விவேக சூடாமணி – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர்
”உனக்கு தெரிந்த ஒரு வள்ளல் பெயரைச் சொல்லு என்றால் யோசிக்காமல் நான் முதலில் கை தூக்கி, சொல்வது ”ஆதி சங்கரர்” என்ற பெயரைத்தான். ‘என்னய்யா சொல்கிறீர். ஆதிசங்கரர் ஒரு சந்நியாசி அவரைப்போய் வள்ளல் என்கிறீரே?
”பின்னே என்ன? 32 வயதுக்குள்ளே இத்தனை அற்புத அதிசய விலைமதிப்பற்ற பொக்கிஷங்களை நமக்கு வாரி தந்தவர் வள்ளல் இல்லை என்றால் வேறு யாரை வள்ளல் என்று சொல்வது? அவர் எழுதித்தள்ளிய ஸ்லோகங்கள், சாஸ்திரங்கள், நீதி நூல்கள், காவியங்கள், பெயர் சொல்லக்கூடத்தெரியாதே நமக்கு.”32 வயதில் மறைந்தாலும் ஆதி சங்கரருக்கு நாம் எல்லோரும் என்றும் குழந்தைகள் தான்.
நமக்கு ஏராளமான சொத்து வைத்து விட்டுப்போன முன்னோருக்கு எப்படி நன்றி சொல்வது?எங்கோ பூர்வீக சொத்து வைத்து விட்டுப்போன பாட்டன் பூட்டனை தெரியாமலேயே நிறைய பேர் ஏழையாக செத்துவிட்டார்கள். சிலர் சொத்து விவரம் தெரியாமல் விழிக்கிறார்கள். சிலர் வேறு எவரோ அந்த சொத்தை அனுபவிக்கிறார்கள் அவர்களை அப்புறப்படுத்த வழி தெரியாமல், சண்டை போட பணமோ பலமோ இல்லாமல் கண் எதிரே தனது சொத்தை மற்றவை அனுபவிப்பதை பார்த்து பொருமுகிறார்கள். சிலர் எனக்கு எவன் சொத்தும் வேண்டாம் நான் சம்பாதித்ததே போதும் எனும் ராசிக்காரர்கள்.
நாம் கேட்காமலேயே எந்த வில்லங்கமும் இல்லாமல் நிறைய சொத்து நம் எல்லோருக்குமே அள்ள அள்ள குறையாமல் நிறைய நிறைய பொதுவில் விட்டு வைத்துவிட்டுப்போன ஒரு முன்னோர் தான் ஆதி சங்கரர்.
நமது புத்தி கூர்மையால் எது நமக்கு உகந்தது, நல்லது, சிறந்தது, பின் பற்ற தக்கது, நல் வழி காட்டுவது என்று பாகுபாடு செயது அதை விடாமல் கெட்டியாக பிடித்துக்கொள்ள சில ஸ்லோகங்கள் உள்ளன. மொத்தம் 581 இது புரிந்தால் வேதாந்தம் நன்றாக காக்கா நரி வடை கதை மாதிரி எளிதில் புரியும். சின்மயானந்தா ஸ்வாமிகள் அற்புதமாக இதை விளக்கி சொல்வதை கேட்டிருக்கிறேன்.
கோவிந்தா நீ எப்போதும் பரமானந்த ஸ்வரூபன். வேதாந்த சித்தாந்த முடிவானவன். நீ யே நல்ல குருநாதன் எனக்கு. உன்னை வணங்கி இதை சமர்ப்பிக்கிறேன்
” உங்களுக்கு நான் எழுதிய ஒரு அற்புதமான ஒரு தத்துவார்த்த போதனையை பரிசாக அளிக்கட்டுமா?” என்று ஆதி சங்கரர் கேட்கிறார்.
”ஆச்சார்ய புருஷரே, ஆஹா அது எங்கள் பாக்யம், தாராளமாக வழங்குங்கள். என்ன அந்த அற்புதம் என்று சொல்வீர்களா?”
”என்னிடம் வேறு என்ன இருக்கிறது. உங்களுக்கு உதவும்படியான சில தத்துவங்கள் தான். அதற்கு நான் விவேக சூடாமணி என்ற பெயர் வைத்துள்ளேன்.”
”ஆஹா வெகுநாளாக அதை படித்து அனுபவிக்க ஒரு அபிலாஷை. இன்று அது நிறைவேறட்டும் ஆச்சர்ய தேவா.”
”ததாஸ்து – அப்படியே ஆகட்டும்..”……..
ஆகவே நண்பர்களே, இன்றுமுதல் நான் ஆச்சார்யரின் விவேக சூடாமணி உங்களோடு பகிர்கிறேன்.
ஆதி சங்கரரின் ஒரு அற்புத மாணிக்கம் தான் ”விவேக சூடாமணி” அதை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சொல்ல ஒரு ஆசை. அவர் அருளாலே அது நிறைவேறட்டும். சூடாமணி என்றாலே சிரசில் அணியும் ஒரு ஆபரணம். சிரசில் விவேகம் புகுந்தால் அதுவே ஒரு சிறந்த ஆபரணம் அல்லவா? அவர் வைத்த அழகான அர்த்தமுள்ள பெயர் ” விவேக சூடாமணி”
ஆதி சங்கரரின் விவேக சூடாமணி ஒரு அத்வைத ரத்னம். சிறு ரெண்டடி ஸ்லோகங்களில் பக்தியை, ஞானத்தை, ஆன்மாவை, கர்மத்தை, தர்மத்தை, குரு பக்தியை, பரோபகாரத்தை, முக்தியை பற்றியெல்லாம் வெகு அழகாக தனித்வத் தோடு சொல்கிறார். அந்த ஸ்லோகங்களை ஸம்ஸ்க்ரிதத்திலும், ஆங்கிலத்திலும் தமிழிலும் தமிழில் விளக்கத்தோடு அளிப்பதை நான் செய்த முன் வினைப்பயனாக கருதி பகவானை வேண்டுகிறேன்.
இனி ஒவ்வொரு நாளும் ஐந்து ஸ்லோகங்களை தினமும் ஆதி சங்கரரின் விவேக சூடாமணியிலிருந்து நாம் அனுபவிக்கலாம்.என்ன இது பிடிக்குமா உங்களுக்கு? சேர்ந்து கொள்வோமா ரசித்து ருசித்து அனுபவிக்க?