பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
”நீ என்னோடேயே இரு”
படிக்கும்போது என்னை உலுக்கிய ஒரு சம்பவம் இது. இதில் வரும் ஐயங்கார் சுவாமி பிற்காலத்தில் அஹோபில மட ஜீயரான ஸ்ரீவண் சடகோப ஸ்ரீ ரங்கநாத யதீந்த்ர மஹா தேசிகன் ஸ்வாமிகள். பத்து பதினோரு வயதிலிருந்தே பெரியவாளோடு இருந்தவர். ”குழந்தே” என்று பெரியவாளால் வாத்சல்யமாக அழைக்கப்பட்டவர்.
இந்த ஜீயர் ஸ்வாமிகள் மகா பெரியவாவின் ஒரு ஜெயந்தி விழாவில் தனக்கும் பெரியவாளுக்கு உண்டான நெருக்கமான வாழ்க்கையை பற்றி மிக அருமையாக ஒரு சொற்பொழிவு ஆற்றினதை கேட்டேன். ஜீயர் ஸ்வாமிகள் நினைவு கூர்ந்ததில் சிலவற்றை, குறிப்பாக மஹா பெரியவளோடு ஜீயர் சம்பாஷணையை சுருக்கமாக்கினேன்.
” நீ எப்போ போகப் போறேன்னு நான் கேட்டது உன் ஊருக்கு நீ திரும்பறதை பத்தி இல்லை. ஏதோ அசல் தேசம் போக முடிவு பண்ணி ஏற்பாடு எல்லாம் பண்ணிண்டு இருக்கியே அதை.
” ஏற்பாடு என்று ஒண்ணும் பண்ணலை பெரியவா. வெளி நாட்டிலிருந்து வருஷம் ஒரு லக்ஷம் ஆத்துக்கு அனுப்பமுடியும் . மூணு வருஷம். எனக்கும் மாசம் மூணாயிரம் வெளிநாட்டு பணம் தரா . அது கிட்டத்தட்ட ஒரு லக்ஷம் ரூபா, இதர வருமானம் எல்லாம் சேர்த்து மொத்தமா நாலு லக்ஷம் வருமே. குடும்பம் ஏழ்மையில் இருக்கே என்று வெளிநாடு போகலாமோன்னு தோணித்து . பெரியவா அனுக்கிரஹம் பண்ணி போக உத்தரவு கொடுத்தா போகலாமேன்னு…”
”நாலு லக்ஷம் ரூபா வருதுன்னா உன் ஸ்வரூபம் போனா பரவாயில்லேங்கிறியா?” ஆசாரத்தை, சீலத்தை எல்லாம் பணம் வருதுங்கறத்துக்காக விட்டுடலாமா?
”ஸ்வரூபம் போனா என்ன பண்றதுன்னு தெரியலேயே . ஆசார சீலத்தை விட எனக்கு எண்ணம் இல்லை. குடும்ப கஷ்ட நிவர்த்தி ஒண்ணு தான் தெரியறது…பணம் தேவையாயிருக்கேன்னுட்டு…..”
”பணம் வேண்டாமே. என்னோடு இரேன். நாம சேர்ந்தே கஷ்டப்படுவோமே”
”…………..”
”இதோ பார் எனக்கு சாப்பிட்டு சாப்பிட்டு வயசாயிட்டுது. உனக்கு வாசிச்சு வாசிச்சு வயசாகணும்”
”பெரியவா இந்த வார்த்தை சொல்லலாமா?
”இல்லேடா நீ நிறைய வாசிச்சு பெரிய வித்வானா வரணும். இன்னும் பெரிய வித்வானா வரணும். நீ வெளியே எல்லாம் போக வேண்டாமே. ”
ஆசார்யாளின் வார்த்தையை ஜீயர் தட்டவில்லை. ஆசார்யன் கடாக்ஷம் இருந்தால் எல்லாமே சாதிக்க முடியும்.
”மஹா பெரியவா ஜகத் குரு. நான் பிரகாசமா வரப்போறேன்னு தெரிஞ்சிருக்கு. மனசிலே கொஞ்சம் அஞ்ஞானம் இருந்தது. சரி நான் போகல்லேன்னு சொல்லிட்டேன்.என்னோடு ஒரு மாசம் இருன்னார் . தீபாவளி அன்னிக்கு காலம்பற கங்கா ஸ்நானம் பண்ணிட்டு ஒரு ஒரு மரத்தடியில் உட்கார்ந்தார். ராயவரம் பாலு , அய்யங்கார் ரெண்டு பேர் மட்டும் இருந்தா போதும். மத்தவா போலாம் என்னுட்டார்.
”குழந்தே என்னோடு இருந்தாக்க அவன் மனசு சரியாயிடும்” னு சொன்னார். அப்புறம் நா ஜெர்மனி யெல்லாம் போகலே. இன்னொருத்தரை அனுப்பினேன்.’