அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN
சத்தி நாயனார்
இழுத்து வச்சு நாக்கை அறுப்பேன்
மேலே சொன்ன வாசகத்தை அம்மா அடிக்கடி யூஸ் பண்ணுவாள்.எதற்கு தெரியுமா, பெரியவாளை, மரியாதை இல்லாம பேசினா, எதிர்த்து பேசினா, வாத்யாரை குறை கூறினா…. ஆனால் அம்மாவுக்கு நாக்கை அறுக்க தெரியாது, தைரியமும் கிடையாது,கத்தி தொட்டாலே கை நடுங்கும்.
உண்மையில் அப்படி ஒருவர் இருந்தார். அவரைப் பற்றி தான் இன்று தெரிந்து கொள்ளப் போகிறோம். திருத் தொண்டத் தொகையில் சுந்தரர் அவரைப் பற்றி சொல்வது: ”கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்’, கழற்சத்தி வரிஞ் சையர் கோ னடியார்க்கு மடியேன்”
நான் சொல்லும் அந்த மனிதர் ரொம்ப ஸ்ட்ரிக்ட். யாராவது சிவனடியார்களைப் பற்றி தப்பாக பேசினால் அவர் இடையில் செருகி வைத்திருக்கும் கூரான குறட்டினாலோ, கத்தியாலோ, சொன்னவனுடைய நாக்கை வெளியே இழுத்தது சரக் என்று அறுத்து விடுவார். அவர் பக்தியையும் சக்தியையம் அறிந்து எல்லோரும் அவரை ”சத்தி நாயனார்” என்று அழைக்கத் தொடங்கி அவருடைய நிஜ பெயர் அவருக்கே கூட மறந்து போயிருக்கலாம் .
அந்த நாயனார் வேளாள குலத்தில் பிறந்து வளர்ந்த ஊர் வரிஞ்சையூர் இப்போது அதன் பெயர் இரிஞ்சியூர். வருஷா வருஷம் ஐப்பசி பூசத்தில் அவரது குரு பூஜை நடக்கிறது. வரிஞ்சையூரில் அவரைக் கவர்ந்த சிவாலயம் ஒன்று ரொம்ப பழமையானது இருக்கிறது. அந்த ஆலயத்தில் பரமேஸ்வரன் பெயர் வேதபுரீசுவரர். அம்பாள் வேதநாயகி. சத்தி நாயனாருக்கு சிவபக்தர்கள் மேல் அவ்வளவு பிரியம். அவர்களை அழைத்து வந்து உபசரித்து வணங்கி ஆசி வேண்டுவார்.
இந்த சிவ ஸ்தலம் நாகப்பட்டினம் – கீவளூர் (கீழ்வேளூர்) சாலையில் தேவூர் வழியாக வடுகஞ்சேரி பாதையில் சென்றால் ஆலயம் தென்படும். தேவூரிலிருந்து போவதானால் 3-கி.மீ.தூரம்.
சத்தி நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக சிவாலயங்களில் ரெண்டரை அடி உயரத்தில் நிற்கிறார். நாம் தான் பார்ப்பதில்லை. சிறந்த சிவ பக்தர். ஒரு விஷயம் முக்கியம். அவர் காது கேட்கும்படி யாரும் சிவனடியார்களைப்பற்றி தப்பாக பேசக்கூடாது. விஷயம் தெரியாமல் எவராவது சிவனையோ அவன் பக்தர்களையோ இகழ்ந்து பேசினால் அப்புறம் நாக்கு இருக்காது. புலி போல் பாய்ந்து அந்த ஆளை மடக்கி கீழே தள்ளி அவன் நாக்கை பலமாக வெளியே இழுத்து இடையில் தயாராக வைத்திருக்கும் கூரிய குறடாவ்வினாலோ, கத்தியாலோ சதக் என்று வெட்டி அறுத்து எறிந்து விடுவார். அப்புறம் என்ன? வாழ்நாள் முழுதும் ஊமையாக ‘ பே பே’ தான். கடைசியில் அவன் சிவன் திருவடிகளை அடைவதற்குள் எத்தனை நாக்குகள் காலியோ? சத்தி நாயனார் இப்போதிருந்தால் இப்போது பேசும் நாக்குகளை அறுக்க அவருக்கு நிச்சயம் நேரம் போதாது. முடியவே முடியாது.