KUDHAMBA CHITHTHAR – J K SIVAN

குதம்பை சித்தர்  –   நங்கநல்லூர்   J K  SIVAN

”ஆமைபோல் ஐந்து மடக்கித் திரிகின்ற   ஊமைக்கு முத்தியடி   -குதம்பாய் ஊமைக்கு முத்தியடி.”

உலக வாழ்க்கையில்  திளைத்து  இதிலேயே  இன்பம் தேடி  கிடைத்ததை அடைந்து  இறுமாந்து  சந்தோஷம்  இது தான் என்று  துன்பத்தை விலைக்கு வாங்கும்  அறிவிலி களாக  வாழ்கிறோம்.  உண்மையில் மனிதப் பிறப்பின் லக்ஷியம் என்ன  என்று உணர வில்லையே.  கர்மங்களை முடித்து ஞானமும் முக்தியும் பெறுவது ஒன்றே  சரியான வழி. முக்தி  ஒன்றையே  மோக்ஷம், பிறவி துயரம் அற்ற பேரின்ப நிலை என்று ஞானிகள் சொல்கிறார்கள்.  அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்  என்று குதம்பை சித்தர்  வழி சொல்கிறார்.   ஆமையைப் பார்த்திருக்கி றாயா? மெதுவாக ஊர்ந்து போவது போல் நடக்கும். ஏதாவது எதிர்ப்பு, ஆபத்து வருகிறது என்று தோன்றினால் ஓடாது ஒளியாது .  தன்னுடைய  நான்கு  கால்களையும் ஓட்டுக்குள்  இழுத்துக் கொண்டு விடும்.அசையாது ஒடுங்கி நிற்கும்.  நாம் அது போல் நம்மை  எதிர்கொள்ளும்  பற்றுகள், பந்தங்கள்  ஆசை பாசங்கள் அனைத்திலிருந்து நம்மை விலக்கிக்கொண்டு  அவற்றிலிருந்து விடுபட வேண்டும். அப்புறம்  என்ன?  ஐம்புலன்களின் பிடியிலிருந்து தப்பியவனை மோக்ஷம் தானே வந்து எதிர் கொள்ளும்.  ஞானிகள் போல் நம்மால்  வைராக்கியத்தோடு உலகை அணுகமுடியாது. பயிற்சி வேண்டும்  ஐம்புலன்களையும்
அடக்கி, கண்ணை நாசி(மூக்கு) நுனியில் வைத்து, குண்டலினி யை யை எழுப்பி ஊமை போல்  இருப்பவ ருக்கு முத்தி உறுதி. என்கிறார். எங்குமே ஆனந்தம் தான் அப்புறம்.

”மந்தி மனதை வசப் படுதிட்டார்க்கு   வந்தெய்து முத்தியடி -குதம்பாய்  வந்தெய்து முத்தியடி.”

உன்னால்  அடக்க முடியாதது எது? உன்னால் கட்டுப்படுத்த முடியாதது  எது?  எது உன்னை சதா சர்வ காலமும் ஆட்டுவிக்கிறது? இது போல் பல கேள்விக ளுக்கு ஒரே பதில் மனது.  அதை ஓயாமல் ஒளியால் ஓய்வில்லாமல் ஆடும் குரங்கு  என்று சொல்வது  ஞாயம் தான்.  மனம் நம்மை வசப்படுத்துவதற்கு பதிலாக நாம் மனத்தை  நம் வசப்படுத்தி விட்டால் அப்புறம் மோக்ஷம் தான்.   குரங்காக அலையும் மனதை,  சுவை,   ஊரு,ஒ ளி, ஓசை,நாற்றம்  எனும்  ஐம்புலன்களின் ருசியிலிருந்து  விடுபட்டு  கட்டுப்படுத்துபவருக்கு  முத்தி  தானே  நம்மைத் தேடி வரும் என்கிறார் குதம்பை சித்தர்.  

”செங்கோல் செலுத்திய செல்வமும் ஓர்காலம்   தங்கா தழியுமடி  -குதம்பாய்  தங்கா தழியுமடி.”

நாம்  காணும்  எல்லாமே என்றும்  நினைத்திருக்கும் என்று மனப்பால் குடிக்கிறோம். நாமே வெகுகாலம் உலகம் முடியும் வரப்பிற்கு வாழப்போகிறோம் என்ற எண்ணமும் மனதில் ஒட்டிக்கொண்டிருக்கிறது.  நமக்கு முன்  இருந்து மறைந்த வர்களை, மடிந்தவர்களை  நினைத்துக்கூட  பார்ப்பதில்லை.  எவ்வளவு பெரிய  ராஜாவாக இருந்தாலும், அகண்ட சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாக இருந்தாலும், கொடுங்கோலனோ, செங்கோலனோ, எவனாக இருந்தாலும் உலகில் எவனும் நிரந்தரமாக  இருக்க முடியாது. இது வாடகை வீடு.  வீட்டுக்காரனுக்கு தெரியும் எப்போது நம்மை வெளி யேற்ற வேண்டும் என்று.  அவன் முடிவு தான்  உறுதி, இறுதி. . 

”கூடங்கள் மாடங்கள் கோபுர மாபுரம்  கூடவே வராதடி    -குதம்பாய்  கூடவே வராதடி”.

”பெற்றோர், மக்கள் என்ற பந்தங்கள்  எல்லாமே  சந்தையில்கூட்டம்  என்பார்  தாயுமானவர்.  வீடு மாளிகை  அரண்மனை எதுவுமே  ஒருநாள்  இடிந்து விழுந்து மண்ணோடு மண்ணாகும். மனை மாடு ஆகிய பொருள்களும் எப்போதும் ஒருநாளும் ம் நம்முடன் வரப்போவதில்லை.  ஒட்டாத ஒன்றுக்கு எட்டாத கொட்டாவி எதற்கு?

”விந்து விடார்களே வெடிய சுடலையில்   வெந்து விடார்களடி   -குதம்பாய்  வெந்து விடார்களடி”.

உடலின் ஜீவ சக்தியை  வீணாக்காமல்,  சரியான முறையில் அடக்கி, குண்டலினியில்  செலுத்தி எழுப்பி மெய்ஞானத்தை அடைந்தவருக்கு மரணம் என்பது இல்லை அதாவது சுடலை(சுடுகாடு) அடையமாட்டார் என்கிறார்  குதம்பை சித்தர். 

ஐயா அது உங்களால் முடியலாம். எங்களால் முயன்று பார்க்கக்கூட முடியவில்லை.பேசாமல் படித்துக் கொண்டே யாவதுஇருப்போம்.என்றோ ஒருநாள் படித்தது செயலாகட்டும். படிப்பது அதற்காகவாவது உதவுமே. 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *