கிருஷ்ண பசியும் தாகமும் – நங்கநல்லூர் J K SIVAN
”ராதையின் நெஞ்சமே……’ பி.சுசீலாவின் குரலில் கண்ணதாசன் போன்றவர்கள் பாடல்கள் கிருஷ்ணனை ஆனந்தமாக குளிப்பாட்டும் போது கேட்பதற்கு காது கொடுத்து வைத்திருக்க வேண்டும். எத்தனையோ ஆயிரம் வருஷமாக இன்னும் ராதை கிருஷ்ணனோடு ப்ரேமையோடு பாடிக்கொண்டு தான் இருக்கிறாள். ராதையின் நெஞ்சம் கண்ணனுக்கு மட்டுமே சொந்தம். பாட்டு எத்தனையோ கோடி நெஞ்சங்களுக்கு என்றும் சொந்தம்.என்னதான் எழுதினாலும் பேசினாலும் படித்தாலும் கேட்டாலும் ராதா–கிருஷ்ணன் பிரேம பந்தம் புரியாது. புரிய வைக்க முடியாது. பாதம் ஹல்வா படத்தை பல விதத்தில் வண்ணத்தில் பிரசுரித்தாலும், நாள் கணக்கில் அதன் ருசியை பற்றி வர்ணித்தாலும் எடுத்துரைத்தாலும், அதன் செய்முறை பக்குவம் பற்றி எழுதினாலும், அதன் உண்மையான ருசி தெரியப்போவதில்லை. ஒரு விள்ளல் வாய்க்குள் போனால் அன்றி ருசி அறியமுடியாது. அதற்கு ஈடு எதுவுமில்லை.
இது போல் ராதா-கிருஷ்ண பிரேமையை மனத்தில் உருவகப்படுத்திக்கொண்டு கண் மூடி ரசித்தால் மட்டுமே அதன் ருசி புரிபடும். அன்பு பாசம் நேசம் என்றால் என்ன என்று தெரியவரும். இது அவரவர் தானே ரசித்து அனுபவிக்க வேண்டியது.
கடவுளை எதற்காகவாவது வேண்டும்போது அவர் எப்படி அதை நிறைவேற்றுவார், எங்கு, என்றைக்கு, எவர் மூலம், என்ற எண்ணம் சந்தேகமாக எழுந்தால் அது முழு மனதுடன், நம்பிக்கையுடன் கடவுளை வேண்டுவது ஆகாது. சந்தேகம் நம்பிக்கையின்மையை காட்டுகிறது. ராதா கண்ணனை முழுமையாக நம்பினாள், தானே கண்ணன் என்று பாவித்தாள். சரணாகதியின் உச்ச நிலை இது. மீராவின் பாடல்களிலும் இந்த த்வனி எதிரொலிக்கும். அதுவும் MSS அம்மா குரலில். லதா மங்கேஷ்கர் குரலில் ஒலிக்கும்போது!
ராதை மற்ற கோபியரின் தலைவி இல்லை. அவள் தன்னை அப்படி நினைக்கவே இல்லை. அவளது கிருஷ்ண பக்தியும் பிரேமையும் தானாகவே மற்ற கோபியரையம் நம் பக்தர்களையும் அவளை வணங்கச் செய்தது. அடி தொட்டு பின்பற்ற செய்தது. உண்மையான ராதை நாம் பார்க்கும் சினிமா, டிராமா,நாடகம், நாட்டியம் புஸ்தகம் அதில் வரும் உருவம் இல்லை. காசுக்கு வேஷம் போடும் நடிகை ராதா ஆக மாட்டாள். ராதா கிருஷ்ணன் ப்ரேமை கண்மூடி கண்ணுக்குள் மனதுக்குள் அனுபவிப்பது. ஒவ்வொ ருவர் மனத்திலும் அவள் அவரவர் விரும்பிய வண்ணம் தோன்றுபவள். கிருஷ்ணன் ‘மாதிரி’ இல்லை. அவளே கிருஷ்ணன் தான்.
RADHA என்கிற எழுத்தை திருப்பி எழுதினால் ARADH, ADHAR என்று வருவது ஏன்? ராதா என்ற சொல்லே கிருஷ்ண ஆராதனையின் பிரதிபலிப்போ, தத்துவமோ? ராதா ஒவ்வொரு செயலிலும் சொல்லிலும் எண்ணத்திலும் கண்ணனையே ”ஆராதி”த்தவள், ‘ஆதார” மாக கொண்டவள் என்பதாலா?
ராதா ஒருநாள் பக்கத்திலுள்ள ஒரு கிராமத்துக்கு நடந்தாள். நேரம் ஆக ஆக சுடு மணலில் நடந்து கொண்டிருந்த ராதாவிற்கு எங்காவது ஒரு மர நிழலில் சற்று இளைப்பாரலாமே என்று தோன்றியபோது எங்குமே மரமோ நிழலோ ஒன்றுமே இல்லை. அவள் விடுவிடு வென்று சுடு மணலில் மேலும் நடந்தாள். ஏன் அப்போது அவள் கண்ணனை நினைக்கவில்லை? . ‘ மாட்டேன் மாட்டேன், அவனை நினைத்தால் அவன் இங்கு என்னோடு வந்து அவனும் இந்த சுடுமணலில் வாடுவான். இது என்னோடு போகட்டும். எங்காவது நிழலில் சென்று அவனோடு இளைப்பாருகிறேன்” என்று முடிவெடுத்தாள் .
”கண்ணா நீ என் கண்ணின் பாவை. என்னுள்ளே இருப்பவன். உன்னை உணர நீ என்னெதிரே தோன்றிய சிறு குழந்தை என்று நினைத்தால்,எண்ணினால் என் விழியின் சக்தியின்றி, கண்ணில் பாவையின்றி, பார்வை இன்றி, உன்னை எவ்வாறு காண்பேன்? சிறு குழந்தையாக நிற்கும் உன்னை எவ்வாறு கண்டு ரசிப்பேன்? எனக்கு பார்வையும் நீதான் பாவையும் நீ தான். உன்னுடைய மனித உருவை எனக்கு காட்டுகிறாயா? ராதா இவ்வாறு காண ஏங்கும்போது அவன் மதுராவில் இருந்தான். அவள் கண்ணை மூடினாள், அவள் முன் கண்ணன் தோன்றினான். ”கோபாலன் வந்தான் கோவிந்தன் வந்தான்” என்று கோபியர் ஆடிப் பாடும்போது ராதை அவன் வந்ததை பரிபூர்ணமாக உணர்ந்தாள். அவனை வழக்கமாக சந்திக்கும் மதுவனத்துக்கு ஒரே ஓட்டம் ஓடினாள். கண்ணன் இருந்த இடம், அவன் இன்னும் அங்கேயே இருப்பான் என்று காலமெல்லாம் யமுனையின் சுடுமணலிலும் , கொட்டும் மழையிலும் நின்றாள் . வனங்களில் அலைந்து தேடினாள். பறவைகளையும் பசு கன்றுகளையும் நீங்கள் கண்ணனைக் கண்டீர்களா என்று வினவினாள் . நம்மால் முடியுமா. முயற்சிக்கிறோமா? அவ்வளவு தீவிர பக்தி நமக்கு உண்டா?. முயற்சி திருவினை ஆக்குமே, கண்ணன் தோன்றுவானே!
அவனை நினைக்கும்போது ஒரு புத்துணர்ச்சி என்னுள் உணர்கிறேனே. ராதாவை நெஞ்சில் நிரப்பிக் கொண்டு இருக்கிறேனே. ”ராதா, உனக்கு என்ன வேண்டும் சொல்” என்றான் கிருஷ்ணன். ”நீ. உன் நினைவு”
அவள் பாடினாள். பாடிக்கொண்டே இருந்தாள். ”கிருஷ்ணா உனக்கு நினைவிருக்கிறதா? நீ அந்த காளிங்கன் பாம்பின் மீது நர்த்தனம் ஆடினாயே, நீ ஆடிய ஆட்டத்தில் உன் காலில் நீ அணிந்திருந்த தண்டை கொலுசு ”சலங் சலங்” என்று ஒலித்ததே அதை இன்னொரு முறை நான் கேட்க வேண்டுமே? உடனே கண்ணன் கால் தண்டை ஒலி அவள் காதில் கணீர் என்று கேட்டது. நாம் இப்போது எதற்கெடுத்தாலும் ‘தேங்க்ஸ்’ என்கிறோம். வார்த்தைகள் நாக்கில் இருந்து வெளியே வருகிறதே தவிர மனதில், நெஞ்சில் நன்றி உணர்ச்சி இல்லை. ராதை வேறு தினுசு. அவள் பேசாமல் ஆனந்தக் கண்ணீர் உகுத்தாள். தனை மறந்த நிலை அடைந்தாள் . .
ராதாவை புரிந்து கொள்ள அவளுக்கிருந்த கிருஷ்ண ”பசியும் தாகமும்” இருக்க வேண்டும். அவள் பக்தியும் பிரேமையும் எவ்வாளவு ஆழம் என்பதை நாமும் மூழ்கினால் தான் புரியும். ‘