பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
காது ட்ரீட்மெண்ட்.
காஞ்சி மஹா பெரியவா பக்தர்களை எண்ணவே முடியாது. உலகம் முழுதும் இருப்பவர்கள். அவர்கள் ஜாதி மதம் ஆண் பெண் குழந்தைகள் என்ற பாகுபாடு இல்லாத ஒருமித்த பக்தர்கள். அவர்களில் ஒருவரைப் பற்றி சொல்லத்தான் இந்தப் பதிவு. பழையனூர் தேவராஜசர்மாவுக்கு மிகுந்த பெரியவா பக்தி. சர்மா எப்போதும் பெரியவரை மனதில் சிந்தித்துக் கொண்டே இருப்பவர் . 1978, ஏப்ரல் 13, தமிழ்ப் புத்தாண்டு தினம். அன்று தேனாம்பாக்கத்திலுள்ள தன் வீட்டில் வழக்கம்போல் சர்மா தூங்கிக்கொண்டிருந்தார். திடீர் என்று அவர் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல ஏதோ ஒரு வித ஷாக். சட்டென்று தூக்கம் கலைந்து கண் விழித்துப் பார்த்தார். என்ன ஆச்சர்யம் இது?சர்மாவுக்கு முன்னால் விபூதி, ருத்ராட்சம், காஷாய வஸ்திரம் அணிந்த மஹா பெரியவாளே காட்சி தருகிறார். சர்மாவுக்கு தன்னையே நம்பமுடியவில்லை. அதிர்ச்சியும் ஆனந்தமும் மனதில் பொங்கி எழுந்தது. ”என்ன புண்ணியம் செய்தேனோ சத்குருதேவா” என்ற ரீதிகௌளை ராக பாடல் நினைவுக்கு வந்தது. என்ன ஆனந்தம். பரமாச்சார்யாரின் திவ்ய தரிசனம் சொப்பனத்தில் கிடைத்தது பெரும் பாக்யம் என்று சந்தோஷப்பட்டார்.
பொழுது விடிந்ததும் வழக்கம் போல் . குளித்துவிட்டு கோயிலுக்குச் செல்ல ஆயத்தமானார். வீட்டில் அப்போதெல்லாம் ஹரிக்கேன் விளக்கு தான். மின்சாரம் கிடையாது. காஞ்சி காமாக்ஷி கோவில் நான்கு மாடவீதியிலும் பாராயண கோஷ்டியுடன் வலம் வந்து, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்தார். காமாட்சி அம்மனைத் தரிசனம் செய்தார். அந்த வருஷம் பூரா தேவராஜ சர்மாவிற்கு எடுத்த காரியம் எல்லாவற்றிலும் நினைத்ததை விடச் சிறப்பாகவே அமைந்தன. குரு கடாக்ஷம் பெற்றால் வாழ்வில் கோடி நன்மை உண்டாகும் என்பது சர்மாவுக்கு தெரியுமே. இன்னொரு விஷயம். தேவராஜ சர்மாவிற்கு ஒருமுறை காதில் கடுமையான வலி. பரிசோதனை செய்த டாக்டர் காதில் ஆபரேஷன் செய்தால் ஒழிய வலி குறைய வாய்ப்பில்லை என்று உறுதியாக சொல்லிவிட்டார். தேவராஜ சர்மாவுக்கு நேராக காஞ்சிபுரம் சென்று பெரியவரைத் தரிசித்து அவரிடம் உத்தரவு பெற்றால் ஒழிய ஆபரேஷன் பண்ணிக் கொள்வதில்லை என்று தீர்மானம். கையில் ஆரஞ்சுப்பழங்களை எடுத்துக் கொண்டு காஞ்சிபுரம் கிளம்பினார். காது வலி பற்றி பெரியவரிடம் சொல்லி வருத்தப்பட்டார். பெரியவர் பதிலேதும் சொல்லாமல், அவர் கொடுத்த பழங்களின் தோல்களை உரித்துக் கீழே போட்டார். சர்மா தன் மனதிற்குள், பெரியவர் தன் தீவினைகளையே உரித்து எடுத்துவிட்டதாக எண்ணிக் கொண்டார். அன்று முதல் காது வலி குறைய ஆரம்பித்து விட்டது. மஹா பெரியவா மௌனமாகவே, பதில் எதுவும் சொல்லாமலே எத்தனையோ பேருக்கு குறைகளை நிவர்த்தி செய்யும் மஹா வைத்யநாதன் அல்லவா?
மறுபடியும் காது பரிசோதிக்கும் டாக்டரிடம் சென்றார். டாக்டருக்கு அதிர்ச்சி. ” சர்மா சார், உண்மையை மறைக்காமல் சொல்லுங்கள். வேறு யாரவது டாக்டரிடம் சென்று வைத்தியம் எடுத்துக் கொண்டீர்களா? ””இல்லை டாக்டர், எனக்கு உங்களைத் தவிர வேறு எந்த காது டாக்டரும் தெரியாதே. யார் கிட்டேயும் போகவில்லையே””சர்மா, பயப்படாமல் சொல்லுங்கள். நான் அந்த மருந்தைத் தெரிந்து கொண்டால் மற்றவர்கக்குள்ளும் அதைக் கொடுக்க வசதியாக இருக்கும். அதற்காக தான் கேட்டேன் எந்த டாக்டரிடம் போனீர்கள், அவர் என்ன மருந்து கொடுத்தார், சொல்லுங்கள்?””டாக்டர்! நீங்கள் சொல்வது என்னவோ ஒருவிதத்தில் உண்மை தான். சில நாட்களுக்கு முன் ஒரு மஹா வைத்ய நாதரிடம் போனேன். அவர் காஞ்சிபுரத்தில் இருக்கிறார். “அருட்பிரசாதம்’ என்னும் மருந்தைக் கொடுத்து என்னைக் குணப் படுத்தி விட்டார்” என்று மஹா பெரியவாளிடம் சென்றதை, அங்கு நடந்ததை விவரமாக சொன்னார் தேவராஜ சர்மா.
“இனி ஆபரேஷன் உங்களுக்குத் தேவைப்படாது. நீங்கள் தைரியமாக வீட்டுக்குச் செல்லலாம். காதுநோய் முற்றிலும் குணமாகிவிட்டது” என்று டாக்டர் உறுதியளித்தார்.