பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
”ஒரு மாச சம்பளத்தை குடுப்பியா?”
மஹா பெரியவா எங்கே இருந்தாலும் அந்த இடம் பூலோக கைலாசம் என்று சொல்லலாம். இதில் யாருக்காவது சந்தேகம் உண்டா? அவர் ஒரு யுகபுருஷர். யாருக்கு என்ன கொடுப்பினையோ, யாருக்கு பாக்யமோ. மஹா பெரியவா கூப்பிட்டு எதிர்பாராத படிக்கு அதிசயங்கள் நிகழ்த்துவார். மஹா பெரியவா பக்தர்களே, இந்த பதிவில் அளிப்பது உங்களுக்கு ஒரு அருமையான விருந்து சமாசாரம்.
விடிகாலையில் சூர்யோதயத்துக்கு பல நாழிகை முன்பாகவே மஹா பெரியவாளுக்கு முழிப்பு வந்துடும். எழுந்துடுவா. அமைதியான சூழலில், எங்கும் பக்ஷி ஜாலங்கள், மனதிற்கும் உடலுக்கும் குளிர்ச்சியாக காற்று ரம்யமாக வீசும்.
அன்றைக்கும் அப்படி தான் பொழுது விடிந்தது. வழக்கம்போலவே பெரியவாளுடைய விஸ்வரூப தர்சனம் முடிந்து அவரவர்அனுஷ்டானங்களில் மூழ்கி இருந்தனர். இந்த மாதிரி சமயங்களிலே அணுக்கத் தொண்டர்களிடம் பெரியவா கொஞ்சம் விஸ்ராந்தி யாக பேசிக் கொள்வதும் உண்டு. அப்படி நடந்த ஒரு நிகழ்ச்சியை தான் இன்று சுருக்கமாக தருகிறேன்:
+++
“ஏண்டா……நம்மூர்ல எத்தனையோஆயிரக்கணக்கான கோவில் இருக்கு. ஆனா,அந்தக் கோவில்ல இருக்கற அர்ச்சகா எல்லாரும் மூணு வேளை நிம்மதியா சாப்டறாளோ?
”(யாருக்கு இப்படி ஒரு எண்ணம் மனதில் தோன்றும்?)
”க்ராமங்களிலே மதுரை வீரனுக்கு ஏதோ கெடச்சதை வெச்சு நைவேத்யம் பண்ற கிராமத்துப் பூஜாரில்லாம் சந்தோஷமா இருக்காளோ? ”
”அதே மாதிரி பெருமாளுக்கு பொங்கலையும் புளியோ தரையையும் நைவேத்யம் பண்ற பட்டாச்சார்யார்கள்
குடும்பங்கள் எல்லாம் வயத்துக்கு மூணு வேளை சாப்ட்டுண்டு இருக்காளோ?’
இதை யெல்லாம் யாராவ து அப்பப்போ விஜாரிக் கறேளோ?..”
பெரியவா இதுபோல் ஏதாவது விஷயத்தை பீடிகை யுடன் ஆரம்பித்தால், அதில் ஆயிரம் விஷயங்கள், அர்த்தங்கள் இருக்கும். எனவே எல்லாரும் “நிச்சயமாக தங்களுக்கு இதெல்லாம் தோன்றியதே இல்லை” என்ற உண்மையை ஒத்துக்கொள்வது போல், பேசாமல் முழித்தார்கள்.
”நான் ஏன் கேக்கறேன்னா, ஏதோ மூணு நாலு கோவில்
ல இருக்கற அர்ச்சகா மட்டும் நன்னா இருந்தா போறா
து. பகவானுக்கு சேவை பண்ற எல்லாரும் நன்னா இருக்கணும்னு யோசிங்கோ!..”
இந்த நேரத்தில் ராமலிங்க பட் என்ற குஜராத்தி ப்ராம் மணர் வந்து நமஸ்கரித்தார். பெரியவாளிடம் மிக மிக ஆழ்ந்த பக்தி கொண்டவர், ஆசாரம் அனுஷ்டானம் கடைப்பிடிப்பவர்கள் லிஸ்டில் இவருடைய பெயர் இருக்கும். சென்னை IIT யில் ப்ரொப ஸராக இருப்பவர். நமஸ்காரம் பண்ணியபின் மெதுவாக ஒரு ஓரமாக ஒதுங்கி நிற்கலாம் என்று திரும்பி நடந்தவரை, வலக் கை யின் நடு விரலையும்,கட்டை விரலையும் சேர்த்து போடும் “டொக்” கென்ற பெரியவாளுக்கே உரித்தான சொடக்கு சத்தம்போட்டார். அதைக் கேட்டு பட் மஹா பெரியவா பக்கம் திரும்பிப் பார்த்தார். பெரியவா ஆள் காட்டி விரலால் “இங்கே வா” என்று சைகை பண்ணி னார்.
விடியக்காலை தர்சனத்திலேயே ஒருமாதிரி ஆனந்த மயக்கத்தில் இருந்த ராமலிங்க பட், பெரியவா தன்னை அழைத்ததும் திக்கு முக்காடிப் போனார். பவ்யமாக அருகில் வந்து நின்றார்.
“ஒன்னோட ஒருமாச சம்பளத்த எனக்கு குடுப்பியா?”
குழந்தை மாதிரி கேட்டதும், நெக்குருகிப் போனார் பட். மோக்ஷத்தையே அனாயாஸமாக பிக்ஷையாகப் போடும் தெய்வம், ஒரு மாச சம்பளத்தை கேட்கிறதே! — அதிர்ந்து பேச நா எழாமல் நின்றார் பட் .
“என்ன. யோசிக்கறே போலருக்கு?…ஏதோ , இன்னிக்கு காலங்கார்த்தால ஒன்னை பார்த்தேனோல்லியோ அப்படி கேக்கணும்னு தோணித்து. கேட்டுட்டேன். குடுப்பியா?”
வேரறுந்த மரம் மாதிரி பாதத்தில் விழுந்தார் பட்.
“பெரியவா ஆக்ஞை! எங்கிட்டேர்ந்து என்ன வேணுன்னா லும் எடுத்துக்கலாம். இந்த ஜன்மால எனக்கு இதைத் தவிர வேறென்ன ஸந்தோஷம் நிலைக்கப் போறது?…”
பட் பையை துழாவினார். பர்ஸ் கையில் அகப்பட்டது. அதிலிருந்து உடனேயே நாலாயிரம் ரூபாயை பெரியவா ளின் திருவடியில் சமர்ப்பித்தார். அவரிடமிருந்து அன்று வந்த பணத்தைக் கொண்டு தான் “கச்சிமூதூர் அர்ச்ச கா டிரஸ்ட்” துவங்கப்பட்டு, வருமானம் குறைந்த அர்ச்ச க ர்கள்,பூஜாரிகளுக்கு இன்றுவரை உதவி கிடைத்துக் கொண்டு வருகிறது.
டிரஸ்ட் துவங்கியதும் வேதமூர்த்தி என்பவர் ” ஹிந்து” பேப்பரில் விரிவான செய்தியாக அது பற்றி எழுதியிருந் தார். பெரியவா அதைப் படித்துப் பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டார். அப்போது அங்கே வந்த ராகவன் என்ற ஆடிட்டரிடம் குழந்தை மாதிரி என்ன கேட்டார் தெரியுமா?
“இந்த ஹிந்து பேப்பர்ல வந்திருக்கே….இதை எனக்கு ஆயிரம் காபி ஜெராக்ஸ் மெட்ராஸ்ல எடுத்துத் தருவியா?…”
ராகவனுக்கு சந்தோஷம் தலைகால் புரியவில்லை. உடனே ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு வந்து குடுத்தார்.
“ஜெராக்ஸ் எடுத்ததுக்கு பில் எடுத்துண்டு வந்தியோ?….”
“இல்லே பெரியவா…..ஆத்துல இருக்கும்”
“மெட்ராஸ்ல IIT ல ராமலிங்க பட்…ன்னு ஒர்த்தன் இருப்பான்…அவன்கிட்ட அந்த பில்லைக் குடுத்துட்டு காசு வாங்கிக்கோ! ஜெராக்ஸ் போட்டுக் குடுத்ததே நீ பண்ணின பெரிய கைங்கர்யம்…”
சிரித்துக்கொண்டே ஆசிர்வதித்தார் பற்றற்ற பிறருக்கு உதவும் சந்யாஸியான பேசும் தெய்வம்.