SRIMAD BHAGAVATHAM 10TH CANTO – J K SIVAN

ஸ்ரீமத்  பாகவதம் –  10வது காண்டம்  –  நங்கநல்லூர்  J K SIVAN
சகடாசுரன் விஜயம்
”சுவாமி,  பச்சிளங்குழந்தை கிருஷ்ணனைக்  கொல்ல  ஒரு  ராக்ஷஸி வந்தாள் . எல்லோரும் அவள்  அழகிய பெண்ணாக உருவம் கொண்டு குழந்தையை  வாரி மடியில் வைத்து விஷம் தடவிய மார்பகத்தால் அவனைப்  பாலூட்டி கொல்ல  வந்ததை அறியவில்லை என்று நீங்கள் சொன்னபோது என் கண்ணீரை நிறுத்தமுடியவில்லை சுவாமி”.
”பரீக்ஷித், ஸ்ரீமந்  நாராயணன் கிருஷ்ணனாக அவதாரம் எடுத்ததே பூமியில் ராக்ஷஸர்கள் பாரத்தைக் குறைக்கத்தான். பிறந்தது முதல் தனது கடமையைத் துவங்கிவிட்டான் கிருஷ்ணன். அவன் அவதாரத்தில் முதலில் பலியானவள் பூதகி.” அது மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ ராக்ஷஸர்கள் அவளைத் தொடர்ந்து கிருஷ்ணனைக் கொல்லவந்ததை இனி சொல்கிறேன் கேள்”  என்கிறார்  சுகப்பிரம்ம ரிஷி.   பரீக்ஷித் இன்னும் சில நாட்களில் மரணத்தைத் தழுவப்போகிறோம் என்பதையே மறந்து போய் ஆனந்தமாக  கிருஷ்ண சரித்திரம் கேட்டவன்.
கிருஷ்ணன் மூன்று மாத குழந்தையாக  கோகுலத்தில் வளர்ந்து வந்தான்.  பூதனை வந்த பிறகு  நந்தகோப மஹாராஜா கெடுபிடி அதிகம் போட்டு விட்டார். யாரும் உத்தரவின்றி  உள்ளே வருவதோ,குழந்தையைத் தொடுவதையோ அனுமதிக்க வில்லை.  யசோதை கண் குத்திக் பாம்பாக கிருஷ்ணனை பார்த்து பார்த்து பராமரித்தாள் .  கிருஷ்ணன் குப்புறத்திக்கொண்டு நீந்த ஆரம்பித்துவிட்டான்.  அதை ஒரு விழாவாக கொண்டாடி எல்லா நண்பர்கள் கோபியர்கள் குடும்பத்தை எல்லாம் அழைத்தார்கள்.  கிருஷ்ணன் அழகில் மயங்காத கோபியர் கிடையாது கோகுலத்தில். அவன் பெருமை எங்கும் பரவ ஆரம்பித்தது.  சிறு குழந்தைகள் எப்போதும் அவனோடு விளையாட வந்தன.  வீட்டில்  நல்ல கூட்டம் எல்லோரும் கிருஷ்ணனைப் பார்த்து கொஞ்சி பரிசளித்தனர். கிருஷ்ணனுக்கு களைப்பு. தூக்கம் வந்துவிட்டது. கண் ஷோக்கா ஆரம்பித்தது. யசோதை கிருஷ்ணனை சற்று நேரம் தூங்க வைக்கலாம் என்று எண்ணினாள் . பெரிய அரண்மனை. பல கட்டுகள் கொண்டது.  ஒரு பெரிய அறையில்  வெண்ணை பால் தயிர் குடங்களை வைத்து தள்ளிக்கொண்டு போகும் பழைய வண்டி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனடியில் படுக்கை விரித்து அமைதியாக  கிருஷ்ணனை தூங்க பண்ணினாள்.  கிருஷ்ணன் தூங்கினானா? அங்கு தான் ஒரு விபரீதம் நடக்கப்போகிறது.  கிருஷ்ணன் குஞ்சு கால்களை கைகளை உதைத்துக்கொண்டு  கண்விழித்து படுத்துக  கொண்டி ருந்தான்.  கம்சன்  அனுப்பிய  ஒரு  ராக்ஷஸன் அந்த வீட்டில் மாயமாக புகுந்து எவரும் அறியாமல் கிருஷ்ணனை கண்காணித்துக் கொண்டிருந்தவன்  கிருஷ்ணன் தனியாக ஒரு அறையில் வண்டிக்கடியில்  படுத்ததும் ரொம்ப சௌகர்யமாக போய்விட்டது அவனைக் கொல்ல  என்று திட்டம் போட்டான். அந்த வண்டியின் பெரிய சக்ரங்களுக்குள் புகுந்து கொண்டு அந்த சக்ரத்தை அசைத்து வேகமாக கிருஷ்ணனை அரைத்துக் கொன்றுவிட  பிளான் போட்டான்.  வேகமாக தன்னருகே சக்ரம் நகர்வதைக் கண்ட கிருஷ்ணன் க்ஷண நேரத்தில்  ஆபத்து எந்த ரூபத்தில் தன்னை நோக்கி வருகிறது என்பதை சட்டென்று புரிந்து கொண்டு தயாராகிவிட்டான். அவன் பிறந்ததே இது போன்ற  சந்தர்ப்பங்களை எதிர்பார்த்து ராக்ஷஸர்களை வெல்லவும் கொல்லவும்  தானே.  அருகே நெருங்கிய சக்ரத்தை காலால் உதைத்தான். அவனது தெய்வீக பலத்தில் சக்ரம் நொறுங்கியது.  வண்டியின் மேல் வைத்திருந்த பால் தயிர் குடங்கள் கிருஷ்ணனுக்கு அபிஷேகமாயிற்று.  ஹா என்று கதறலோடு எலும்புகள் முறிந்து சகடாசுரன் எனும் அந்த ராக்ஷஸன் மூச்சிழந்து உயிர் விட்டான்.
சத்தம் கேட்ட குழந்தைகள் கோபியர்கள் ஓடிவந்து பார்த்தால்  கிருஷ்ணன் மேல் தயிர் பால் வெண்ணை அபிஷேகம், ஒன்றும்  அறியாத குழந்தையாக  சிரித்துக்கொண்டிருந்தான்.அருகே  பெரிய கோர  மான் உருவத்தோடு ஒரு ராக்ஷஸன் உடைந்த வண்டியின் சக்ரங்களிடையே இறந்து கிடந்தான்.    ”ஹா ” என்று கத்திக்கொண்டே கிருஷ்ணனை வாரி எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டாள்   யசோதை.  அதிர்ச்சியில் பேச்சு வரவில்லை. அனைவரும் திகைத்து நின்றனர். எப்படி ஒரு ராக்ஷஸன் அத்தனைபேருக்கும் தெரியாமல்  குழந்தை கிருஷ்ணன் அருகே வந்திருக்கிறான். எப்படி சக்ரம் நொறுங்கி அவனைக் கொன்றிருக்கிறது என்று தான் நினைத்தார்களே  தவிர  எல்லாம் கிருஷ்ணன் வேலை என்று அவர்களால் உணர முடியவில்லை.   இறைவா குழந்தையைக் காப்பாற்றினாயே என்று வேண்டினார்கள். அந்த இறைவன் தன்னை அவர்கள் எங்கோ தேடுவதை நன்றி தெரிவிப்பதை ரசித்துக்கொண்டு   பொக்கை வாய் திறந்து சிரித்துக் கொண்டிருந்தான்.  வேத பிராமணர்கள்  தெய்வங்களை வேண்டி மந்திரங்கள் உச்சாடனம் பண்ணி அவனுக்கு தெய்வங்கள் ரக்ஷிக்க  வாழ்த்துக்கள் சொன்னார்கள். அத்தனை மந்திரங்களையும்  வாழ்த்துக்களையும்   சப்தமின்றி கிருஷ்ணன் ஏற்றுக்கொண்டு மகிழ்ந்தான்.
” பரீக்ஷித்,  உனக்கு இன்னொரு  ஆச்சர்யமான சம்பவத்தையும் சொல்கிறேன் கேள். அது இன்னொரு ராக்ஷஸன் பற்றியது என்று நிறுத்தினார்  சுகப்பிரம்ம ரிஷி.
மீண்டும் அவர் தொடர பரிக்ஷித்தோடு நாமும்   அடுத்த பதிவுக்காக  காத்திருப்போம். 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *