RADHA AND KRISHNA – J K SIVAN

ஒரு சம்பவம்  –   நங்கநல்லூர்  J K  SIVAN
ஒரு அழகான  ராதா  கிருஷ்ணன் படம் பார்த்தேன். கண்ணை மூடினேன். கற்பனையுலகில் ஒரு சம்பவம் திரையில் மலர்ந்தது.
ஐந்தாயிரம் வருஷங்கள் முன்பு வாழ்ந்த கிருஷ்ணன் நம்முடைய மனதில் இடம் பிடித்திருக்கிறான். அவனை மறக்க முடியவில்லை. நினைத்தால் இனிக்கிறான். அவனைப் பாட,  போற்ற, அவனைப் பற்றி பேச, கேட்க , எழுத  ரொம்ப பிடிக்கிறதே.  நமக்கே இப்படி என்றால்  அவனோடு வாழ்ந்த, விளையாடிய கோபியர்கள் நிலை என்ன?  அதுவும்  பிரதம கோபி, கண்ணனின் நிழல்  ராதைக்கு  கண்ணனை ஒரு கணமும் பிரிய மனம் இடம் கொடுக்குமா. அவளால்  கண்ணனைப் பிரிவது என்று நினைக்கக் கூட முடியாதே.  ராதை வாழ்ந்த ஊர்  மதுராவில், பர்ஸானாவில்.  கண்ணன் அவளை பிரிந்து விட்டான்.  இனி கண்ணன் பிருந்தாவனம் வரவே மாட்டான். துவாரகைக்கு சென்று விட்டான். ராஜாவாகி விட்டான். பழைய  பசு மாடு கன்றுக்குட்டி கிருஷ்ணன் அவன் இனி இல்லை.  ராஜா.   எட்டு பட்டத்து ராணிகள். ராதை என்ன செய்வாள்?

ஒருநாள் கிருஷ்ணன் பிரிவு தாங்கமுடியாமல் மதுராவிலிலிருந்து துவாரகைக்கு நடந்தாள், பல நாட்கள்  ஆங்காங்கே  தங்கி ஒருவாறு சில மாதங்கள் கழித்து துவாரகையை அடைந்தாள்.  பெரிய அரண்மனை எதிரே தோன்றுகிறது.  எப்படி உள்ளே போவது? எப்படி கிருஷ்ணனை சந்திப்பது?  ஒரு வேலைக்கார பணிப்பெண் போல அங்கே காவலாளிகள் அனுமதி பெற்று உள்ளே செல்கிறாள்.

ஏதோ ஒரு பணிப்பெண் வேலை கிடைத்துவிட்டது.  கிருஷ்ணன் கண்ணில் படமாட்டானா?  சிலநாட்கள் காத்திருந்தும்  கிருஷ்ணனைப்  பார்க்க முடியவில்லை.  திரும்பவும் துவாரகாவை விட்டு போய்விடலாமா என்று எண்ணம் பலமாக  மனதில் இடம் பிடித்தது.  இனி  கிருஷ்ணனிப் பார்க்க இந்த ஏழை கோபியால் முடியாது. பார்த்தாலும் கிருஷ்ணன் அடையாளம் கண்டு கொள்வானா என்பது சந்தேகம். அவன் மஹாராஜா அல்லவா?  என்று நினைத்தாள் .
உள்ளமும் உடலும் தளர்ந்து போய்  ராதை நடந்தாள். அவள் பின் யாரோ  தொடர்ந்து வருவது போல் ஒரு பிரமை. நிஜமா பொய்யா?  கிருஷ்ணன் அவள்  பின்னால்  நடனது வந்து கொண்டிருந்தான். திரும்பிப் பார்த்த ராதா ராணி ஆனந்தமடைந்தாள் .கண்களில் ஆனந்தக் கண்ணீர்.  அன்பும் பரவசமும் எல்லை மீறியது.
”ராதா, என்ன வேண்டும் சொல்?”   குரலில்  பழைய அன்பும் பாசமும் பிரதிபலிக்க கண்ணன் கேட்டான்.
”ஒன்றுமே  வேண்டாம்’   என்று தலை யாட்டினாள்  ராதா.   இரு கரம் கூப்பி வணங்கினாள் . கண்ணை மூடினாள்.  அவள்  ஹ்ருதயத்தில்  அவனது தெய்வீக அன்பு ஒன்றே வேண்டும் என்று   அவள் கேட்பது கிருஷ்ணனுக்கு புரிந்தது.
”எதையாவது என்னிடமிருந்து கேள் ராதா?”
” ம்ம்ம்  ம்ம்ம் .”
”ஏன் ராதா ஒன்றுமே கேட்க மாட்டேன் என்கிறாய்?’
”கிருஷ்ணா, இது வரை நான் உன்னிடம் எதுவுமே கேட்டதில்லை. நான் கேட்க விரும்புவது உன்னுடைய  கானக்குழலோசை ஒன்று தான்”
என் உடலில் உயிர் பிரியும் முன்பு அந்த நாதம் ஒன்று தான் நான் கேட்க விரும்புவது”
இதுவரையில் அவள் பிருந்தாவனத்தில் கேட்காத ஆனந்த, அற்புத  குழலோசை அவள் செவியில் பாய்ந்தது.
”ராதா, என் குழலிலிருந்து  எப்போதும், எங்கும், என்றும், வெளிப்படும் எந்த ஓசையும் உனக்கே  அர்ப்பணம்”
அந்த ஓசை இருவரையும்  நாக பாசம் போல் நாத பாசமாக  பிணைத்தது . ராதா கிருஷ்ணனோடு கலந்தாள் .கிருஷ்ணனுக்கும் அது தான் அவன் கடைசியாக  குழலில் இசைப்பது என்று  புரிந்து விட்டது. கிருஷ்ணன்  குழலை  வீசினான்.  ராதை பிரிந்தாள்,பிருந்தாவனம் மறந்தது,  துவாரகை அரண்மனைக்குள் ராஜா கிருஷ்ணன் மஹா பாரதப் போர்  பற்றிய சிந்தனையோடு நுழைந்தான்.  கடமை, அவாதார நோக்கம் அவனை தனது பாதையில் இட்டுச் சென்றது.  

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *