ரமணானுபவம் – நங்கநல்லூர் J K SIVAN
ஒரு கால கட்டத்தில் விரூபாக்ஷ குகையில் ரமண மஹரிஷி இருந்தபோது அவர் அம்மா, , தம்பி இன்னும் சிலர் சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு பத்து பக்தர்கள் இருந்தனர்.
ஒருவர் பெயர் வள்ளி மலை முருகர். ஒவ்வொரு நாளும் காலையில் திருப்புகழ் அற்புதமாக பாடுவார். அருணகிரியாரின் திருப்புகழ் சந்தங்கள் நிறைந்தது. தாளத்திற்கு ஏற்றது. பாடினால் சுகமாக இருக்கும் கேட்பதற்கு. பகவான் தாளம் போடுவார். அருணாசல மலையில் ஆஸ்ரமத்தில் அவர் ஒரு பெரிய இரும்பு குமுட்டி இருக்கும். அதில் கரி நிறைய போட்டு தணல் சிகப்பாக ஜிகு ஜிகு என்று இருக்கும். அதன் காதுகள் ரெண்டு இரும்பு வளையங்கள். அந்த ரெண்டு இரும்பு காது வளையங்கள் மேலும் ரெண்டு குச்சியால் தட்டிக்கொண்டு சரியான தாளம் போடுவார் மகரிஷி. முகத்தில் பேரானந்தம் தெரியும். கண்களில் கருணை பொங்கி வழியும்.
ஒரு பக்தர் சிதம்பரத்துக்காரர். சுப்ரமணிய ஐயர் . திருவாசகம் பாடுவார். மகரிஷி மேல் பாடுகள் இயற்றி பாடுவார். ஐயர் ஒருநாள் தான் மகரிஷி மேல் இயற்றிய பாடலில் ஒரு அடியில் ” ரமண சத்குரு, ரமண சத்குரு, ரமண சத்குரு ராயனே ” என்று உரக்க பஜனை பாட்டு பாடினார். மற்ற பக்தர்களும் சேர்ந்து கொண்டு கோரஸாக கைதட்டி பாடினார்கள். மகரிஷி தானும் கை தட்டிக்கொண்டு அவர்களோடு சேர்ந்து பாடினார். ஐயருக்கு ஆச்சர்யம். ‘ தான் மஹரிஷியைப் பாடுவது தெரிந்தும் தானும் ரமண ஸத்குரு என்று சொல்லிக்கொண்டே அவரும் சேர்ந்து கொண்டு பாடுகிறாரே” என்ன அர்த்தம்? எதற்கு இப்படி செயகிறார்? மஹரிஷியைப் பார்த்து சிரித்தார்.
அதைப் புரிந்து கொண்ட மகரிஷி ”இதில் என்ன ஆச்சர்யம், வேடிக்கை ,விசேஷம் இருக்கிறது?. ரமணா என்றால் இந்த ஆறடி நீள உருவம் ஒன்று தானா? ரமணா என்றால் எங்கும் நிறை அமரத்வம் இல்லையா?அதை எல்லோரும் சேர்ந்து பாடுவது தான் முறை. நான் ஏன் உங்களோடு சேர்ந்து கொள்ளக்கூடாது? என்கிறார் மகரிஷி. எப்படிப்பட்ட ப்ரம்ம ஞானி அவர்!
விடிகாலையில் ஆஸ்ரமத்தில் இருந்த எல்லா பக்தர்களும் எழுந்து அருணாசல மஹிமை பற்றி பாடுவார்கள், மஹரிஷியைப் போற்றியும் பாடுவார்கள். ஸம்ஸ்க்ரிதம் தெரிந்த பக்தர் ஒருவர் சில ஸ்லோகங்களை பாடினார். அவர் பாடுவதை பார்த்துக்கொண்டே இருந்த மகரிஷி அவர் முடித்த பிறகு அவரிடம் என்ன சொன்னார் தெரியுமா?
”நீ எல்லாம் கற்றுக்கொண்டிருக்கிறாய்? எனக்கு அப்படியில்லை. ஒன்றுமே தெரியவில்லை. இங்கே வருவதற்கு முன்பு ஒன்றையும் நான் கற்றுக்கொள்ளவில்லை. இங்கே வந்த பிறகு ஏதோ ஒரு அதிசயமான தெய்வீக சக்தி என்னை கெட்டியாக பிடித்துக்கொண்டு என்னை மாற்றி விட்டது. அப்பாவுக்கு இளம் வயதில் ஹிமயமலையில் தங்கி தபஸ் செய்து கொண்டு இருக்கவேண்டும் என்று ஆசை. ஆனால் அவர் கல்யாணம் பண்ணிக்கொண்டு பெரிய சம்சாரியாக எங்கோ வேலை பார்த்துக்கொண்டு குடும்பத்தை ரக்ஷிக்க நேர்ந்தது. எனக்கு வீட்டை விட்டு கிளம்பும்போது 16-17 வயது. ஒரு நோக்கமும் லட்சியமும் இல்லை. ஒரு பெரிய சூறாவளி யின் வீச்சில் அகப்பட்ட சிறு இலைச் சருகு திசை தெரியாமல் அடித்துச் செல்லப்படுவது போல், ஏதோ ஒரு தெய்வீக சக்தி என்னைப் பிணைத்து இங்கே இழுத்து வந்தது. வந்து சேர்ந்தேன். என் உடம்போ, உலகமோ, பகலோ இரவோ எதுவும் எனக்கு தெரியவில்லை. கண்களை மூடி கொண்டு உட்கார்ந்து விட்டேன். என் உடம்பு எலும்புக் கூடாகியது. என் உடலைப் பார்த்து பரிதாபம் கொண்டவர்களுக்கு என் உள்ளத்தில் நான் அடைந்துகொண்டிருந்த ஆனந்தம் தெரியவில்லை. ப்ரம்மம் எது என்று அப்புறம் தான் உணர்ந்தேன். வேதாந்த சாஸ்த்ர புத்தகங்களை அப்புறம் பார்த்தபோது படித்தபோது எளிதில் அது புரிந்தது. அதெல்லாம் நான் ஏற்கனவே அடைந்ததை தான் சொல்கிறது என்று தெரிந்தது. ஆச்சர்யமடைந்தேன். ” ஓஹோ இது தான் பிரம்மமோ’ என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்”.
சிவப்ரகாசம்பிள்ளை ஒரு ரமண பக்தர். ‘ஸ்ரீ ரமண சரித அகவல்’ இயற்றியவர் . அதில் ”ப்ரம்மம் என்றால் என்ன என்றே அறியாமலே அதை தெரிந்து கொண்டவர், புரிந்து கொண்டவர், அறிந்து கொண்டவர், அடைந்தவர்” ஆஸ்ரமத்தில் வந்தால் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு பகவானையே பார்த்துக்கொண்டிருப்பவர். ரொம்ப எளியவர்.
தொடரும்