மூன்று பைத்தியங்கள் – நங்கநல்லூர் J K SIVAN
உலகம் தோன்றியதிலிருந்து அருணாசலம் இருந்து வருகிறது. எண்ணற்ற சித்தர்கள், தேவர்கள் மஹான்கள் அதன் மஹிமை உணர்ந்து அங்கே வாழ்ந்தவர்கள். இன்றும் அநேகர் நமக்கு தெரியாமல் அரூபமாக அங்கே வாழ்ந்து தவம் செய்து வருகிறார்கள். நமக்கு அண்ணாமலை எப்படி தெரிந்தது என்றால் அதற்கு மூன்று பெயர்கள் காரணம். ஒன்று உண்ணாமலை சமேத அண்ணாமலையார். மற்றொன்று ரமண மஹரிஷி. மூன்றாவது சேஷாத்திரி ஸ்வாமிகள். பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி க்ஷேத்ரம் அண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் புனித க்ஷேத்ரம். 13-14 கி.மீ. தூரம் அதை கிரி வலம் வருவது ஒரு மறக்கமுடியாத அனுபவம். நான் சந்தோஷமாக அதை அனுபவித்தவன்.
127 வருஷங்களுக்கு முன்பு வெங்கட்ராமன் என்கிற சிறுவனாக ரமணர் திருவண்ணாமலைக்கு முதன் முதலாக வந்து அங்கே அருணாச்சலேஸ்வரர் ஆலய பாதாள லிங்க குகை சந்நிதியில் சமாதி நிலையில் தியானம் தொடர்ந்தார். பிராமண சுவாமி என்று எல்லோராலும் அறியப்பட்ட காலம் அது. அவரை தியானம் செய்ய விடாமல் சில மாட்டுக்கார சிறுவர்கள் கல்லால் அடித்து துன்புறுத்தியபோது தாயைப் போல் காப்பாற்றியவர் சேஷாத்ரி ஸ்வாமிகள்.எண்ணற்ற பக்தர்கள் ரமணரை தெரிந்து கொள்ள காரணமானவர் சேஷாத்ரி ஸ்வாமிகள். ”ரமணன் ஒரு கொலைகாரன்” என்பார் சேஷாத்ரி ஸ்வாமிகள். நமக்கு அதிர்ச்சியாக இருக்கும். உண்மையில் ஸ்வாமிகள் சொன்னதன் காரணம் அர்த்தம் என்ன தெரியுமா? அகம்பாவம், தான், தனது, தன்னுடைய என்ற எண்ணங்களைக் கொன்றவர் ரமணர். மனத்தை நாசம் செயது, மனோநாசம் செய்த கொலைகாரன் அவர் என்று அர்த்தம்.
ரமணர் விருபாக்ஷ குகையில் வாழ்ந்த காலத்தில் சேஷாத்ரி ஸ்வாமிகள் ரமணரைப் பற்றி பேசும்போது தனது பக்தர்களிடம் ”என்கிட்டே வராதேங்கோ, என்னுடைய ஆஸ்தி, சம்பளமே ஆயிரம் ரூபாய் தான். அதோ மேலே குகையிலே இருக்கானே அவனுக்கு பத்தாயிரம் ரூபா சம்பளம் அவன்கிட்டே போங்கோ. நிறைய கொடுப்பான். பத்து ரூபாயாவது வாங்கிக் கோங்கோ ” என்பார். ரமணரின் ஆத்ம ஞானத்தை அப்படி அளந்து காட்டியவர் ஸ்வாமிகள். ஸ்வாமிகளைப் புரியாதவர்கள் அதன் உள்ளர்த்தம் அறியாதவர்கள்.
ஒரு தடவை ரமணரிடம் பேசும்போது ”ஒரு தரமாவது ஒருவன் அருணாச்சலத்தை நினைத்தால் அவனுக்கு மோக்ஷம் கிடைக்கும்” என்று சொல்லும்போது ரமணர் குறுக்கிட்டு ”அந்த நினைக்கின்ற ஒருவன் யார்? எவனுக்கு மோக்ஷம்?” என்று திருப்பிக் கேட்டார். ”அடேடே எனக்கு அதெல்லாம் தெரியாதப்பா” என்று சிரித்துக் கொண்டே போய்விட்டார் சேஷாத்ரி ஸ்வாமிகள். ’
இன்னொரு சமயம் ரமணர் எதிரே ஸ்வாமிகள் உட்கார்ந்திருந்தார். சிறிது நேரம் கழித்து ”இது என்ன நினைக்கிறது என்று சொல்லத் தெரியவில்லை” என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார்.
மற்றொரு சந்தர்ப்பத்தில் ரமண பக்தர் ஒருவர் மகரிஷியிடம் ”எல்லோரும் சேஷத்ரி ஸ்வாமிகளை அது ஒரு பைத்தியம்” என்று சொல்கிறார்களே என்று கூறினார். அதற்கு மஹரிஷி ”அருணாச்சலத்தில் மொத்தம் மூன்று பைத்தியங்கள். ஒன்று சேஷாத்ரி ஸ்வாமிகள். ரெண்டாவது அருணாச்சலேஸ்வரர் எனும் பித்தர். மூணாவது இந்த ரமணன் ”என்று பதிலளித்தார்.