அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN தண்டியடிகள்.
நாட்டமிகு தண்டிக்கும் அடியேன்” – திருத் தொண்டத் திருத்தொகை
தண்டி அடிகள் என்ற பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன். யார் அவர் என்று தெரியாது என்பவர்களுக்கு நடுவே சிலர் அவர் வேறு யாருமில்லை காந்தி அடிகள் என்கிறவர்களும் இருக்கிறார்கள். ”எப்படி சொல்கிறீர்கள்? காந்தி அடிகளுக்கு அப்படியும் ஒரு பேரா?
”ஆமாம், அவர் தண்டி எனும் இடத்துக்கு சென்றது தெரியுமல்லவா? ‘ஓஹோ, அப்படியா, எதற்கு அங்கே போனார்””’வெள்ளைக்காரனை எதிர்த்து கடற்கரையில் உப்பு எடுத்து எதிர்ப்பு காட்ட?”ஓஹோ, அது தான் உப்பு சத்யாகிரஹமா?””அங்கே தண்டி எனும் கடற்கரையில் வெள்ளைக்காரனின் போலீஸ் தடியால் அடித்தது. அதனால் அவற்றை தண்டி அடிகள், தடி அடிகள், என்பார்கள். காந்தி தான் தண்டியடிகள்” என்கிறார் ஒருவர்.”ஐயா, சரித்திரத்தையே மாற்றுகிறீரே. தண்டியடிகள் வேறு. அவர் உப்போ. பருப்போ, சத்யாக்ரஹம் பண்ணாதவர். சிவனடியார். சிவ பக்தர்களை அடியார்கள், அடிகள் என்று சொல்வதுண்டு. தண்டியடிகள் அப்படி ஒருவர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். அவரைப்பற்றி சொல்கிறேன் கேளுங்கள்.
திருவாரூரில் பிறந்தவர் இந்த அடிகள். பிறவிக்குருடர். அகக்கண்ணால் முக்கண்ணனை வணங்கி வழிபட்டவர். கொம்பைப் பிடித்துக் கொண்டு, சிவாலயத்தைச் சுற்றி சுற்றி ‘ஓம் நமசிவாய’ எனும் பஞ்சாக்ஷர மந்த்ரத்தை உச்சரித்துக் கொண்டே வருபவர். அவர் சுற்றும் ஆலயத்தின் குளம் ரொம்ப சிதிலமாகி வறண்டிருந்தது. அதை எப்படி சுத்தம் செய்யலாம் என்று யோசித்தார். குளக்கரையில் ஒரு கொம்பு, குளத்தின் நடுவே ஒரு கொம்பு கட்டி அதில் கயிற்றை பலமாக பிணைத்து அதைப் பிடித்துக் கொண்டேகுளத்தில் இறங்கினார். ஒரு கூடையைத் தோளில் சுமந்து குளத்தில் இருக்கும் மண், சேறு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கொண்டுவந்து குளக்கரையில் கொட்டினார். இவ்வாறு தூறு வாரியதும் , காய்ந்து போயிருந்த குளத்தில் நீர் சுரந்தது. அடிகள் மேல் பொறாமை கொண்ட அங்கு வாழ்ந்த சில சைவ விரோதி சமணர்கள் ”உன் வேலையை நிறுத்து ” என்று சத்தம் போட்டார்கள்.
‘ ஐயன் மீர், இது சிவனுக்கு நான் செய்யும் சேவை. திருப்பணி.. நிறுத்துவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை’ என்றார். ‘ நீயோ குருடன், உனக்கு கண் இல்லை என்றால், காதும் கேட்கவில்லையா? நாங்கள் சொல்வதை கேட்டு இங்கிருந்து போய்விடு. மண்ணைத் தோண்டாதே, அதில் வாழும் சிறிய உயிர்கள் இறந்துவிடும், நிறுத்து’ என்கிறார்கள். ‘சிவத் தொண்டின் மஹிமை பெருமையை அறியாதவர்களே. இது எப்படி உங்களுக்கு புரியும்?” என்கிறார் தண்டியடிகள். சமணர், ‘உனக்கு கண் தான் குருடு, காதுமா செவிடு என்று சிரித்தார்கள். அப்போது தான் தண்டியடிகள் என் சிவனருளால் நான் கண் பெற்று நீங்கள் குருடானால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார். எங்கே உன் தெய்வத்தின் சக்தியைக் காட்டு, நீ கண் பெற்றால் நாங்கள் இந்த ஊரை விட்டே போய் விடுகி றோம் என்றார்கள்.”ஆரூரா , எனக்கு வந்த சோதனையை நீ பார்த்தாயா, கேட்டாயா என்று வருந்தி பாடுகிறார். சமணர்களால் என் திருக் குளத்தில் தூறு வாறும் சேவை தடைப்பட்டதே என்று அழுகிறார்.
அன்று கனவில் ஆரூர் தியாகராஜன் தோன்றி உனக்கு கண் பார்வை அளித்தேன்.உன் வாக்கின் படி சமணர்கள் கண் பார்வை இழப்பார்கள் என்றான். அதே நேரத்தில் திருவாரூர் தியாகராஜன் சோழ ராஜா கனவிலும் தோன்றினான். ‘தண்டி என்ற என் பக்தன் திருவாரூரில் ஒரு குளம் தோண்டி தூறு வாருவதற்கு சில சமணர்கள் தடை செயகிறார்கள். நீ தண்டியின் கைங்கர்யம் தடை படாமல் இருக்க உடனே ஏற்பாடு செய் ” என்று கட்டளை இட்டான். ஆச்சரியத்தோடு ராஜா கண் விழித்தான். மறுநாள் காலை திருவாரூர் சென்றான். தண்டியடிகளை சந்தித்து அவரை குளத்தருகே அழைத்துச் சென்றான்.
”அரசே, சிவனருளால் நான் குளத்தில் ஸ்னானம் செய்து ஐந்தெழுத்து மந்திரம் ஓதி கண் பார்வை பெறுவேன். சிவனுக்கு கைங்கர்யம் செய்வதைத் தடுத்த சமணர்கள் கண் பார்வை இழப்பார்கள்.இது தியாகேசன் அருள் ” என்று குளத்தில் மூழ்கி எழுந்தார். கண் பார்வை ஒளி கிடைத்தது. அதே நேரத்தில் சமணர்கள் பார்வை இழந்தார்கள். அரசனின் காவலாளிகள் அவர்களை திருவாரூரிலிருந்து வெளியேற்றினர். குளம் ராஜாவின் ஆணையில் முழுதும் தூறு வாரப்பட்டு , சுத்தமாகி கரைகள் புதுப்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு சந்தோஷ மளித்தது.