பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
ஒரு அதிசய ஆராய்ச்சி
மஹா பெரியவா வாழ்ந்த ஒவ்வொரு கணமும் சரித்திர பெருமை வாய்ந்தது. பேசும் தெய்வத்தின் ஒவ்வொரு சொல்லும் செயலும் மேன்மையானவை அல்லவா?
காஞ்சிபுரத்தில் மடத்தில் நிகழ்நத ஒரு சம்பவம்.
பாரத தேசத்தின் முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன் காஞ்சிபுரத்தில் ஸ்ரீ மடத்தில் மஹா பெரியவா தரிசனம் செய்து விட்டு பெரியவவளின் ஆசி பெற்று திரும்பிவிட்டார். பகல் வெகு நேரமாகிவிட்டது. மஹா பெரியவா தனது அறைக்குச் சென்று ஒய்வு எடுத்துக்கொண்டார்.
சாயந்திரம் நாலு மணிக்கு தொண்டர் ஒருவர் பெரியவாளிடம் சென்றார்.
“பாண்டிச்சேரி யூனிவர்சிட்டி யிலிருந்து சில பிரெஞ்சு ப்ரொபஸர்கள் யாரோ இப்போ தரிசனத்துக்கு வரப்போறாளாம் என்றார்.
பெரியவா ஒன்றும் சொல்லவில்லை. தலையாட்டினார்.
அரைமணிக் குள்ளாகவே பிரான்ஸ் நாட்டு ப்ரொபஸர்கள் வந்தார்கள். மஹா பெரியவாளிடம் விஷயம் சொல்லப் பட்டது.
”வரச்சொல்லு”
மஹா பெரியவா எப்போதும் போல் எளிமையின் ஸ்வரூபமாக தரையில் அமர்ந்திருந்தார். ஐந்து பிரஞ்சுக் கார ப்ரொபஸர்கள் வணங்கினார்கள். எதிரே கைகாட்டி,
”SIT DOWN , உட்காருங்கோ’ என்கிறார்.
அவர்கள் பேசுவதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சொல்கிறார் ஒரு பக்தர்.
ஐந்து பிரெஞ்சுக்காரர்களில் 3 பேர் பெண்கள். 2 பேர் ஆண்கள்.
ஒருவர் , அவர்களுக்குள் தலைவராக இருப்பவர் போல இருக்கிறது. அவர் வணங்கி விட்டு பேசினார்.
”நான் இங்கே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் வந்திருக்கேன்” என்றார்.
வந்திருந்தவர்கள் தங்கள் பெயர்களை சொல்லி அறிமுகம் செய்து கொண்டார்கள்.
;யார் எந்த டிபார்ட்மென்ட், எதில் ப்ரொபஸர் என்று கேட்டு தெரிந்து கொண்டார்.
சொன்னார்கள்.
ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்த பெரியவா ஒரு பெண்ணிடம்
“நீங்கள் இத்தாலிக்காரரா ?”என்று கேட்டார்.
”நான் பிரான்ஸ் தேசத்தில் பாரிசில் வசிக்கிறேன். அங்கே ப்ரொபஸர். ….ஆனால் என் முன்னோர்கள் இத்தாலிக்கார்கள் தான்.”
” ஓஹோ. அவர்கள் பாரிஸுக்கு வடக்கே லக்ஸ்ம்பர்க் என்ற நகருக்குத் தெற்கில் வாழ்ந்தவர்களா? என்கிறார் மஹா பெரியவா .
அந்த பெண்மணிக்கு ரொம்ப ஆச்சரியம்.
“ஆமாம் ஆமாம் ”
”நாங்கள் யாரும் இதுவரைக்கும் இந்தியா வந்ததேயில்லையே . எப்படி எங்கள் முன்னோர் பற்றி இந்த பெரியவருக்கு தெரிந்திருக்கிறது ! இந்த கிராமத்தில் உட்கார்ந்துகொண்டு எப்படி இவர் பிரான்சு ஜெர்மனி நாடுகளின் அமைப்பையும், லக்ஸம்பர்க் பகுதி பற்றி வரையறுத்துக் கூறுகிறார்? என்று தனக்குள் அதிசயித்தாள் அந்த பிரெஞ்சுக்காரி. எல்லோருமே அதிசயித்து வாய் பிளந்து நின்றனர்.
எல்லோர் முக பாவங்களையும் கவனித்த மஹா பெரியவா விவரம் சொல்ல தொடங்கினார்.
“இத்தாலிக்கும் பாரிஸுக்கும் வடக்கே லக்ஸ்ம்பர்கிற்குத் தெற்கில் உள்ளவர்களுக்கும் பெரும்பாலும் தலைக் கேசம் கருப்பாயிருக்கும். இத்தாலியர்களின் பேசும் லத்தீன் மொழியின் உச்சரிப்பும் ஒருவிதமாக இருக்கும்” என்று ஒரு குண்டைத் தூக்கி போட்டார் பெரியவா.
அந்த பெண்மணி, “ஆமாம்! ஆமாம்! வாஸ்தவம் ” என்று வேகமாகத் தலையாட்டினாள் ..
காஞ்சிபுரத்தில் ஏதோ எளிய பகுதியில் வாழும் மஹா பெரியவா உலகில் எங்கிருந்து யார் வந்தாலும், எம்மொழி பேசினாலும், அவர் எந்த பகுதியிலிருந்து வந்தவர், எந்த மொழி பின்னணி கொண்டவர் என்று தெரிந்து வைத்துக் கொண்டு அவர்கள் தேசம், மொழி, பண்பாடு, வாழ்க்கை முறை பற்றி எல்லாம் விளக்கும் அழகைப் பார்க்கும்போது வேத காலத்தில் அனைத்தையும் அறிந்த மகரிஷிகள் எல்லாம் ஒருங்கே இணைந்து இதோ இந்த மஹா பெரியவா உருவத்தில் ஒரு ஒப்பற்ற பரம ஞானியாக அமர்ந்திருக்கும் அற்புதத்தை அனைவரும் ரசித்து வணங்கினார்கள்.