நொண்டி பையன் கதை – நங்கநல்லூர் J K SIVAN
மகரிஷி ரமணர் சரித்திரம்.
மகரிஷி ரமணர் ஆரம்ப காலத்தில் விருபாக்ஷ குகையில் இருந்தார். அப்புறம் ஸ்கந்தாஸ்ரமம் உருவாகியது. ராமணருக்கு அது ரொம்ப பிடித்திருந்தது. திருவண்ணாமலையில் அப்படி ஒரு அமைதி கொஞ்சும் சுகமான ஒரு இடமா?
சின்ன குழந்தைபோல உற்சாகமாக இருந்தார். அடிக்கடி அங்கே வானிலை மாறும். கருமேகங்கள் திடீரென்று இருட்டடிக்கும். சுள்ளென்று மேகம் கலைந்து வெயில் அப்பளமாக பொறிக்கும் . குளிரும், வியர்க்கும். காற்று சில்லென்று வீசும். வெய்யில் உடலை துளைக்கும். விரூபாக்ஷ குகை, மற்றும் ஸ்காந்தாஸ்ரமத்தில் இருந்த போது நடந்த சம்பவங்களை பகவான் நன்றாக நினைவில் வைத்து இருந்ததால் அப்பப்போது யாரிடமாவது சின்னச் சின்ன பழைய சம்பவங்களை யெல்லாம் ஞாபகப் படுத்தி சொல்லும்போது கேட்பவர்கள் ஆனந்தமாக அதெல்லாம் தெரிந்து கொள் வார்கள். அப்படி யார் யாரோ கேட்டு எழுதியதை படித்து விட்டு தான் நான் உங்களுக்கும் அதை சொல்பவன்.
”இந்த இடத்துக்கு எப்படி ஸ்கந்தாஸ்ரமம் என்று பெயர் வந்தது தெரியுமா?” இந்த இடத்தை கவனித்து, இங்கே தான் ஆஸ்ரமம் ஒன்று அமையணும்னு தீர்மானித்தது கந்தசாமி என்கிற நீண்டநாள் பக்தர் தான். இதை நிர்மாணித்தது அவர் தான். அவர் முயற்சி தான் காரணம். எவ்வளவு உழைத்திருக்கிறார் தெரியுமா இதற்காக? இந்த மலைப்பகுதியில் ஒரு விசேஷம் என்ன தெரியுமா? தண்ணீர் வேண்டுமென்றால் எங்கிருந்தோ ஒரு சுனையில் நீர் ஊரும். நிறைய ஏராளமாக தண்ணீர் வரும். இதற்கு முன்னால் இங்கே தண்ணீர் தட்டுப்பாடு. இங்கே தண்ணீர் கிடைக்காது. கிடைக்குமென்ற வசதியே இல்லை. ஆனால் இப்போது இங்கே வேண்டும்போது தண்ணீர் கிடைக்கும். தேவையில்லாத போது நீர் காணாமல் போகும். கந்தசாமி காட்டில் மலையில் எங்கெல்லாமோ தேடி இந்த நீரூற்றை கண்டுபிடித்தவர். மற்ற சிஷ்யர்களோடு சேர்ந்து அந்த நீர் இந்த ஆஸ்ரமத்துக்கு வந்து உதவ ஏற்பாடுகள் செய்தவர். அதனால் தான் இந்த ஆஸ்ரமத் துக்கு கந்தசாமி ஞாபகத்தில் ஸ்கந்தாஸ்ரமம் என்று பெயர்.
ஒரு நாள் பெரும் புயல். ஜோ வென்று விடாமல் மழை. மறுநாள் காலை திருவண்ணாமலை நகர மக்களுக்கு தூரத்திலிருந்து பார்க்கும்போது ஏதோ ஒரு பெரிய சாலை ராவோடு ராவாக போட்டது போல் காட்சி தந்தது. அங்கே தான் பாத தீர்த்தம் என்ற குளம் உருவானது. சேறும் , மண்ணும் மலைப்பாறைகளும் பதினைந்து அடி உயரத்துக்கு தானாகவே எழும்பி அந்த குளத்தை மறைத்தது. அப்புறம் மற்ற பக்தர்களோடு சேர்ந்து அவர் அந்த குளத்தை மீட்டெடுத்தார்.
விருபாக்ஷ குகையில் இருந்தபோதும், ஸ்கந்தாஸ் ரமத்தில் இருந்தபோதும் சரி, மகரிஷி அங்கே நிறைய குரங்குகள் நடமாட்டம் இருந்ததை ஞாபகப்படுத்தி சொல்வார். விருபாக்ஷ குகையிலிருந்து கிளம்பிய பிறகு மகரிஷி கிட்டத்தட்ட ஆறு வருஷங்கள் ஸ்கந்தாஸ்ரமத்தில் இருந்தார். அவரோடு ஒரு குரங்கு குடும்பமே வாழ்ந்தது.
அந்த கூட்டத்தில் ஒரு குட்டி குரங்கு ரொம்ப சாமர்த்தி யசாலியாக தன்னை அடுத்த தலைவனாக காட்டிக் கொண்டது . குரங்கு தலைவனுக்கு அந்த குரங்கைப் பிடிக்கவில்லை. தலைவன் குரங்கு பொறாமையோடும் கோபத்தோடும் அந்த சின்ன குரங்கை கடித்து சண்டை போட்டு ஒரு பெரிய மரத்தின் உச்சியிலிருந்து கீழே விரூபாக்ஷ குகை அருகே தள்ளி விட்டது. கீழே விழுந்ததில் சின்ன குரங்குக்கு மயக்கமாகி அசைவு இல்லை. கால் ஊனமாகிவிட்டது. சரி அந்த குரங்கு செத்துவிட்டது என்று தலைவன் குரங்கும் மற்ற குரங்குகளும் அங்கிருந்து சென்றுவிட்டன. சின்ன குரங்குக்கு பிரஞை இருந்தது. அது சாகவில்லை. மெதுவாக சிறிது நேரம் கழிந்ததும் நொண்டி நொண்டி நகர்ந்து கொண்டே விருபாக்ஷ குகைக்குள் நுழைந்து உள்ளே வந்துவிட்டது. மகரிஷி ரமணர் அதைக் கண்டதும் விடுவாரா? காலில் கட்டு போட்டு அதற்கு மருந்துகள் தடவி, ஆகாரம் கொடுத்து பழையபடி நடக்க வைத்தார். புண்ணெல்லாம் ஆறி, கால் சரியாகி விட்டாலும் கால் ஊனம் நிரந்தரம்.
நொண்டி நொண்டிதான் அது நடந்தது. அதை ”நொண்டி பையா’ என்று தான் மகரிஷி அழைப்பார். கூப்பிட்டதும் ஓடிவரும். ஓடி ஆட ஆரம்பித்தது. அவரை
விட்டு பிரியவே பிரியாது. அவர் மடியில் வந்து உட்கார்ந் து கொள்ளும். ஆகாரம் கொடுப்பார். ஊட்டி விடுவார். சந்தோஷமாக சாப்பிடும். உணவை வீணாக் காது. அவருடைய நிழலாக எங்கே போனாலும் நொண்டிப்பையன் கூட போவான். ” கூடவே வராதே டா”. சொன்னால் கேட்கும். ஆஸ்ரமத்தில் எல்லோருக்கும் நொண்டிப் பையனை பிடிக்கும். அதுவும் அவர்களோடு பயமில்லாமல் பழகும்.
பழைய குரங்கு கூட்டம் ஒருநாள் விருபாக்ஷ குகைக்கு வந்துவிட்டது. எல்லோரும் பயந்துபோனார்கள். குரங்குகள் அட்டகாசம் பண்ணும். மகரிஷி மற்றவர்கள் எல்லோரையும் தாக்கி காயப்படுத்தும் என்று அஞ்சினார்கள். ”மகரிஷி நீங்கள் வேறே இடத்துக்கு இங்கிருந்து போய் விடுங்கள்” என்று வேண்டினார்கள்.
”பயப்படவேண்டாம். விரூபாக்ஷ குகையில் குரங்குகள் எவருக்கும் தீங்கு விளைவிக்காது.” என்றார் மகரிஷி.
நொண்டிப்பையன் அந்த குரங்குகள் கூட்டத்தை பார்த்ததும் ஓடிப்போய் மகரிஷி மடியில் அமர்ந்து கொண்டது. மற்ற குரங்குகளில் சில மெதுவாக நொண்டிப்பையன் அருகே வந்து அதன் காலில் இருந்த கட்டைப் பார்த்தன. அந்த குரங்குகளிடம் ” இதற்கு காலில் அடிபட்டதால் மருந்து போட்டு கட்டு போட்டிருக் கிறது” என்று மகரிஷி சொன்னார். நொண்டிப் பையனை தாக்கியதற்கு அந்த தலைவன் குரங்கு வருந்தியது போல் இருக்கிறது. செல்லமாக அதைப் பார்த்து வா எங்களோடு என்று கத்தின. நொண்டிப் பையனை இழுத்துக் கொண்டு தங்களோடு மீண்டும் சேர்ந்துகொள்ள முயன்றன. ஆனால் நொண்டிப் பையன் அவற்றோடு செல்ல விரும்பவில்லை. மகரிஷி யை விட்டு வரமாட்டேன் என்று தீர்மானமாக செயலில் காட்டியது. அது மஹரிஷியின் முகத்தை வாத்சல்யத் தோடு பார்த்தது.
”டேய், நொண்டிபையா, உன் நண்பர்கள் கூட்டம் உன்னை அழைத்துக் கொண்டு செல்ல வந்திருக்கிறது. நீ ஒரு நாள் தலைவனாகிவிடலாம். அப்போது எங்களை எல்லாம் மறந்துவிடாதே. போ, போய்விட்டு வாடா. நல்ல பையனாக இரு” என்று அதன் முதுகில் தடவி தட்டிக் கொடுத்து அனுப்பினார்”.
மனிதர்களை போலவே குரங்குகளுக்கும் நண்பர்கள் உறவு எல்லாம் இருக்கிறது போல் தோன்றுகிறது. நேசம் பாசம் எல்லாம் அங்கேயும் உண்டு.
அப்புறம் விரூபாக்ஷ குகையிலிருந்து பகவான் ஸ்கந் தாஸ்ரமம் வந்தபோதும் கூட நொண்டிப்பையன் அடிக்கடி வந்து மகரிஷியை பார்க்கும். சும்மா வராது.தனது கூட்டத்தோடு வரும்.
ஒருநாள் மஹரிஷியின் அம்மா அழகம்மாள், ஒரு தட்டில் உணவை வைத்து நொண்டிப் பையனுக்கு கொடுத்தாள் . அது தொடவே இல்லை. மகரிஷி வரும் வரை காத்திருந்து அவர் தட்டிலிருந்து கொடுத்ததை ஆசையோடு வாங்கி சாப்பிட்டது. கீழே சோற்றுப் பருக்கைகளை எல்லாம் பொறுக்கி சாப்பிட்டு விடும். சுத்தமாக இடத்தை வைத்துக் கொள்ளும். அதன் சுத்தம் சுகாதாரம் மகரிஷிக்கு ரொம்ப பிடிக்கும்.
ஒரு நாள் மகரிஷி இல்லாதபோது குரங்குகள் கூட்டம் வந்து மரத்திலிருந்து கிளைகளை இலைகளை ஒடித்து, கிள்ளி கீழே போட்டு, செடி கொடிகளை பிய்த்து அட்டகாசம் பண்ணி விட்டு சென்றன. பகவான் வந்ததும் ஏன் அவை அப்படி செய்தன என்று யோசித்தார்.
மறுநாள் மகரிஷி இருக்கும் சமயத்தில் குரங்குகள் கூட்டம் மறுபடியும் வந்தது. நொண்டிப்பையன் ஒரு பெரிய மரத்தின் உச்சாணி கிளைக்கு சென்று அதை உலுக்கியது . பிறகு கீழே இறங்கியது. வழக்கம்போல் மகரிஷி ஒரு தட்டில் உணவை அதற்கு கொடுக்கச் சொல்லி ஒரு தொண்டரிடம் சொன்னார். அந்த தொண்டர் தட்டை நீட்டியபோது நொண்டிப்பையன் அதை தொடவில்லை. அந்த தொண்டரை மீதி மூன்று குரங்குகள் இருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றது. அவைகளோடு சேர்ந்து சாப்பிட்டது. அந்த மூன்று குரங்குகளும் பெண் குரங்குகள். நொண்டிப் பையன் இப்போதுகுரங்குகள் கூட்ட தலைவன். அந்த மூன்று குரங்குகள் அதன் பட்ட மகிஷிகள். அவை அதற்கு முன் இருந்த தலைவனின் ராணிகள். அந்த தலைவன் இப்போது பதவி இழந்த குரங்கு. நொண்டிப்பையன் தான் தலைவன். ராஜா.
அப்புறம் மகரிஷி விளக்கி இதெல்லாம் விளக்கி சொன்னார்: அவருக்கு மிருகங்கள் பறவைகள் எண்ணம், பாஷை எல்லாம் தெரியுமே.
முதல் நாள் ராணிகளோடு வந்த நொண்டிப் பையன்
தனது ராஜா பாட்டாபிஷேகத்தை அவர் பார்க்க அவற்றை அழைத்து வந்தான். அவர் இல்லை என்பதால் படபடப்பு. ஏமாற்றம். செடிகளை நாசம் பண்ணி விட்டு மறுநாள் வந்திருக்கி றான். நொண்டிப் பையன் ராஜாவுக்கு ஆறு இளவரசர்கள் பிறந்தனர். அந்த ஆறு குழந்தை களோடு நொண்டிப் பையன் மகரிஷி தட்டிலிருந்து உணவு வாங்கி சாப்பிடுவான்.
ஒவ்வொரு சமயம் அவற்றுக்குள் சண்டை ஆக்ரோஷ மாக வரும். அப்போது மகரிஷியை கூட அடித்து காயப்படுத்தும். ஆனால் மகரிஷி அது குரங்கின் தன்மை என்று சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொள்வார்.
ஒரு நாள் சூடான பால் ஒரு தட்டில் கொண்டுவந்து ஆஸ்ரம தொண்டர் கொடுத்தபோது மகரிஷி அது சூடாக இருந்த தால் வாயருகே வைத்து ஊதி ஆற்றிக் கொண்டிருந்தார். குட்டி குரங்குகள் அவர் தங்களுக்கு சேர வேண்டிய பாலை குடிக்கிறார் என்று அவரை தாக்கின. நொண்டிப்பையன் அவற்றை அடக்கி மஹரிஷியையே பார்த்துக்கொண்டிருந்தது. சூடாறியதும் அவர் பாலை தட்டில் அவற்றுக்குக் கொடுத்தபோது நொண்டிப்பையன் வாலை யாட்டி நன்றியோடு அவர் கழுத்தை கட்டிக்கொண்டது.