதியதை நீங்களே படியுங்கள்:
‘உள்ளபடி பசியால் வருந்துகின்ற சீவர்களுக்கு ஆகாரம் கொடுக்க நினைத்தபோது, நினைத்த புண்ணியரது மனம் வேறு பற்றுக்களை விட்டுச் சுத்தக் கரணமாகி நினைத்தபடியால், அந்தப் புண்ணியர்களை யோகிகளென்றே உண்மையாக அறியவேண்டும்.
ஆகாரங் கொடுக்க நினைத்தபடி உபசரித்துக் கொடுக்கும்போது, அவருண்ணுவது தாமுண்ணுவதாக அறிந்து களிக்கின்ற படியால், ஞானிகளென்றே உண்மையாக அறியவேண்டும்.
ஆகாரங்கொடுக்க உண்டு, பசி தீர்ந்தவர்களுக்கு அத்தருணத்தில் ஆன்மாவின் உள்ளும், புறத்தும், கீழும் மேலும் ,நடுவும் பக்கமும், நிறைந்து கரண முதலிய தத்துவங்களெல்லாம் குளிர்வித்துத் தேக முழுதும் சில்லென்று தழைய முகத்தினி டமாகப் பூரித்து விளங்குகின்ற கடவுள் விளக்கத்தையும் திருப்தியின்பமாகிய கடவுளின் இன்பத்தையும் பிரத்தியட்சத்தில் தரிசித்து அனுபவிக்கின்றார்க ளாதலால், அந்தப் புண்ணியர்கள் கடவுளைக் கண்டவர்களென்றும் கடவுளின்பத்தை அனுபவிக்கின்ற முத்தரென்றும் அறியவேண்டும். பசி நீங்க உண்டு சந்தோஷித்தவர்கள் இந்தப் புண்ணியர்களைத் தெய்வமாகப் பாவிக்கின்றார்களாதலால், இவர்களே தெய்வமுமென்று உண்மையாக அறியவேண்டும்.”