திருவாதவூரனும் திருவாசகமும் – நங்கநல்லூர் J K SIVAN
பாண்டிய நாட்டில் வாதவூர் என்ற ஊரில் ஒரு பிராமண சிறுவன் வாதவூரன். அதி புத்திசாலியாக விளங்கிய அவனைப் பற்றி அறிந்த ராஜா அரிமர்த்தன பாண்டியன் வாதவூரனை தனது முதன் மந்திரியாக்கி தென்னவன் பரமராயன் என்ற பட்டமும் அளித்தான்.
வாதவூரனுக்கு உலக வாழ்க்கையில் பிடிப்பு இல்லை. சிறந்த சிவபக்தன். அவன் மனம் சிவனடியார்களை தேடிச்சென்று அவர்கள் அடிமையானான். தகுந்த குருவைத் தேடினான். பாண்டிய ராஜா வாதவூரனின் அறிவை உணர்ந்தவன் ஆதலால் நல்ல குதிரைகளை தனது படைக்கு தேர்வு செய்து வாங்கி வர நிறைய பொற்காசுகள் கொடுத்து அனுப்பினான். ”ஆஹா இது ஒரு அற்புத சந்தர்ப்பம். குதிரை தேடும்போது குருவையும் தேடலாம்” என்று வாதவூரனும் கிளம்பினான்.பரமேஸ்வரனுக்கு தனது சிறந்த பக்தன் யாரென்று தெரியாமலா போகும்? விட்டுவைப்பானா?
திருப்பெருந்துறை வந்து சேர்ந்த வாதவூரன் அங்கே ஒரு பழைய சிவன் கோவில் வளாகத்தில் ஒரு குருந்த மரத்தடியில் கையில் சிவஞான போதம் ஓலைச்சுவடியுடன் இருந்த வயதான அந்தணரைக் கண்டதும் அவரையே தான் தேடிய குருவாக ஏற்றான். விழிகளில் நீர் சோர, கோவிலை வலம் வந்து அந்த முதியவர் காலடியில் வீழ்ந்தான்.
”என்னை உங்கள் அடிமையாக ஏற்று அருள்புரியவேண்டும்” என்று விழுந்த வாதவூரனை இதற்காகவே காத்திருந்த பெருந்துறை ஈசன் ஆத்மநாதர் முதியவர் உருவில் அணைத்து ஆட்கொண்டு சிவஞானம் போதித்தார். வாதவூரன் இனி சந்நியாசி உடலெல்லாம் வெண்ணீறு பூசிய சிவத்யானத்தில் ஆழ்ந்த சிவனடியார். கடல் மடையென சிவன் பாமாலைகள் வாதவூரன் நாவில் தோன்றி பரமேஸ்வரனிடம் நீ பாடுவது திருவாசகம், நீ மாணிக்க வாசகன் என்ற பெயர் பெற்றார் வாதவூரர். இனி அவரை மணிவாசகர் என்று அறிவோம்.
”பரிகளை வாங்கப்போன மந்திரி என்னவானான்? என்று ஆட்களை அனுப்பிய பாண்டியனின் ஆட்களிடம் இன்னும் ஒரு மாத காலத்தில் குதிரைகள் வந்து சேரும் என்று பதிலளித்தார் மணிவாசகர். குதிரைகளை மறந்தே போனார். கையில் இருந்த பொற்காசுகளை செலவழித்து பெருந்துறை ஈசன் ஆத்மநாதர் கோவிலை புதுப்பித்தார். கெடு சொன்ன ஒரு மாதம் முடிந்தும் குதிரைகள் வந்து சேராததால் போன பாண்டியன் மணிவாசகரை மதுரைக்கு அழைத்து வர செய்தான்.
”ஆத்மநாதா நீயே கதி. என்னை இக்கட்டிலிருந்து விடுபட்டு உன்னை நினைக்கச் செய்” என்று வேண்டிய மணிவாசகருக்கு ஆத்மநாதர் ஆறுதலளித்தார். ”மணிவாசகா நீ மதுரை செல், யாம் குதிரைகளோடு வருவோம்”மந்திரியாக மீண்ட மணிவாசகர் பெருந்துறை ஈசன் அளித்த பெருந்துறை ஈசன் பரிசளித்த வைரக்கல்லை பாண்டியனிடம் அளித்து ”பரிகளை வாங்கியாகிவிட்டது.
”நல்ல நாளான ஆவணி மூலம் அன்று பரிகள் வந்து சேரும்” என்று ஈசன் சொற்படியே கிளிப்பிள்ளையாக மணிவாசகர் சொல்கிறார். ”அரசே, என் மனம் இறைவனிடம் சென்றுவிட்டது. இனி அதிலிருந்து மீளாது. உலக வாழ்வில் எனக்கு இனி பங்கில்லை. ஊரார், உற்றார், சொந்தம் பந்தம் எல்லாம் இனி சிவனே. அவன் திருவடியே கதி.திருநீறே ஆபரணம். அவன் ருத்ராக்ஷம் ஒன்றே துணை” என்று சொன்னார் மணிவாசகர்.
ஆவணி மூலம் நெருங்கி விட்டது. குதிரை பற்றிய சேதி இல்லையே. வாதவூரன் பொய்யன், குதிரை வாங்க கொடுத்த செல்வத்தை திருப்பெருந்துறையில் கோவில் கட்ட செலவழித்து குதிரை வாங்கியதாக பொய்யுரைத்ததால் அவனை சிறைபிடித்து தண்டனை வழங்கினான். அரசன் கட்டளையிட்ட கடும் தண்டனைகளை மணிவாசகர் பொறுமையோடு ஏற்றார். மனம் சிவனையே நாடியது. பக்தனின் துயரம் கண்ட பரமன் காட்டில் இருந்த நரிகளை பரிகளாக்கி தன்னோடு அழைத்துக் கொண்டு பாண்டியனை குதிரை வியாபாரியாக அடைந்தான். இரவோடு இரவாக பரிகள் நரியாகின. பாண்டியன் கொடும் கோபத்தோடு வைகை சுடுமணலில் வாதவூரரை நிற்க வைத்து தண்டித்தான். அதிசயமாக அப்போது நீரற்ற வைகையில் வெள்ளம் கரை புரண்டு ஓடிவந்தது. அதிசயித்த பாண்டியன் மதுரை மூழ்கிவிடும் நிலையில் வைகையின் கரையைப் பலப்படுத்த பாண்டியன் மக்களை பணிக்கு அழைத்தான். வீட்டுக்கொரு ஆளாக எல்லோரும் பங்கேற்க கட்டளையிட்டான். வந்தி என்ற ஒரு பிள்ளையில்லாத கிழவியின் சார்பாக எவர் செல்வார்? வந்தி மதுரை சொக்கனின் பக்தை. ஆகவே அவனையே வேண்டினாள். பரமேஸ்வரனே ஒரு பணியாளனாக வந்தியிடம் வந்தான். ”பாட்டி நீ சுடும் பிட்டு எனக்கு ஒன்று கொடு அது போதும் உனக்காக நான் ராஜாவின் மண் கொட்டும் வேலைக்கு செல்கிறேன்” என்று வைகைக் கரை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டான். மேற்பார்வை யிட்டு வந்த பாண்டியன் வந்தியின் பணியாள் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவன் முதுகில் பிரம்பால் அடித்தான். அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. முதுகில் பிரம்படி பட்ட பரமேஸ்வரன் கையில் இருந்த மண்ணை வைகையில் கொட்ட அடுத்த கணமே வெள்ளம் வடிந்தது. அதே சமயம் மன்னன் உட்பட மதுரையில் அனைவரின் முதுகிலும் மன்னன் அடித்த பிரம்படி வலியைத் தந்தது.
அரிமர்த்தன பாண்டியனும் சிவபக்தன் ஆயிற்றே. அடுத்த கணமே தனது தவறை உணர்ந்தான். அனைத்தும் வாதவூரர் மூலம் மதுரை சுந்தரேஸ்வரர் நிகழ்த்திய திருவிளையாடல் என்பதை உணர்ந்தான். ஓடிச்சென்று வாதவூரரின் கால்களில் விழுந்து தன்னை மன்னிக்க வேண்டினான். வந்தியைத் தேடி ஓடினான். வந்தியை சிவகணங்கள் வானரதத்தில் ஏற்றி கைலாசம் செல்வதைக் கண்டான்.
”வாத வூரரே என்னை மன்னித்து பாண்டிநாட்டை நீங்களே ஆளவேண்டும்” என்று கதறினான். மணிவாசகர் அவனைத் தேற்றி அவனிடமிருந்து விடைபெற்று மதுரைச் சொக்கனை வணங்கிவிட்டு திருப்பெருந்துறை அடைந்தார். ”ஆத்ம நாதா, என் அந்தண குருவாக மீண்டும் காட்சி தரவேண்டும் என்று வேண்டினார். சிதம்பரம் செல்லும் வழியில் பல சிவாலயங்கள் சென்றார். உத்தரகோசமங்கை நடராஜன் தரிசனம் பெற்றார். சிதம்பரத்தில் நடராஜன் மணிவாசகரின் திருவாசகம் கேட்க விரும்பி அதை ஓலைச்சுவடிகளில் எழுதி நமக்கு திருவாசகம் கிடைத்தது.
ஈழ நாட்டரசன் தனது ஊமைப்பெண்ணுடன் சிதம்பரம் வந்தான். அவனது பௌத்த குரு மாணிக்கவாசகரை வென்று பாண்டிய சோழ மக்களை பௌத்தராக்குவேன் என்று சூளுரைக்க, பௌத்த குருவை வாதத்தில் மாணிக்கவாசகர் வென்று ஈழமன்னனின் ஊமைப்பெண்ணை பேசவைத்தார். பௌத்தனான ஈழ மன்னனும் ஈழ நாட்டு மக்களும் சைவர் களானார் கள். இது தான் சுருக்கமாக மணிவாசகர் சரித்திரம்.