ரெண்டு பூரண ப்ரம்ம ஞானிகள் . நங்கநல்லூர் J K SIVAN
ரெண்டு பேருமே பெரிய மடாதிபதிகள். ரெண்டுபேருக்கும் ஒரே பேர். ஸ்ரீ சந்திரசேகரன் என்று. ரெண்டு பேருமே நூறு வயசு வாழ்ந்து நம்மை ரக்ஷித்தவர்கள்.
ஒருவர் காஞ்சி மஹா பெரியவா சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி இன்னொருத்தர் ஸ்ரீ சந்திரசேகர பாரதி என்ற சிருங்கேரி பெரியவா. பாரதி, சரஸ்வதி ரெண்டுமே அம்பாளை ஞாபகப்படுத்தும் நாமங்கள். ரெண்டு மஹா பெரியவாளுக்குள்ளும் நல்ல பரஸ்பர நெருங்கிய தொடர்பு உண்டு. தளும்பாத ஞான நிறை குடங்கள். காஞ்சி மஹா பெரியவாளுடைய தாய்மொழி கன்னடம். சிருங்கேரி பெரியவா தாய் மொழிதெலுங்கு. மடாதிபதியான போது காஞ்சி சந்திரசேகரர் 13 வயது ஸ்வாமிநாதன். சிருங்கேரி சந்திர சேகரர் 20 வயது நரசிம்மன். ரெண்டு பேருமே குரு தீக்ஷை இல்லாமல் ஆஸ்ரம சுவீகாரம் பெற்று பட்டத்துக்கு வந்தவர்கள். காஞ்சி பெரியவா தானாகவே பல ஸ்தலங்களுக்கு சென்று பக்தர்களுக்கு ஞானோபதேசம் பண்ணியவர். சிருங்கேரி பெரியவர் எதிலும் பட்டுக் கொள்ளாமல் எங்குமே செல்லாமல் தனித்து தபஸிலே ஈடுபட்டவர்.
அவரிடம் ஒரு சமயம் யாரோ இதுபற்றி கேட்டபோது சிருங்கேரி பெரியவா சொன்ன பதில்:
”நானும் காஞ்சி பெரியவாளும் இக்காலத்தில் ஸ்ரீ சங்கர பகவத் பாதாளுடைய பிரதிநிதிகள். காஞ்சி பெரியவா பண்ணும் நல்ல காரியங்கள் எல்லாமுமே நானும் அவரோடு சேர்ந்து பண்ணியதாகவே வைத்துக் கொள்ளுங்கள். அவர் அடையும் கீர்த்தி என்னையும் சேர்வதாக எடுத்துக் கொள்ளுங்கள்”
இதற்கு உதாரணம், ஸ்ரீ T M கிருஷ்ணஸ்வாமி அய்யர் எனும் பாகவத சிரோமணி காஞ்சி மஹா பெரியவா ளித்திடம் சென்று திருப்புகழ் பாராயணம், பஜனை பண்ணியபோது, ”உனக்கு உன் பேரிலேயே பட்டம் இருக்கே பட்டம். ”TM ‘ . அப்படின்னா ‘திருப்புகழ் மணி”ன்னு அர்த்தம் என்று பட்டம் சூட்டினார். கிருஷ்ணஸ்வாமி அய்யர் கோயம்பத்தூரில் சிருங்கேரி பெரியவாளை பார்த்து நமஸ்கரித்து பஜனைகள் பண்ணி,அவரிடம் காஞ்சி பெரியவா சூடிய பட்டத்தை பற்றி சொன்னபோது சிரித்துக்கொண்டே ”நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து அளித்ததாக அதை எடுத்துக்குங்கோ” என்று சொன்னார்.
சிருங்கேரி பெரியவா ஆத்மஞானி,தனிமையில் அழுது சிரித்து, அவதூதராக ஆடிப்பாடிக் கொண்டிருப்பதைக் கண்ட ஒரு பக்தர் காஞ்சி பெரியவாளிடம் சென்று ”அவருக்கு பைத்தியம் பிடிச்சிருக்கோன்னு தோண்றது” என்று சொன்னபோது மஹா பெரியவாளின் காதில் அது நாராசம் போல் விழுந்து திடுக்கிட்டு, ”சிவ சிவா சிவ சிவா என்று உரக்க அலறி காதைப் பொத்திக்கொண்டார். அந்த பக்தரிடம் கோபமாக ”ஏண்டா நீ பைத்தியம்னா என்ன, சரியா இருக்கிறதுன்னா என்ன என்று சகலமும் கண்டவனோ? என்னமாடா சொல்லுவே அந்த வார்த்தை. போடா இங்கேருந்து முதல்லே . ஓடிப் போய் சந்நிதிலே சந்திரமௌளீஸ்வரர் கிட்டே மன்னிப்பு கேளு” என்று பொரிந்து விழுந்தார்.
அதேபோல 1935ல் கல்கத்தாவில் மஹா பெரியவா நவ்ராத்ரி பூஜை பண்ணியபோது சிருங்கேரி மடத்தை சேர்ந்த பக்தர் மந்தரேஸ்வர சர்மா நாலு நாள் பூஜைக்கு மட்டும் உதவியவர் , என்ன இருந்தாலும் சிருங்கேரி பத்ததியில் பாரதி ஸ்வாமிகள் பண்ற பூஜை போல் இது ஆகுமா ? என்று நடந்தே சிருங்கேரி வந்தவர் பாரதி ஸ்வாமிகளை பார்த்தபோது நடந்த விஷயம் ஸ்வாமிகளுக்கு தெரிந்துவிட்டது. கோபம் வந்துவிட்டது அவருக்கு.
”நாங்க ரெண்டு பேரும் வேறே வேறே ன்னு நீர் வித்யாசம் பாராட்டிண்டு பாதியிலே அங்கே பூஜையை விட்டுட்டு இங்கே வந்தது ரொம்ப மஹா தப்பு. ஒரு க்ஷணம் கூட இங்கே இனிமே நிக்காமே போம் அங்கேயே” என்று அனுப்பினார். மஹான்கள் எல்லோருமே எப்போதுமே ஒன்றே. நமக்கு தான் மனதில் வித்யாசங் கள் பிறக்கிறது.