திருமந்திரம் – நங்கநல்லூர் J K SIVAN
திருமூலர்
உடலும உயிரும் ஒழிவற ஒன்றிற்
படரும் சிவசத்தி தாமே பரமாம்
உடலைவிட்டு இந்த உயிர் எங்குமாகிக்
கடையும் தலையும் கரக்கும் சிவத்தே.
இந்த உடலை நாம் கேட்டுப் பெறவில்லை. தானாகவே பகவான் நமக்குகந்த இந்த அற்புதமான உடலைப் பரிசளித்திருக்கிறான். இந்த உடலை பரிசுத்தமாக வைத்திருக்கவேண்டியது நமது கடமை. நமது சாதாரண செங்கல் மண்ணாலான வீட்டையே நாம் சுத்தமாக பெயிண்ட் அடித்து பளிச்சென்று துடைத்து வைத்துக் கொள்கிறோம். அகில உலக நாதன் ஆன்மாவாக உள்ளே குடியிருக்கும் கோயில் நம்முடைய உடல். அதை எவ்வளவோ பரிசுத்தமாக வைக்க நாம் கடமைப் பட்டுள்ளோம். இந்த உடலை விட்டு பிரிந்தால் உடனே நேராக மோக்ஷம் போய்விடுவோம் என்று எண்ணுகிறவன் மூடன். இல்லை தம்பி அதற்கு வேறு வழி இருக்கிறது. அது உனக்கு எளிதாக கிடைக்காது.. ஆன்மாவை உணர்ந்த உடலிலிருந்தவன் தான் மோக்ஷம் அடைவான். எல்லோரும் இல்லை. புரிந்து கொள் .
‘தேவர் பிரான் தன்னை திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார், அறிந்தபின்
ஓதுமின், கேண்மின், உணர்மின், உணர்ந்து பின்
ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே.”
தேவாதி தேவன் சிவன் யார்?, இதைத் தேடி உணர்ந்து, அவனது சக்தி, பெருமை, காருண்யம், கம்பீரம் என்று எவன் ஒருவன் அறிந்து கொள்கிறானோ, அவன் அவ்வாறு அறிந்தபின் வாய் ஓயாமல் சிவனை ஓம் நமசிவாய என்று பஜிப்பான், சிவனைப் பற்றி என்னவெல்லாம் அறிந்து கொள்ள முடியுமோ அவற்றை எல்லாம் தேடிப்பிடித்து கேட்பான், தனியாக ஒரு இடத்தில் அமர்ந்து கண்மூடி தனக்குள்ளே சிவனை உணர்வான், பின்னர் அவனே சிவனாகி உயர்ந்த நிலையை அடைவான்.
‘மானிடராக்கை வடிவு சிவலிங்கம் –
மானிடராக்கை வடிவு சிதம்பரம்
மானிடராக்கை வடிவு சதாசிவம்
மானிடராக்கை வடிவு திருகூத்தே ”
ஆஹா அடடா எவ்வளவு ஆச்சர்யமானது இந்த மனித உடம்பு. உலகில் எத்தனையோ கோடி ஜனங்கள் இருந்தாலும் ஒருவருடைய உடம்பைப் போல் மற்றொன்று இல்லை, இதை சிவலிங்கம் என்று சொல்லலாம். ஆம். எண்ணற்ற உருவம், வடிவம் கொண்ட, தனி ஒரு உருவமில்லாத சிவலிங்கம். அது எல்லையற்ற வெட்டவெளி. பரவெளி. அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமான ஒளி மயம். பஞ்ச பூதங்களால் ஆன உடம்பு தான் சிவலிங்க கோட்பாடு. ஆனந்தத்தை உள்ளடக்கி சிவமாக வடிவம் கொண்டது. இந்த மனித உடம்பின் அசைவு தான், பரமேஸ்வரனின் ஆனந்த நடனம்
ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழிஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம்ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம்ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே”
ஓம்: ஒரு சொல். ஒரு உருவம், எண்ணற்ற பேதம். எல்லாவற்றிலும் மேலான சித்தி அருள்வது. வார்த்தைகளால் விவரிக்க ஒண்ணா ஓமேனும் பிரணவ மந்திரத்தை விடாமல் உச்சரித்து அதன் பெருமையை அடைவது தான் சித்தி.
மண் அளந்தான் மலரோன் முதல் தேவர்கள்
எண் அளந்து இன்னம் நினைக்கிலார் ஈசனை
விண் அளந்தான் தன்னை மேல் அளந்தார் இல்லை
கண் அளந்து எங்கும் கடந்து நின்றானே.
மூன்றடியில் மூவுலகும் அளந்த வாமன விஷ்ணு, தாமரை மலரில் அமர்ந்து சிருஷ்டிக்கும் பிரமன், மற்றும் எண்ணற்ற தேவர்கள் காலம் எல்லாம் தேடியும் அறியமுடியாத அனைத்தும் கடந்தவனாக இருப்பவன் ஈஸ்வரன். கண்ணில் கலந்தும் எங்கும் கடந்தும் விளங்குகின்ற சிவனை யாரறிய முடியும்? அவனை எண்ணத்தில் அகப்படுத்தி நினைப்பதில்லை. மண்ணுல கோரால் சிவனைக் கடந்து சென்று அறிய முடியவில்லை. ஞானமே எல்லை. மோனமே முற்றிலும் முதிர்ந்த மொழி.
ஆதியுமாய் அரனாய் உடலுள் நின்ற
வேதியுமாய் விரிந்து ஆர்ந்து இருந்தான் அருள்
சோதியுமாய்ச் சுருங்காதது ஓர் தன்மையுள்
நீதியுமாய் நித்தம் ஆகி நின்றானே.
பரமேஸ்வரனை பரஞ்சோதி என்கிறோம். ஞான ஒளி. தீப்பிழம்பு ஜோதி. பொன்னார் மேனியன் கண்ணைப் பறிக்கும் சக்தி ஒளி வீசுபவன். அவனே சிவன். உலகினைப் படைக்கும் வேதத்தை பராமரிக்கும் ப்ரமாவாகவும் , உடலைக் காத்து மாற்றம் செய்பவனாயும், காத்து ரக்ஷிக்கும் ராகவனாகவும் ஸம்ஹார மூர்த்தியாகவும். குவிதல் இல்லாத இயல்போடு பிரபஞ்சத்தில் மாயையால் கர்மாக்கள் நடைபெற காரணனாகவும் திருவருள் சோதியாயும், என்றும் அழியாத தன்மையோடு நிறைந்து உள்ளான். ஸாஸ்வதனான பரமேஸ்வரனை போற்றுவோம்.