DASARATHA’S DAUGHTER J K SIVAN

தசரதனின்  செல்ல மகள் ..      நங்கநல்லூர்   J K  SIVAN

அயோத்யா  சக்ரவர்த்தி தசரதனுக்கு  வெகு காலமாக  பிள்ளை இல்லை.  அவனுக்கு  மூன்று மனைவியர், முதல் மனைவி  கோசல நாட்டு  இளவரசி  கௌஸல்யா.  தசரதனுக்கு அவள் மூலம் ஒரு  பெண் பிறந்தாள் . சாந்தா என்று பெயர்.   சகல சௌபாக்கியங்கள்  இருந்தும்  இளவரசனாக, அடுத்த  ராஜாவாக  ஆவதற்கு  ஒரு பிள்ளை இல்லையே  என்ற ஏக்கம்  தசரதனை வாட்டியது.   தசரதன் கேகய நாட்டு அரசன் மகள் கைகேயியை  மணந்தான். கேகய நாட்டு  அரசன் அஸ்வபதிக்கு,   கௌசல்யா மூலம்   தசரதனுக்கு பிறக்கும் மகனுக்கு தான்  அடுத்த  ராஜ்ய  பட்டாபிஷேகம் நடைபெறும். அவனே  அடுத்த அயோத்தி ராஜா என்று ஆரூடம் ஜோசியம் எல்லாம்  சொல்லியது பற்றித்  தெரியும்.   ஆகவே  தசரதனுக்கு ஒரு நிபந்தனை விதித்தான்.

 ”தசரதா, உனக்குப் பிறகு அடுத்த ராஜா  என் மகள் கைகேயிக்கு பிறக்கும் மகனுக்கு தான்” என்று நீ வாக்களித்தால் மட்டுமே என் மகள் கைகேயியை உனக்கு மணம் செய்விப்பேன்”  என்று சொல்ல”அப்படியே  செய்கிறேன்”  என்று வாக்கு கொடுத்து விட்டான் தசரதன்.
 கைகேயி மூலமாகவும்  தசரதனுக்கு பிள்ளை பிறக்கவில்லை.
மூன்றாவது மனைவியாக  தசரதன் சுமித்ராவை கல்யாணம் செய்துகொண்டும் அவள் மூலமும் புத்ர பாக்யம் இல்லை.

தசரதனுக்கு  ஒரு  ஆப்த  நண்பன்  அங்க தேசத்து  ராஜா  ரோமபாதன்.   ரோமபாதனுக்கும்  புத்ர பாக்யம் இல்லை. குழந்தைகள்  என்றால் கொள்ளை ஆசை  அவனுக்கு.
அயோத்திக்கு  ஒருநாள் வந்த  ரோமபாதன் சாந்தாவை  பார்க்கிறான். அவள் அழகும் விளையாட்டும்  அவனை மயக்குகிறது.கொஞ்சி விளையாடுகிறான்.
மெதுவாக  தசரதன் அருகே சென்று கைகளைக் கெட்டியாக  பிடித்துக்  கொள்கிறான்.

” தசரதர், என் ஆருயிர் நண்பா, நான்  உன்னை  ஒன்று கேட்கட்டுமா, உதவுகிறாயா?’
இவ்வளவு பெரிய  அங்கதேசத்து ராஜாவுக்கு என்ன வேண்டும்  என்னிடத்தில்?    என்று  தசரதன் வியந்தான்.

”கேள்  ரோமபாதா , என்ன உன் மனதை அரிக்கிறது சொல்  என்னிடம் ”
 ”தசரதா, கௌசல்யா,  எனக்கு  சொல்லவே  வெட்கமாக இருக்கிறது, எனக்கு குழந்தை பாக்யம் இல்லை. குழந்தைகள் என்றால் எனக்கு உயிர்.  உன் மகள் சாந்தா தெய்வ பிம்பமாக  இருக்கிறாள். ……எனக்கு…….”

தசரதனும் கௌசல்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்  கொண்டார்கள். ரோம பாதன் மனதில் உள்ளது என்ன என்று புரிந்துவிட்டது. …

”தசரதா , உன் மகள்  சாந்தா, அபூர்வ அழகு படைத்த குழந்தை…. உன் அளவு  நான் அருமையான  தந்தையாக இல்லா விட்டாலும் ஒரு நல்ல தந்தையாக  அவளை வளர்க்க  ஆசை.  அவளை எனக்கு  மகளாக  தத்து கொடுப்பாயா?”என்று கெஞ்சினான் ரோமபாதன்.
அவன் நிலை புரிந்தது கௌசல்யாவுக்கு. அவளுடைய  ஒரே குழந்தை, சாந்தாவை மகளாக  ஆசையோடு வளர்க்க கேட்கிறான் ரோமபாதன்… அதற்காகவே  அயோத்தி வந்திருக்கிறான்…  

கண்ணீர்  மல்க  கௌசல்யா சாளரம் வழியாக  வெளியே பார்க்கிறாள்.  குழந்தை சாந்தா தோட்டத்தில்  விளையாடிக்  கொண்டிருக்கிறது.   எதிரே  பாசமிக்க ஒருவன் அவளை போற்றி வளர்க்க ஆசைப்படுகிறான்.   கணவன்  தசரதன்  நண்பன் கண்களில் உள்ள ஏக்கத்தைக் கண்டு  துடிக்கிறான்.  

தசரதன் கௌசல்யாவைப்  பார்க்கிறான். அவள் மனதில் ஊசலாடும்  எண்ணங்கள்  புரிகிறது.
”ரோமபாதா  நீ சற்று ஓய்வெடு.  நான்  கௌசல்யாவுடன்  மனம் விட்டு பேசவேண்டும்..காத்திரு ”
ரோமபாதன் காதில் தசரதன்  சொன்னது எதுவும் விழவில்லை.சாளரம் வழியாக  தோட்டத்தில் விளையாடும் சாந்தாவை அவன் கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தான்.
அந்தப்புரத்தில்  கௌசல்யாவை கட்டி அணைத்த  தசரதன் அவள் முகத்துக்கு நேராக  தனது முகம் வைத்து  ”ராணி,கௌசல்யா, என் செல்வமே, உன் ஒரே  மகளை  தத்து கொடுப்பாயா?”
 ”நாதா,   ரோமபாதன்  முகத்தை கவனித்தீர்களா, அவன் கண்கள்  சாந்தாவையே  தேடுவதைப்  பார்த்தீர்களா? உங்களுக்கு என்னையும் சேர்த்து மூன்று மனைவிகள். ஒருகாலத்தில் உங்களுக்கு பல குழந்தைகள் பிறக்கலாம். அவனுக்கு…..?

குழந்தையும்  ரோமபாதனோடு எவ்வளவு  ஆர்வமாக, ஆசையாக  விளையாடுகிறாள்.. என் உள்  மனதில்  என் பெண் சாந்தா, இங்கிருப்பதை விட நம்மைவிட    ரோமபாதன் இல்லத்தில் மேலும் சீரும் சிறப்புமாக இருப்பாள் என்று படுகிறது.

”கௌசல்யா  நீ கெட்டிக்காரி,  விவரம் அறிந்தவள். எதையும்  ஆராய்ந்து பார்த்து  முடிவெடுப்பவள்.. நீ சொன்னால் அது சரியாகவே இருக்கும்.”

இதற்குள்  குழந்தை சாந்தா விளையாட்டு முடிந்து வீட்டுக்குள் ஓடி வந்தாள் . அப்பா தசரதன் அம்மா கௌசல்யா வோடு ரோமபாதன் இருப்பதை பார்த்துவிட்டு குதூகலத்துடன் அவன் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டாள்.அவனும் அவளை இருக்க  அணைத்துக்  கொண்டு முத்தமாரி பொழிந்தான்.

தசரதன் கௌசல்யா இருவரும்  ரோமபாதன் அமர்ந்திருந்த இடத்துக்கு வருகிறார்கள்.  குழந்தை சாந்தா அவன் மடியில் அவனோடு கொஞ்சி விளையாடுவதை பார்க்கிறார்கள்.

”அப்பா  ”என்று  கூப்பிட்டாள்  சாந்தா.
”சாந்தாம்மா , உனக்கு  ரோமபாத  மாமாவை பிடிக்கிறதா?”
”ஆமாம்பா,  ரொம்ப ரொம்ப  பிடிக்கும் என்று சொல்லிக்கொண்டே ரோமபாதன் கழுத்தை கட்டிக்கொண்டாள் சாந்தா ”
 ”ஓ  அப்படியா,  ரோமபாத மாமாவுடன்  அவர்  வீட்டுக்கு போகிறாயா?  அங்க தேசத்தில் அவரோடு  இருக்கிறாயா?”
”ஓ  ரொம்ப சந்தோஷமா இருக்கும் அப்பா”
இதற்கு மேல் என்ன தேவை.  சாஸ்திரப்படி  ஒரு குழந்தையை பெற்றோர்  எப்படி வளர்ப்பு மகளாக  தத்து கொடுக்க வேண்டுமோ அப்படி செய்து  சாந்தா ரோமபாதன் மகளானாள்.  எப்போது வேண்டுமானாலும்  அயோத்தி வரலாம்  தசரதன் கௌசல்யாவோடு இருக்கலாம்.
சாந்தா வளர்ந்தாள் .அங்க தேசத்து இளவரசியாகியபின்,  தான் பிறந்த  அயோத்தியை கொஞ்சம் கொஞ்சமாக மறந்தாள் . ரோமபாதன்  அவரவணைப்பில் மகிழ்ந்து வாழ்ந்தாள். அவள் அழகு எட்டு ஊருக்கு  சேதியாக சென்றது.  அவளுக்கு திருமண வயது வந்துவிட்டது.  அங்க தேசத்தில்  அப்போது திடீரென்று  பஞ்சம் தலை தூக்கியது.

ரோமபாதன் மனதில் கவலை. மந்திரி பிரதானிகள் ஆருடம் ஜோஸ்யம் எல்லாம் கேட்டு  ரிஷ்யஸ்ரிங்கர்  எனும் களைக் கோட்டு மாமுனியை வரவழைத்தால்  மழை வரும் என்று ஜோசியர்கள்  சொன்னதை  ரோமபாதனிடம் சொல்கிறார்கள். .
ரிஷ்ய ஸ்ரிங்கர்  பற்றி  விபரம் அறிகிறான். அவர் பெண்களையே  பார்க்காது வளர்க்கப்பட்டவர்.
அரசே  அந்த  ரிஷி குமாரன்  முதன் முதலாக  ஒரு அழகிய பெண்ணை பார்த்தால் அவன் அவள் மீது அவன் மனம் செல்லலாம். அவள் சொல்வதை கேட்பான்…யாரை  அனுப்புவது. அவர் தந்தை  விபாண்டக மகரிஷி இல்லாத நேரத்தில் தான் அது நடக்கவேண்டும்.  ரிஷ்ய ஸ்ரிங்கரை  இங்கு அழைத்தால் தான் மழை. வேறு வழியில்லை”

சாந்தா அதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தவள்,  ‘அப்பா நாட்டிய பெண்களை  அனுப்புங்கள். எப்படியாவது ரிஷ்ய ஸ்ரிங்கரை  நான் இங்கே  அழைத்து வரவழைக்கிறேன். ரிஷ்யஸ்ரிங்கர்  என்னை கல்யாணம் செய்து கொண்டால்  அவர் தந்தை  விபாண்டக  மஹரிஷி  ஒன்றும் தடுக்கமுடியாது.  ரிஷ்யஸ்ரிங்கர்  இங்கேயே  இனி உங்கள்  மருமகனாக   இருப்பார்”
ரிஷ்ய ஸ்ரிங்கர்  வாழ்ந்த ஆஸ்ரமத்தை  சுற்றி  மூன்று பக்கமும்  பெரிய   ஏரி . கடல் போல் இருந்தது. ஒரு உல்லாச படகில் நந்தவனம் போல்  செடி கொடி மலர்கள் போல்  உருவாக்கப்பட்டு  நாட்டியப் பெண்கள் அதில் ஏறி  மெதுவாக  படகு நகர்ந்து ஆஸ்ரமத்துக்கு  தூரத்தில்  நீரில் நின்றது..அதில் சென்ற  சாந்தா   ரிஷி  விபாண்டகர் ஆஸ்ரமத்தில அவர் இல்லாத நேரத்தில்  ஆஸ்ரமத்துக்கு சென்று   எப்படியோ   பெண்களையே  பார்த்திருக்காத  ரிஷ்ய ஸ்ரிங்கருடன்  பழகி
அவரை சில நாட்களில் அங்க தேசத்துக்கு அழைத்து வந்து அங்கே  ஜோ ஜோ என்று மழை பெயது எல்லோரும் சுபிக்ஷமாக வாழ்ந்தார்கள். பின்னர்  விபாண்டக  மகரிஷியும் வங்கதேசத்துக்கு வந்து  றிரிஷ்யஸ்ரிங்கர்  சாந்தா  திருமணம் நடைபெற்றது. 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *