ஸ்ரீமத் பாகவதம் – 10வது காண்டம்.
நங்கநல்லூர் J K SIVAN
தாயாக வந்த பேய்
”ஸ்வாமி , கோகுலத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் எப்படி வளர்ந்தான் என்று சொல்லுங்கள்””பரீக்ஷித், அதைப் பற்றி தான் சொல்லப்போகிறேன் இன்று.” என்கிறார் சுகப்பிரம்ம மஹரிஷி .வசுதேவரிடமிருந்து விடைபெற்று கோகுலத்துக்கு மதுராவிலிருந்து நடந்த நந்தகோப மகாராஜாவுக்கு மனசு சரியில்லை. ஏன் வசுதேவர் என்னை உடனே வீடு திரும்புங்கள் என்று சொன்னார். ஏதேதோ சில சம்பவங்கள் நடக்கிறது என்கிறாரே. ஒன்றுமே சரியாக புலப்படவில்லையே என்று மனதில் கொஞ்சம் சஞ்சலத்தோடு தான் நந்தகோபர் வந்து கொண்டிருந்தார்.நந்தகோபர் கோகுலம் திரும்பும் நேரத்தில் அங்கே ஒரு ராக்ஷஸி அலைந்து கொண்டிருந்தாள். அவள் பெயர் பூதனை. பூதகி என்றும் சொல்வார்கள். கம்சனால் ஏவப்பட்டு எங்கெல்லாம் சிறு குழந்தைகள் பத்து நாட்களுக்கு முன் பிறந்தனவோ அவற்றை கொல்லும் வேளையில் அவளும் ஈடுபட்டிருந்தவள். கோகுலத்தில் எங்கே யார் வீட்டில் புதிதாக குழந்தைகள் பிறந்தவை என்று விசாரித்துக் கொண்டிருந்தாள்.கோகுலத்தில் பகவானே தோன்றி ரக்ஷிக்க பொறுப்பேற்றுக் கொண்ட இடத்தில் அவனுக்கு என்ன தொல்லை நேரும்? யாரால் தொல்லைதர முடியும்?பூதனை நினைத்த இடத்துக்கு பறந்து போகக்கூடியவள். நினைத்த உருவத்தை அடைய முடிந்தவள். ஒரு அழகிய பெண்ணாக உருமாறி கோகுலத்தில் நந்தகோபர் வீட்டுக்கு வந்தாள். மலர்களை அணிந்துகொண்டு அழகிய இளம் பெண்ணாக வந்தாள் . கோகுலத்தில் நந்தகோப மஹாராஜா இல்லத்தில் அநேகர் வந்து போய் கொண்டிருப்பதை பார்த்தாள் . அங்கே ஒரு சிறு குழந்தை பிறந்ததை அறிந்தாள். மற்றவர்களோடு தானும் எவர் அனுமதியும் இன்றி வீட்டுக்குள் நுழைந்தாள் . உள்ளே ஒரு சிறு தொட்டிலில் கிருஷ்ணன் படுத்துக் கொண்டிருந்தான். அவள் அவனைக் கொல்ல மனதில் திட்டமிடும்போது அவளுக்கு என்ன தெரியாது என்றால் அவளைப்போன்ற ராக்ஷஸ ராக்ஷஸிகளைக் கொல்லத்தான் அவன் வந்திருக்கிறான் என்ற விஷயம் தான். சிறு குழந்தை கிருஷ்ணன் கண்களை அகலமாக திறந்துகொண்டு வந்தவர்கள் முகத்தை எல்லாம் பார்த்தவனுக்கு போதனையின் முகத்தில் அவள் யார், எதற்கு வந்திருக்கிறாள் என்று புரிந்துவிட்டது. பொக்கைவாய் திறந்து புன்னகைத்தான். அருகே வா என்று சிறிய கைககளை ஆட்டினான். அவனை வாரி அணைத்து எடுத்துக் கொண்டாள் பூதனை. மடியில் போட்டுக்கொண்டாள். ஒருகணம் கண்களை மூடிக்கொண்டான் கிருஷ்ணன். தூங்குகிறான் என்று நினைத்தாள் பூதனை. ”பாவம் இவள் உயிர் இன்று போகப்போகிறது என்று பரிதாபத்தில் கண்ணை மூடிக்கொண்டிருந்தான். கொடிய நாகத்தை கயிறு என்று எண்ணிவிட்டாள் பூதனை. யார் இந்த அழகிய இளம் பெண் என்று யசோதையும் ரோகிணியும் வியந்து கொண்டிருக்க பூதனையின் மடியில் கிருஷ்ணன் . கிருஷ்ணன் சிணுங்கினான். அவனுக்கு பசி நான் பாலூட்டலாமா, நானும் ஒரு தாய், எனக்கும் ஒரு சிறு குழந்தை இருக்கிறது என்று அவர்களை நம்ப வைத்தாள் பூதனை. பூதனை குழந்தைகளைக் கொல்வதில் கெட்டிக்காரி. அன்று அவள் போட்ட திட்டம் வினோதமானது. தனது மார்பகத்தில் கொடிய விஷயத்தை தடவிக்கொண்டு வந்திருந்தாள்.கிருஷ்ணனுக்கு பால் ஊட்டுவது போல் விஷத்தை அவன் வாயில் செலுத்த அவளுக்கு எண்ணம். ஆர்வத்தோடு,ஆவலாக தான் வந்த காரியத்தை சுலபத்தில் முடிக்க பூதனை தனது மார்பகத்தை கிருஷ்ணன் வாயில் வைத்து அவன் உயிரைக் கொல்ல முயன்றபோது கிருஷ்ணன் அவர் மார்பகங்களை அழுத்திப்பிடித்து அவள் மூச்சு திணற வைத்தான். அவள் மார்பகத்திலிருந்து விஷத்தை அல்ல, அவள் உயிரையே உறிஞ்சிக்கொண்டிருந்தான். அவன் பிடி இறுக ஆரம்பித்தது.
” ஐயோ என்னை விட்டுவிடு” என்று பூதனை அலறினாள். என்னால் வலி தாங்க முடியவில்லை, மூச்சு விடமுடியவில்லை, திணறுகிறது என்று அலறினாள். அவன் விடுவதாக இல்லை. பூதனையின் ராக்ஷஸ குரல், அலறல் அண்டமெங்கும் அதிரவைத்தது. ஆவென்று வாயை பெரிதாக திறந்து ஓலமிட்டு பூதனை தடால் என்று கீழே சாய்ந்தாள். கைகள் கால்கள் விரிந்து கிடக்க அவள் அழகிய பெண்ணுருவம் மறைந்து கோரமான ராக்ஷஸியாக பூதனை அங்கே கிடந்தாள்.
”பரிக்ஷித், மிகப்பெரிய ராக்ஷஸ உருவத்தோடு பூதனை உயிரற்ற பிணமாக அங்கே பூதனை தரையில் கிடந்தாள். ராக்ஷஸ முகம், கோரைப்பற்கள், கூரான நகங்கள், அகண்ட நாசித்துவாரங்கள், ஆவென்று விரிந்த கோரமான பெரிய வாய். நிலைத்து குத்திட்ட கண்கள். அங்கிருந்த அத்தனை கோபியர்கள் கோபர்கள் இதைக் கண்டு அலறினார்கள். அவள் மார்பகத்தின் மீது கிருஷ்ணன் சிறு குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தான். யசோதை வெறிபிடித்தவள் போல் பயத்தோடு கிருஷ்ணனை வாரி எடுத்துத் தூக்கிக்கொண்டு உள்ளே ஓடினாள். ரோகிணியும் மற்ற கோபியரும் நடுங்கி கொண்டே அவள் பின் ஓடினார்கள். பசு கோமியத்தால் கிருஷ்ணனுக்கு புண்யாவசனம் செய்தார்கள். உடல் முழுதும் புனித ஜலம் தெளித்து திலகமிட்டு புது வஸ்த்ரம் அணிவித்தார்கள். வேத ரக்ஷை மந்த்ரங்கள் உச்சரிக்கப்பட்டன .கிருஷ்ணனைக் காப்பாற்ற சகல தெய்வங்களையும் வேண்டினார்கள். கிருஷ்ணனுக்கு யசோதை பாலூட்டி அவனை தூங்கப் பண்ணினாள்.இந்த நேரத்தில் தான் நந்தகோப மஹாராஜா கோகுலத்துக்கு திரும்பிவந்து அவரது அரணமனைக்குள் நுழைந்தார். மிக பெரிய ராக்ஷஸி ஒருவள் பிணமாக அங்கே கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கொண்டார். நடந்ததை எல்லாம் அறிந்து நடுங்கினார். வசுதேவர் சொன்ன வாக்கு நினைவுக்கு வந்தது. மற்ற கோபர்கள் இதற்குள் ஒன்று சேர்ந்துவிட்டார்கள். எல்லோரும் பூதகியின் ராக்ஷஸ உடலை கோடாலி வாளினால் துண்டாக்கி அப்புறப்படுத்தினார்கள். ஊருக்கு வெளியே யமுனை நதிக்கரையில் நிறைய மரக்கட்டைகள் அடுக்கி பூதனையின் உடலுக்கு எரியூட்டினார்கள். கிருஷ்ணனுக்கு பாலூட்டிய ஒரே காரணத்தால் போதனையின் பாபங்கள் விலகி ,அவள் விண்ணுல கெய்தினாள்.
நந்தகோபர் ஓடி வந்து கிருஷ்ணனை வாரி மடியில் வைத்து ”பகவானே, என் குழந்தைக்கு உயிர்ப்பிச்சை அளித்து காப்பாற்றினாயே” என்று ஆனந்த, நன்றிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு பகவான் தான் தனது மடியில் படுத்து தனது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டவன் என்று தெரியவில்லை.
பரீக்ஷித், எவனொருவன் கோவிந்தா என்று கிருஷ்ணனை வேண்டுகிறானோ, அவனுக்கு ஒரு குறைவுமில்லை என்று சுகப்ரம்மம் சொல்லிக் கொண் டிருந்தபோது இரு கரங்களையும் கூப்பி அவன் கண்மூடி வணங்கிக்கொண்டிருந்தான்.