சீதையின் சகோதரிகள் – நங்கநல்லூர் J K SIVAN
எனது கப்பல் கம்பெனி உத்யோக விஷயமாக குஜராத் கோவா என்று சில இடங்களுக்கு சென்றிருந்தபோது மார்மகோவாவில் ஒரு முறை தங்கியிருந்தேன். முழுக்க முழுக்க கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் ஊர் அது. போர்த்துகீசியர்கள் ஆக்கிரமிப்பின் போது பல மாறுதல்களை கோவா சந்தித்ததில் விளைவுகள் இன்னும் அடையாளமாக இருக்கிறது.
அங்கு மாண்டவி எனும் நதி. மிஹதேய் என்றும் பெயர். மார்மகோவா மாண்டவி நதிக்கரை நகரம். நீளமாக மஹாராஷ்ட்ரா, வழியாக கர்நாடகா வரை சென்று அரபிக்கடலில் கலக்கிறது.
மாண்டவி என்கிற பெயர் வேறு எங்கு கேள்விப்பட்டிருக்கிறேன்? ஓஹோ , அவள் ராஜா குஷத்வஜன், ராணி சந்திரபாகா தம்பதியின் சீமந்த புத்ரி அல்லவா? அவள் தானே ராமாயணத்தில் ராமனின் தம்பி பரதனின் மனைவி. மாண்டவியை மஹாலக்ஷ்மியின் கரத்தில் உள்ள சங்கின் அவதாரம் என்பார்கள்.
ஜனக மகாராஜாவின் மனைவி சுநயனா, அவள் மகள் தான் சீதா. சீதையின் தங்கை ஊர்மிளா. மாண்டவியும் ஸ்ரித கீர்த்தியும் ஜனக மஹாராஜா அரண்மனையில் சீதையோடு இருந்தார்கள். ஆகவே ராமனை சீதா கல்யாணம் பண்ணிக் கொண்ட போது லட்சுமணனுக்கு ஊர்மளா மனைவியாகிறாள்.
ஜனகராஜாவின் மனைவி ஸுநயனாவின் தங்கை சந்திரபாகா, குஷத்வஜன் மனைவி. சந்திரபாகாவும் ஒரு நதியின் பெயர். பாண்டுரங்கன் கதையில் வரும் புண்யநதி. சுநயனாவின் பெண் ஊர்மிளா. சந்திரபாகாவின் மகள் மாண்டவி.அவள் தங்கை ஸ்ருதகீர்த்தி.
மாண்டவியை பரதன் கல்யாணம் செய்து கொண்டபோது ஸ்ருத கீர்த்தியை சத்ருக்னன் திருமணம் செய்து கொள்கிறான்.
மாமியார் கைகேயி பரதனை ராஜாவாக்கி ராமன் காட்டுக்கு 14 வருஷம் செல்லவேண்டும் என்று ஆணையிட்டபோது மாண்டவி துடிக்கிறாள். அவளுக்கு பட்டத்து ராணியாக விருப்பமில்லை.தன் சகோதரிகள் எவரையும் நேரில் சந்திக்க அச்சமாக இருந்தது. ராமன் காட்டுக்கு சென்றபோது மற்றவர்கள் எல்லோரையும் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கிறாள்.பரதன் நந்திக்ராமத்தில் தங்கி வசித்தபோது கூடவே இருக்கிறாள். 14 வருஷம் ராமர் பாதுகையை வழிபட்டு ராம நாம ஜெபத்தில் காலத்தை கடத்துகிறாள். இளம் வயதிலேயே வானப்ரஸ்த வாழ்க்கை வாழ்ந்து தனது மாமியார்கள் கௌசல்யா, கைகேயி, சுமித்ரா ஆகியோருக்கு பணிவிடை செய்கிறாள். சீதை வனவாசத்துக்கு பிறகு அயோத்தி திரும்பி மீண்டும் வனவாசம் சென்று கடைசியில் ராமனோடு சேர்ந்த பிறகு, பூமிக்குள் மறைகிறாள் அல்லவா? சீதையின் மறைவுக்குப் பிறகு மாண்டவி ஸ்ருதகீர்த்தி ஊர்மிளா ஆகியோருடன் அக்னிப்ரவேசம் செய்து மறைகிறார்கள் என்று துளசி தாசர் சொல்கிறார். அவருக்கு தெரியாத ராமாயண விஷயமே கிடையாதே.
தெலுங்கானாவில் மேதக் எனப்படும் கிராமத்தில் ஸ்ரீ கல்யாண ராமச்சந்திர ஆலயத்தில் பரதன் மாண்டவி ஆகியோருக்கும் மூர்த்திகள் உள்ளது. இந்த ஒரே கோவிலில் தான் ராமரின் சகோதரிகளுக்கும் அவர்களுடைய மனைவிகளுக்கும் சிலைகள் சந்நிதிகள் இருக்கிறது என்பது அதிசயம்.
சத்ருக்னன் லவணாசுரனை கொன்று மதுராபுரி ராஜாவாகிறான். அவனுக்கு மந்திராலோசனை வழங்குவதில் அவள் நிபுணி.ராமனை காட்டுக்கு போகச்சொன்னால் நானும் போவேன் என்று சீதை 14 வருஷம் காட்டில் வசித்தாள். ராவணனால் சிறைப்பட்டு தவித்தாள். மாண்டவி தானும் மரவுரி தரித்து தானாகவே அரச வாழ்வை துறந்து நந்திக்ராமத்தில் பாரதநாடு வாழ்ந்தாள். லக்ஷ்மணனை அவளை விட்டு தானாகவே ராமனோடு 14 வருஷம் காட்டுக்கு சென்று விட்டான். அவன் மனைவிக்கு நல்லவேளை லக்ஷ்மணன் தன்னுடைய தூக்கத்தை தந்துவிட்டு போய்விட்டான். ஆகவே தனது தூக்கத்தோடு அவன் தூக்கத்தையும் சேர்த்து தூங்குமூஞ்சியாக 14 வருஷம் கழித்தாள் . சத்ருக்னன் ஒருவன் தான் அயோத்தியிலும் நந்திக்ராமத்திலுமாக ஷட்டில் சர்விஸ் பண்ணிக்கொண்டு காலம் கழித்தான். ஆகவே ஸ்ருதகீர்த்திக்கு வேலை சரியாக இருந்தது தான் என்று தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வால்மீகி இவர்களை பற்றி எல்லாம் ஒன்றும் சொல்லாமல் அவ்வளவு பெரிய ராமாயணத்தில் துளி இடம் கூட ஊர்மிளா, மாண்டவி, ஸ்ருத கீர்த்தி பற்றி ஒரு வரி கூட சொல்லாமல் அம்போ என்று விட்டு விட்டாரே என்று மாண்டவிக்கு வருத்தம் இருக்கலாம். எனக்கும் வருத்தமாக தான் இருக்கிறது. நல்லவேளை மாண்டவி நதியாக இன்றும் ஓடி அவள் பெயர் என்னைப்போல பலருக்கும் தெரிந்திருக்கிறதே.