OLD NANGANALLUR J K SIVAN

ஐம்பது அறுபது வருஷம் முன்பு  –  நங்கநல்லூர்  J K  SIVAN
பல க்ராமங்களை   ஒரு காலத்தில் தன்னுள்  கொண்டது தான்  இந்த  பெத்த பெத்த  நாகரிக  சென்னைப் பட்டினம். அந்த கிராமங்கள்  பட்டணமாகும் நிலையில் தம்முடைய  அடையாளத்தை இழந்து விட்டன.  எனக்கு மற்ற இடங்களை பற்றி அதிகம் தெரியாது. ஆனால்  நான்  ஐம்பது வருஷங்களுக்கு மேலாக  வாழும் நங்கநல்லூர்  நன்றாக நினைவிருக்கிறது.  எங்கும் வயல்  வெளிகள்.  அங்கங்கே சிறிய, பெரிய  வீடுகள் பல வர்ணங்களில் பல உருவங்களில்.  அவரவர் சக்திக்கேற்ப  வீடு கட்டிக்கொள்வார்கள். ஒவ்வொரு வீட்டிலும் தோட்டம் பின் பக்கம் இருந்தது. அநேக வீடுகளில் கார்  கிடையாது. ரெண்டு சக்ர வண்டிகளில் சைக்கிள் அவசியம் எல்லா வீட்டிலும்  இருக்கும்.  தெருவில் சைக்கிள் ரிப்பேர்.  காற்றடிக்க,  வாடகை சைக்கிள்  HOUR சைக்கிள் என்று பெயர்,  கிடைத்தது.   சிலர் மோட்டார்  சைக்கிள் வைத்திருந்தார்கள். எல்லா வீட்டிலும் கிணறு உண்டு. மழை காலத்தில்  கையை நீட்டி கிணற்று நீரை தொடலாம். குடத்தில் மொண்டு கொள்ளலாம். தரை மட்டத்துக்கு  நீர்.  

பயிர்  நிலங்கள் என்பதால் நங்கநல்லூரில்  நிறைய   தோட்டங்களில்  பெரிய  துறவு கிணறுகள்  நீர்ப்பாசனத்துக்காக இருந்தன.  பெரிய கிணறுகள். அவற்றில்  கல் படிகள் உண்டு.  அவற்றில்  இறங்கி குளிப்பவர்களும் உண்டு,   கிணறு கைப்பம்பு மூலம்   குளித்த வர்களும் இருந்தோம்.   மேலே இருந்து கிணற்றுக்குள் தொப் தொப் என்று குதிக்கும் தைரியம் கொண்ட சிறுவர்கள் நீரில் குதித்து  விளையாடுவார்கள். அவர்கள் தைர்யம் என்னை அசர வைத்த்து. (இது தோட்டக்காரர்  இல்லாத போது).

பொதுவாக நாங்கள் விரும்புவது மோட்டார்  பம்ப்செட்  மூலம்  ‘தப தப’  என்று மேலிருந்து கொட்டும்  நீரில்  குளிப்பது.   அந்த நீர்  கத்திரிக்காய், வெண்டை,  கொத்தவரை, நெல், கீரைகள்  பயிர்களுக்கு  பாத்திகள் மூலம் செல்லும். பெரிய தொட்டியில் நிரம்பும்.  தோட்டக்காரர் சோப்பு தேய்த்து குளிக்க அனுமதி தரமாட்டார்.   துண்டு கட்டிக்கொண்டு தான் குளிக்க வேண்டும். அரை ஆடை, கால் ஆடைக்காரர்களை கிட்டே சேர்க்க மாட்டார்.  குளித்த  பிறகு   கையில் கொண்டு சென்ற  பின்னல் கூடைகளில், அல்லது பைகளில்  நிறைய  தோட்டத்து காய்கறிகள், கீரைகள் தோட்டக்காரரிடம்  வாங்கிக்  கொள்வோம்.  உத்தேச அளவில் கொடுப்பார்.  நம்மை அவருக்கு  தெரிந்திருந்தால்,  பிடித்திருந்தால்,காய்கறிக்கு  அளவே  கிடையாது.   நிறையவே கொடுப்பார். கோபமான  மூடில் இருந்தால் கொஞ்சம் குறையும்.  பெரிய  பை ,  கூடை  நிறைய காய்கறி வாங்கினாலும்  எல்லாம் சேர்த்து  ஒரு ரூபாய்  அல்லது  ஒன்னரை ரூபாய் காசுக்கு  மேல் கொடுக்க வேண்டாம்.     பையில்  இருக்கும் காய்கறிகள் நிச்சயம் மூன்று  நாலு   கிலோவுக்கு குறையாமல்  இருக்கும். அல்லது கொண்டு செல்லும் பையின் கொள்ளளவை பொறுத்தது. நங்கநல்லூரில் ஆறு கிடையாது.  குளம்  குட்டைகள் உண்டு.
தமிழ் நாட்டு  கிராமங்களில் ஆற்றில் குளிப்பது சுகம்.   குளத்தில் குளிப்பது ஒரு வித சுகம். ஆழமான குளத்தில்  படிக்கட்டுகளில்  கனமான பாசி படிந்து வழுக்கிவிடும்.  நீச்சல் தெரியா மல் ஆற்றிலோ குளத்திலோ இறங்குவது ஆபத்து. வழுக்கும் படியை பிடித்துக் கொண்டு மேலே ஏறவும் முடியாது.ஆற்று  நீர்  படுகைகளுக்கு, வாய்க்கால்கள் உண்டு.   பெரிய  பாத்திகள் மூலம்  நீர் சலசலவென்று வயலுக்குள் ஓடும். ஆற்றங்கரையில் குளத்தங்கரையில் அடர்ந்த மரங்கள் இருக்கும். அரசமரம், புளியமரம் வேப்ப மரம்  நிச்சயம் இருக்கும். அரசமரத்தடியில் பிள்ளையார் இருப்பார். குளத்தங்கரையிலும் பிள்ளையார் உண்டு.  பெண்கள் குளிக்க தனி இடம். அங்கே ஆண்கள் செல்ல மாட்டார்கள்.   குளித்து விட்டு பெண்கள் பலர்  அரசடி பிள்ளையாரை நமஸ்கரித்து மரத்தை  பிரதக்ஷணம் செய்வார்கள்.  108 முறை சுற்றுவோர்களும் உண்டு. வாய் ஏதேனும் ஒரு ஸ்லோகத்தை சொல்லிக் கொண்டே இருக்கும்.  அரசமரத்தடி, வேப்ப மரத்தடியில்   சாணி தெளித்து  மெழுகி பெருக்கி கோலம் போட்டு வைத்திருப் பார்கள், பார்க்கவும் நடக்கவும் சுகம். வேப்ப மரம் பக்கம் ‘கம்’ என்று ஒரு தனி வித  வாசனை மூக்கை துளைக்கும். பெரிய பெரிய மரங்கள்.  நிறைய  மாடுகள்  ஆடுகள்  எங்கே பார்த்தாலும் மேயும்.   எல்லோர் வீட்டிலும் வாசலில்  ஏதாவது ஒரு நாய் காவல் இருக்கும்.  கட்டிப்போடாமலேயே  வந்து படுக்கும். வேளாவேளைக்கு  அதற்கு ஆகாரம் உண்டு. FRIDGE  அநேக வீடுகளில் கிடையாது என்பதால்  மீந்த  உணவு நாய்களுக்கு தாராளமாக   கிடைத்தது.

அரசடியில்  சில இடங்களில் நாவிதர்கள்  சின்ன  பித்தளை  அலுமினிய  கிண்ணத்தில் தண்ணீர்,  ஒரு பலகை, தகர பெட்டியோடு முண்டாசு கட்டிக்கொண்டு பீடி பிடித்துக் கொண்டு காத்திருப்பார்கள்.  கிராம மக்களின்  சலூன் அது தான். open air ஹேர் ட்ரெஸ்ஸிங் சலூன்.   எல்லோர் தலைக்கும் ஒரே வித கட்டிங்  தான்.  கத்திரிக்கோல்,  கத்தி தவிர  ஒரு  கட்டிங் பிளேயர்  மாதிரி ஒரு மெஷின்.  அது தலையில்  ரோவர் மாதிரி  மேயும்போது  வெட்டுவதை விடை பிடுங்குவது ஜாஸ்தி. சித்ரவதையாக  வலிக்கும்.  தண்ணீரை  தலையில் தெளித்து மீண்டும் மேய விடுவார். கையகல கண்ணாடி காட்டுவார். அதில் நம் முகம் நமக்கே  அடையாளம் தெரியாதபடி தலையைக் கொந்தி வைத்திருந்தது தெரியும்.  மூன்று மாதங்களுக்கு அவரிடம் போக அவசியம் இல்லாமல்  சதுரவட்டை தலை. தென்னாப்பிரிக்க  ரபாடா மாதிரி இருந்தேன்.

கிராமங்களில்  எப்போதும்  ஆத்தங்கரை ஓரமாக  மயான பூமி, ருத்ர பூமி உண்டு.   நங்க நல்லூரில்  தில்லைகங்கா நகர் அருகே  ஒரு கிறிஸ்தவ  சமாதிகள் நிறைய  இருந்தது. இப்போதைய பழவந்தாங்கல் ரயில் நிலையம் அப்ப்போது கிடையாது.அந்த இடத்தில் ஒரு பெரிய  மயானம். மேலே  தகர கொட்டகை போட்டு  எரிமேடையாக  இருந்தது.  அந்த மயான பூமி அருகே ஒன்றிரண்டு குடிசைகளில்  பிணங்களை புதைக்கும் எரிக்கும் குடும்பங்கள் வாழ்ந்தது. , மற்றபடி கிராமத்துக்கே அடையாளமான  பச்சை பசேல் வயல்கள், தென்னந் தோப்பு, மாந்தோப்பு, பனைமர சோல்ஜர்கள்.

எல்லா  கிராமத்திலும்  ஊரிலிருந்து  பஸ் ஓடும்  ரயில் ஓடும்   இடத்துக்கு தனியாக  ஒரு   மண்  ஒத்தையடிப்பாதை, வயல்களுக்கு இடையே  இருக்கும்.  கண்மாய்கள்,  கோவில்கள், அக்ராஹாரம்,  பசுக்கள், காளைமாடுகள்,   குட்டைகளில் எருமைகள்,  வண்டிகள்,  வைக்கோல் போர்கள்,   கலப்பைகள்  இத்யாதி இத்யாதி வழியெல்லாம் பார்க்கலாம்.  கிராமப்  பெயர்கள்  வேடிக்கையாக இருக்கும்.   பொட்டச்சி புரம் , காத்தாயி குளம்,  கம்புளி,  வழுக்கையான்  தோட்டம்.  வெள்ளை நாயக்கர் கடை.  உசேன் பீடி கடை.  சைதாப்பேட்டை மாதிரி  இடங்களில் அநேகர்   நெசவாளர்கள்,  துணி நெய்பவர்கள் வெளியே  நூல் பாவுவார்கள்.  கலர் கலராக  நூல்கள்  சாயம் தீட்டி வெளியே  வெயிலில் காயும்.     நங்கநல்லூரில்  நெசவாளர்கள் இல்லை.   எல்லாமே  தெருவில்  கூவி கூவி  விற்பார்கள். தயிர், மோர், பனஞ்சாறு, பதநீர், வெண்ணெய் , நெய் , எண்ணெய்கள், அரிசி மூட்டை,  புளி  எல்லாமே  தெருவில் விற்பார்கள். வாடிக்கைக்காரர்களுக்கு மாதாமாதம் கொண்டு வந்து தருவார்கள்.  பசுமாடுகள் வீடு வாசலில்  நிற்க வைத்து பால்  கறந்து தருவார்கள். இல்லையென்றால் நீளமான தகர காத்து வைத்த பாத்திரத்தில்,  ஜோடுத்தவலை  என்று அதற்கு பெயர் அதில் ஒரு ஆழாக்கு, உழக்கு என்று அளந்து மாதாந்திர   வாடிக்கைக் கணக்கில் பணம் வாங்கிக் கொள்வார்கள்.

நங்கநல்லூரில் பல  பழைய  மளிகைக்கடைகள் இருந்தன.  சிதம்பரம் ஸ்டோர், ஸ்டோர் , பழனி ஸ்டோர்  முருகன் ஸ்டோர்  என்றெல்லாம் சில கடைகள் வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர  மளிகை சாமான்களை வீட்டில் கொண்டு வந்து கொடுக்கும். நங்க நல்லூர்   புதிதாக குடியேறியவர்கள் வீடுகள் தவிர  வெகுகாலமாக வசித்தவர்கள் வீடு  பல அடுக்குகள், கட்டுகள் கொண்டது. முக்கால் வாசி ஒட்டு வீடுகள், கூரை வேய்ந்தவை. ஒன்றோடொன்று இணைந்த வீடுகள்.  மங்களூர்  ஓடு கண்ணில் படாது. நாட்டு  ஓடு, செருகு ஓடுகள் தான் எல்லா வீடுகளுக்கும். தேள், பூரான், பல்லி    எல்லா வெஈடுகளிலும் இருக்கும்.  பச்சை பாம்பு, தண்ணீர் பாம்பு   தவளை ஓணான்  நடமாட்டம் ஜாஸ்தி.   தெரு விளக்கு முணுக் முணுக் என்று தான் எரியும்.  சாயந்திரம் ஆனால் தவளை சத்தம் காதைத் துளைக்கும். கொசு ஒரு இடம் விடாமல் கடிக்கும்.   அநேக வீடுகளில் 25 வாட் உருண்டை பிலிப்ஸ்  ஆஸ்ரம் பல்புகள் தான் எரிந்தது. அடிக்கடி  பியூஸ் ஆகிவிடும். முக்கால் வாசி வீடுகளில்   நாங்களே   பியூஸ் போட்டுக் கொள்வோம்.

பழைய  செருகு ஓடுகள் வேய்ந்த வீடுகளில்    வெயில்  நேரத்தில்  மேலே ஓடுகள் இடையே  இருந்து  தொப் தொப் என்று தேள்  வீட்டுக்குள் விழும்.  தேள் கடி சர்வ சாதாரணம். கிராமங்களில்   தேள்கடி பாம்புக்கடிக்கு  மந்திரம் போட்டு குணப்படுத்துபவர்கள் ஆங்காங்கே கிராமங்களில் வசித்தார்கள்.

அமாவாசைகளில் வாத்தியார்கள் ஊரிலே இருப்பவர்களோ அண்டை ஊர்க்காரர்களோ  ஆற்றங்கரைக்கு  குளத்தங் கரைக்கு  வந்து  தர்ப்பணம் பண்ணி வைப்பார்கள்.  ஆவணி அவிட்டம் அன்று  குளத்தங்கரை  அரசமரத்தடியில்  நிறைய பேரை உட்கார்த்தி வைத்து  பூணல் போட்டு விடுவார்கள்.  பிள்ளையார் கோவிலில் ஹோமம் பிரசாதம் எல்லாம் உண்டு. எல்லோருக்கும்  வாழை இல்லை தொன்னையில்  பிரசாதம்.   வெண்பொங்கல், தயிர் சாதம் கை  நிறைய  வாழை இல்லை ஏடுகளில் கொடுக்கும்  வழக்கம் இருந்தது.

நங்கநல்லூர்க்குள்  18C  பஸ்  எப்போது வரும்  எப்போது போகும் என்று தெரிந்து அதற்காக  குறித்த நேரத்தில் அரைமணி முன்னதாகவே போய் காத்திருந்து  பயணம் செல்வோம்.
கல்யாண மண்டபங்கள் கிடையாது.  வீடுகளிலேயே  விசேஷங்கள்  கொண்டாடுவோம். தெருவை வளைத்து  தென்னங்கீற்று பந்தல்,  அண்டை அசல் வீடுகள் எல்லாம் பங்கேற்கும்.

கல்யாணங்கள் பண்டிகைகள் வந்துவிட்டால், தெருவில்  பந்தல் போட்டு  ஜோராக எல்லாருக்கும்  சாப்பாடு கமகமவென்று  வாசனையாக கிடைக்கும்.    எங்கள் ஊரில் பாலு செட்டியார் ஒருவர்  பள்ளிக்கூடம் கட்டி இலவசமாக பாடம் கற்றுக்கொடுத்தது ஞாபகம் இருக்கிறது. அவர் பிள்ளை ஷண்முகம் தான் ஹெட்மாஸ்டர்.  ஆங்கிலத்தில் பேச ஆசை. ஆனால் அவனுக்கு  சுத்தமாக  இங்கிலிஷ் தெரியாது.

 நங்கநல்லூரில் கிழக்கே  வானுவம்பேட்டையில்  எண்ணெய்கள் தயாரிக்கும் செக்கு இருந்தது. எல்லோரும் அங்கே  தான் கடலை எண்ணெய் , நல்லெண்ணெய், தேங்காய் எண்ணை வாங்குவோம். கம்மென்று  வாசனை மூக்கை துளைக்கும். வீசை பலம் கணக்கில் வாங்கியது ஞாபகம் இருக்கிறது. மாவு அரைக்கும்  மிஷின்கள்  ரெண்டு மூன்று  கடைகள்  நங்கநல்லூரில் இருந்தது. ஞாயிறுக்கிழமைகளில் வீட்டுக்கு தேவையானவற்றை அரைத்துக் கொண்டு  வருவேன்.
இன்னும் நிறைய  சொல்ல தோன்றுகிறது. சொல்கிறேன். 

 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *