ரமண மஹரிஷி – நங்கநல்லூர் J K SIVAN
1879 டிசம்பர் மாதம் 30ம் தேதி ஆருத்திரா தரிசனம் திருநாள். அன்று பிறந்த பையன் வெங்கட்ராமன். அப்பா சுந்தரம் ஐயர் திருச்சுழிக்காரர். மதுரைக்கு தென் கிழக்கில் 30 மைல் தூரத்தில் ஒரு க்ராமம். வக்கீல் உத்யோகம். அம்மா அழகம்மாள். திருச்சுழியில் ஆரம்ப பள்ளி முடித்துவிட்டு திண்டுக்கல்லில் ஆறாவது வகுப்பு சேர்ந்தான். அப்புறம் மதுரையில் மேல் வகுப்பு.படிப்பில் ரொம்ப கெட்டிக்காரன் ஒன்றும் இல்லை வெங்கட்ராமன். விளையாட்டில் புத்தி அதிகம் சென்றது. பலசாலி பையன். பதினாறு வயது வரை ஒன்றும் வித்யாசமாக தெரியவில்லை. வீட்டுக்கு யாரோ ஒரு சொந்தக்காரர் ஒருவர் ஒருநாள் வந்தார். அவர் திருவநம்மலைக்கு தான் போய்வந்ததைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். வெங்கட்ராமன் அவர் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தான். ”அருணாசலம், திருவண்ணாமலை” என்று அவர் சொன்ன வார்த்தைகள் அவனுக்குள் ஒரு அதிர்வு உண்டாக்கியது. அது எங்கே இருக்கிறது என்று கூட அவனுக்கு தெரியாது. அதன்மேல் ஒரு தாகம், அங்கே போகவேண்டும் என்ற வேகம் உள்ளே அதிகரித்தது. உள்ளே அந்த வார்த்தைகள் எதிரொலித்துக்கொண்டே இருந்தது. ஏன், எதற்கு என்ற கேள்விகளுக்கு சில சமயம் அல்ல பல சமயம் நமக்கு அர்த்தம் கிடைப்பதில்லை. சில நாட்கள் சென்றபிறகு வெங்கட்ராமனுக்கு பெரிய புராணம் புத்தகம் ஒன்று கிடைத்தது. அதில் அறுபத்து மூன்று சிவனடியார்கள் புராணம் படிக்கும்போது அவனுக்கு ரொம்ப பிடித்தது. தம்பி ஏன் இப்படி கொஞ்சநாளாக மாறிவிட்டான் என்று வெங்கட்ராமனின் அண்ணாவுக்கு ஆச்சர்யம். ”பாடம் படி டா” என்று திட்டுவார்.
1896ம் வருஷம் ஆகஸ்ட் 29i வெங்கட்ராமன் 12வது படிக்கும் சமயம். ஏதோ கோபத்தில் அண்ணா ”எதுக்கு இந்த மாதிரி ஜடமா இருக்கிற உனக்கு பள்ளிக்கூடம், படிப்பு, புஸ்தகம், வீடு எல்லாம்?” என்று கத்தினார். நன்றாக காய்ந்து உலர்ந்திருந்த பஞ்சு ‘கப்’ பென்று தீப்பிடித்துக் கொண்டது.ஆம் , வாஸ்தவம். இதெல்லாம் எனக்கு எதற்கு.? அருணாச்சலத்துக்கு போகவேண்டும் என்ற உந்துதல் உள்ளேஇருந்து கிளம்பி துரத்தியது.
”எனக்கு இன்னிக்கு ஸ்பெஷல் க்ளாஸ் இருக்கு ஸ்கூலுக்கு போறேன்” என்று அண்ணாவிடம் சொன்னான்.
‘சரி போ, அப்படியே கீழே போகும்போது உண்டியல் டப்பாவில் இருந்து ஐந்து ரூபா எடுத்துக் கொண்டு போய் என்னுடைய காலேஜ் பீஸ் கட்டிடு”
ஆஹா என்ன ஒரு அருமையான சந்தர்ப்பம். பகவானாக பார்த்து நமக்கு அருணாசலம் போக பணம் தருகிறானே என்று வெங்கட்ராமன் நினைத்தான். திண்டிவனம் போனால் திருவண்ணாமலை வரும் என்று நினைத்து அதற்கு மூன்று ரூபாய் போதும் என்று மீதி ரெண்டு ரூபாயை டப்பாவில் போட்டுவிட்டான். நேராக விடுவிடுவென்று மதுரை ரயில் நிலையம் சென்றான். ஒரு துண்டு காகிதத்தில் ”என் அப்பா அழைக்கிறார். அவர் சொல்படி இது இந்த இடத்தை விட்டு செல்கிறது. நல்லதுக்காக தான் செல்கிறேன். யாரும் வருத்தப்பட வேண்டாம். என்னை தேட பணம் செலவு செய்ய வேண்டாம். மீதி ரெண்டு ரூபாய் இதோடு இருக்கிறது” என்று எழுதி வைத்து விட்டு தான் போனான். ரயில் ரெண்டு மணி நேரம் அன்று லேட்டாக தான் வந்ததால் அவன் சென்ற நேரம் ரயில் வந்தது. டடங டடங என்று ஜிகுபுகு வண்டி புறப்பட்டது. வண்டியில் அவன் ரகுல் ஒரு முஸ்லீம் தாடிக்காரர்
. ”எங்கே தம்பி போறே?
””திண்டிவனம்”
”அங்கே யார் இருக்காங்க?”
”அருணாச்சலம், அண்ணாமலைக்கு போறேன்’
”அடேடே இது போவாது. விழுப்புரம் காட்பாடி லைனிலே ஒரு வண்டி போகும் அது தான் திருவண்ணாமலை போவும்” என்கிறார் முஸ்லீம்.
அப்புறம் அந்த முஸ்லீம் கண்ணில் படவே இல்லை. முஸ்லீம் சொன்னபடியே விழுப்புரத்தில் இறங்கி அறையணிநல்லூர் (திருக்கோவலூர்) சென்றான். அங்கே அதுல்யநாதர் சிவாலயத்துக்கு சென்றான். மண்டபத்தில் தியானம் செய்ய உட்கார்ந்தான். அரை இருட்டு. ஒரு தீபத்தின் ஒளி மட்டுமே அங்கே கொஞ்சம் வெளிச்சம் காட்டியது.தியானத்தில் ஈடுபடட்டவனுக்கு பளிச்சென்று பிரகாசம் தெரிந்தது. உள்ளே கர்ப்ப கிரகத்தில் பரமேஸ்வரன். அங்கே தான் திருஞான சம்பந்தருக்கு அருணாச்சலேஸ்வரர் காட்சி கொடுத்த இடம்.
1896 செப்டம்பர் மாதம் 1ம் தேதி. வெங்கட்ராமன் அருணாச்சலம் அடைந்தான். நேராக அண்ணாமலையார் தரிசனம் பெற உள்ளே நுழைந்தான். கதவு திறந்திருந்தது. ”அப்பா நீ சொல்படி நான் வந்துட்டேன்.இனிமே எல்லாத்துக்கும் நீ தான் ” உடம்பு முழுதும் திகுதிகுவென்று நெருப்பு மாதிரி சுட்டது இத்தனை நாள். அது இப்போது குளிர்ந்து விட்டது. உள்ளே அமர்ந்து தியானம் செய்தான். வெளியே யாரோ ஒரு நாவிதர் உட்கார்ந்திருந்தார்.அவரிடம் தலையை நீட்டினான்.மொட்டை அடித்து விட்டார். இடுப்பில் ஒரு கோவணம் மட்டும் அணிந்து கொண்டிருந்தான். அருணாச்சலேஸ்வரர் ஆலய ஆயிரங்கள் மண்டபத்தில் போய் அமர்ந்தான். ஜனங்கள் கும்பல் தொந்தரவு. தனிமையாக ஒரு இடம் தேடினான். மண்டபத்தின் ஓரத்தில் பாதாள லிங்கம் படிக்கட்டு கீழ் நோக்கி சென்றது. உள்ளே சென்று சிலை பின்னால் அமர்ந்தான். எவ்வளவு நாள்? எப்படி? ஒன்றும் தெரியவில்லை. இடுப்பு, தொடை எல்லாம் பூச்சிகள், புழு, அரித்தது. ரத்தமும் சீழும் ஒழுகியது. லக்ஷியம் பண்ணவில்லை அவன். மனம் அமைதியாக தியானத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. உடல் மறந்து போய்விட்டது.