தூய பக்தி – நங்கநல்லூர் J K SIVAN
நமக்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பு எப்படி, என்ன, என்று உங்களுக்கே தெரியும். கடவுள் படைத்த படைப்புகளில் அதி உன்னதமானவன் மனிதன். நாம் கடவுளை விட சாமர்த்திய சாலிகள், கெட்டிக்காரர்கள். எப்படி என்றால் நம்மைப் போல சுயநல வாதிகள், அகம்பாவம் கொண்டவர்களை கடவுளின் வேறு எந்த படைப்பிலும் காணமுடியாது. நமது நாக்கு எப்படி வேண்டுமானாலும் புரளும். நமக்கு வேண்டியதை எல்லாம், நம்மால் முடியாததையெல்லாம், அவனிடம் கேட்போம், கெஞ்சுவோம், அழுவோம். கிடைத்துவிட்டால், நமது சாமர்த்தியத்தால், மூளையால், புத்திசாலித்தனத்தால் மட்டுமே கிடைத்தது என்போம், அவனை மறந்து விடுவோம். நமக்கு கிடைக்கவில்லையென்றால் கடவுள் கிராதகன், இரக்கமில்லாதவன், கருணை கிடையாது, என்று அவனே அதற்கு காரணம் என்று அவனைத் திட்டுவோம்…!
உண்மையான அவன் பக்தர்கள் பலர், நம்மைப்போல் அல்ல என்பதால் தான் அவன் அவர்களைத் தேடி வருவான், உதவுவான், சந்தோஷப்படுவான். அப்படி ஒருவர் தான் துக்காராம்.
ஒரு தடவை துக்காரம் பண்டரிநாதனுக்கு ஒரு லெட்டர் எழுதி அது பண்டரிபுரம் போகும் பக்தர்கள் மூலமாக கொடுத்து அனுப்பப்பட்டது. அந்த பக்தர் நேரே பாண்டுரங்கன் ஒரு செங்கலில் நின்று காட்சியளிப்பது கண்டு சேவித்து வருத்ததுடன் சொன்னார்:
”பாண்டுரங்கா, பாவம், துக்காரம் ரொம்ப உடம்பு சரியில்லாமல் இருப்பதால் நடந்து வந்து உன்னை பார்க்க முடியவில்லை என்று வருத்தத்துடன் உனக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் நான் அதை படிக்கவா — தேவையே இல்லை ,உனக்குதான் அதில் என்ன எழுதியிருக்கிறார் என்றே தெரியுமே– என்று அந்த கடிதத்தை ரங்கனின் பாதத்தில் வைத்தார்.
“ருக்மணி, நம் துக்கா, ரொம்ப நோய்வாய்பட்டு நம்மை பார்க்க வரமுடியவில்லை என்று விசனத்தோடு எழுதியதைப் பார்” என்று துக்காராம் லெட்டரை விட்டலன் ருக்மணியிடம் காட்டினான்.
‘நாதா, நாமே சென்று துக்காவைப் பார்த்து விட்டு வருவோமே” என்றாள் ருக்மணி
“நீ சொல்வது சரி, ஆனால் இங்கு நம்மை காண வரும் பக்தர்கள் எமாற்றமடைவார்களே, நாம் நம் கருடனை அனுப்பி அவரை இங்கு கொண்டுவரச் செய்வோம். என்று துகாராமுக்கு ஒரு பதில் கடிதம் எழுதினான் விட்டலன் –
” அன்பு துக்கா, உன்னை பார்க்காமல் என்னாலும் இருக்க முடியவில்லை. கருடனிடம் இந்தக் கடிதம் கொடுத்து அனுப்பியிருக்கிறேன் அவன் மீது ஆரோகணித்து உடனே புறப்பட்டு வா. மற்றவை நேரில்- உன் விட்டலன் “
தான் போகமுடியாததால் தெருவில் பண்டரிபுரம் போகும் பக்தர்களையாவது பார்ப்போமே என்று வாசலில் வீட்டுத் திண் ணை மேல் படுத்திருந்தார் துக்காராம். அவர் முன் வந்து நின்று கருடன்
“துக்காராம். விட்டலன் உங்களைக் கையோடு அழைத்து வரச்சொன்னார். இதோ கடிதம்” என்ற போது
‘ ஐயோ, இது அபசாரம். நீங்கள் நாராயணனைத் தாங்கி செல்பவர், நானோ அவர் காலணியிலிருந்து விழும் தூசிக்கும் கீழானவன் உங்கள் மீது நான் ஏறி உட்காருவதா? தங்கத்தால் செய்தாலும் செருப்புக்கு இடம் காலின் கீழ் தானே, தலையில் அல்லவே!” அவரையே முடிந்தால் இங்கே வரச் சொல்லுங்களேன்” என்றார் துக்காராம்
கருடனிடம் செய்தி அறிந்த விட்டலன் ”வா ருக்மணி நாமே துக்காவிடம் செல்வோம்”
பண்டரிபுரம் செல்வோர் வருவோரையே ஏக்கமுடன் பார்த்திருந்த போது ஒருநாள் கருடன் சர்வாலங்காரமுடன் ருக்மணியோடு விட்டலனை துக்கா ராம் வீட்டுக்கு முன் இறக்கியவுடன் கிருஷ்ணன் ஓடோடி வந்து துக்காராமை மார்போடு அணைத்து கொண்டான். பக்தனும் பகவானும் ஒருவரையொருவர் மனமாரத் தழுவினர். விட்டலன் கருடன் மேல் வந்தது, துக்காராமுடன் பேசியது மற்றவர் கண்களுக்கும் காதுக்கும் எட்டாதே . வெகுகாலம் இப்படி இறைவனோடு சேர்ந்து பூமியில் வாழ்ந்து விட்டு துக்காராம் வைகுண்டத்துக்கு பெர்மனண்டாக சென்றுவிட்டார்.
இதுவல்லவோ இணையில்லாத பக்தி பரவசம்.