புதுமை, மாறுதல் பிடிக்காது. – நங்கநல்லூர் J K SIVAN
ஒரு வார்த்தை சொல்லட்டுமா? என்னைப் பொறுத்த வரை வயதானவனாக இருப்பதற்கும் சிரஞ்சீவியாக இருப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
வயதானவனுக்கு இன்னும் மரணம் நெருங்கவில்லை. சிரஞ்சீவிக்கு மரணமே கிடையாது. ஓகே.
வயதானவனுக்கு உலக பந்தம் உறவு கொஞ்சம் கொஞ்சமாக விட்டுப்போகும்.
சிரஞ்சீவிக்கு எதுவுமே கிடையாது. ஏன் என்றால் அவன் எந்த காலத்தோடும் ,மனித வாழ்க்கை நடைமுறை யோடும் ஒத்துப் போக முடியாது. அவன் கடைசியாக எந்த நடைமுறையை கடைப் பிடித்தானோ அதுவே நிரந்தரமாகி விடுமே.
வயதானவனுக்கு நண்பர்கள் குறைந்து கொண்டே வருவார்கள். புதிதாக எவரும் அவனோடு பழக மாட்டார்கள். அவன் தனிமையில், தனித்து தான் இருக்கவேண்டும்.
சிரஞ்சீவிக்கு அவன் காலத்தை, இல்லை, யுகத்தை சேர்ந்தவர்களே இருக்க மாட்டார்களே. புதிதாக யாருக்கு அவனைத் தெரியும்.?
வயதனாவனுக்கு நோய் நொடி உடல் உபாதைகள் வாட்டும்.
சிரஞ்சீவிக்கு அந்த தொந்தரவு இல்லை.
வயதானவனுக்கு மரணம் நெருங்க நெருங்க பயம் விலகி அதை வரவேற்கும் தயார் நிலை மனதில் வளரும்.
சிரஞ்சீவிக்கு மரணத்தைப் பற்றிய எண்ணமே இல்லை. மரணம் வேண்டும் போல விருப்பம் அதிகமாகும்.
இதிலிருந்து என்ன புரிகிறது?
மனிதன் ஒரு சமூக மிருகம். அவனால் தனித்து வாழ முடியாது. அவன் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவது தான் நியாயம். நியதி. சிரஞ்சீவியால் அப்படி தன்னை மாற்றிக் கொள்ள முடியாது ,மாறி மாறி வரும் சமூகத்தில் ஒட்டி உறவாட முடியாது என்பதால் நீரிலிருந்து வெளியே விழுந்த மீன் போல் துடிப்பு அதிகம்.
ராம பக்தன் ஹனுமான் சிரஞ்சீவி அல்லவா? ராமனோடு இருந்த த்ரேதா யுகம் முடிந்தாலும் தன் உயிருக் குயிரான ராமன் மறைந்தாலும் ஆஞ்சநேயன் ராமனையே நினைத்து ஜெபத்தில் தனது வாழ்வின் பெரும்பகுதியை தனிமையில் கடத்தினான். அடுத்த யுகமான துவாபர யுகம்வந்துவிட்டது.
ஒருநாள் நாரதன் ஆஞ்சநேயனை சந்தித்தான்.
“ஆஞ்சநேயா இன்னும் எத்தனை நாள் ராமனையே நினைத்து ஜபம் செய்வாய்?”
“நாரதா, முனீஸ்வரா, என் மூச்சே ராமன்தான். ஆகவே மூச்சு முடியும் வரை ராமன் தான் எனக்கு எல்லாம்.”
நாரதன் சிரித்தான்.
“ஏன் சிரிக்கிறாய் நாரதா?”
“உனக்கு தான் மூச்சே பிரிய முடியாதே. நீ சிரஞ்சீவி. அது இருக்கட்டும். ஏன் நீ நிஜத்தை விட்டு நிழலையே தேடிக் கொண்டு இருக்கிறாய்? அதை நினைத்தால் எனக்கு சிரிப்பு வந்தது”
“நாரதா என்ன சொல்கிறாய், எனக்கு புரியவில்லை யே””
“எப்படி புரியும். புரிந்து கொள்ள முயற்சித்தால் அல்லவோ புரியும்!”
”நாரதா நிஜம்-நிழல் என்கிறாய், என் ராமன் நிழலா?”
“ஆம், வேறென்ன. நாராயணனின் ராம அவதாரம் முடிந்தவுடன் ராமன் மறைந்து விட்டான். அடுத்ததாக வேறு அவதாரம் தொடங்கி விட்டானே இந்த புது துவாபர யுகத்தில் உனக்குத் தெரியாதா?!”
“நாரதா எனக்கு எதுவும் தெரியாது. ராமன் என்னவாக அவதாரம் எடுத்துள்ளான்? எங்கிருக்கிறான் சொல்லேன்?”
“இந்த துவாபர யுகத்தில் உன் ராமனின் பெயர் கிருஷ் ணன். த்வாரகையில் உள்ளான். சமீபத்தில் அவனிடம் பேசும்போது தான் உன்னைப் பற்றியும் பேச்சு வந்தது”.
“ஆஹா, நாரதா, என் பிரபு என்னை நினைத்துக் கொண்டிருக்கிறாரா. நான் அவரைப் பார்க்க வேண்டுமே “
“உனக்கு அவரை பார்க்க வேண்டுமானால் உன் உருவத் தை மாற்றிக்கொள்ள. மாறு வேடத்தில் துவாரகைக்கு வா. அங்கு ராம நவமி அன்று அன்ன தானம்செய். நான் அப்புறம் உன்னைப் பார்க்கிறேன்”.
நாரதன் நகர்ந்தான்.
ஆஞ்சநேயன் ஒரு பிராமணன் வேடத்தில் துவாரகை யைத் தேடிச் சென்றான். துவாரகையில் ஸ்ரீ ராம நவமி அன்று அன்ன தானம் அளித்தான். எண்ணற்ற வர்களுக்கு தன் கையாலேயே அன்னமிட்டான். வரிசை வரிசையாக அமர்ந்திருக்கும் மக்கள் கூட்டத்தில் கொஞ்சமும் அயராது ஆஞ்சநேயன் குனிந்து ஸ்ரத்தை யோடு அனைவருக்கும் இலையில் அன்னமிட்டான்.
“என்ன இது?”
தலை சுற்றியது அஞ்சநேயனுக்கு!..
ஒரு வரிசையில் வலது கால் மடக்கி இடது கால் ஊன்றி அமர்ந்திருந்த ஒரு வயோதிக பிராமணருக்கு எதிரில் ஆஞ்ச நேயன் குனிந்து கையில் அன்ன வட்டிலோடு நின்றவன் நெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்தான்.
”ஏன்? ஏன் ? இது எதற்காக? நான் என்ன அபசாரம் செய்து விட்டேன்?”
ஆஞ்சநேயன் கதறினான்.
அந்த மனிதரின் கால்கள் அவனுக்கு நிறைய பரிச்சய மானவை. சாக்ஷாத் ராமனின் கால்கள்””.
”ப்ரபு என்னை இப்படியா நீங்கள் சோதிக்கவேண்டும்?.
அலறினான் ஆஞ்சநேயன். பிராமணர் சிரித்தார். மெதுவாக எழுந்தார். அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பிராமணரான நாரதரும் எழுந்தார். வேடத்தைக் களைந்து கிருஷ்ணன் ஆஞ்சநேயனை அணைத்துக் கொண்டான்.
நீண்ட பிரிவல்லவா? ஆஞ்சநேயா. உன் கையால் சாப்பிட ஆசை வந்தது.எனவே நானும் நாரதனும் உனைக்காண வந்தோம்.”
“ப்ரபு எனக்கு ஒரு வருத்தம்!”
“என்ன ஆஞ்சநேயா?”
“நான் உடனே நீங்கள் இருக்கும் த்வாரகைக்கு வரவேண்டும் உங்களையும் என் தாய் சீதா பிராட்டி யையும் சேர்த்தே பார்க்கவேண்டும்.. நீங்கள் பிரிந்து அவதிப்பட்டது போதும். உங்களைத் தனியாக பார்த் தால் எனக்கு பழைய ஞாபகங்கள் வந்து வதைக் கின்றன”
“சரி, நீ வாயேன் எங்களோடு”
ஆஞ்சநேயன் கிருஷ்ணனோடு துவாரகை சென்றான். ருக்மிணி என்கிற உருவில் தனது மாதாவைக் கண் டான். பலராமன் என்ற உருவில் லக்ஷ்மணனையும் கண்ணாரக் கண்டு களித்தான்.
பேச்சே எழவில்லை. எனக்கும் மேலே எழுத முடியவில்லை.
ஒன்று நிச்சயம். ஹநுமானுக்கு கிருஷ்ணனை ராமனாகப் பார்க்க மட்டுமே பிடித்ததது.அப்படியே ருக்மணி பலராமர்களை புது உருவில் பார்க்க விருப்பமில்லை. சீதா லக்ஷ்மணனாக பார்க்கவே ஆர்வம்.
வயதானவர் களுக்கு எப்போதும் அவர்கள் அனுபவித்த பழசு தான் வெல்லக்கட்டி.