ஒரு அற்புத ஞானி – நங்கநல்லூர் J K SIVAN சேஷாத்ரி ஸ்வாமிகள்
”அதோ போகிறான் விடோபா”
ஜீவனை நுண்ணிய வஸ்து என்பார்கள். அணுவுக்குள் அணு. பரமாணு. (பரம அணு).அதை எப்படி உருவமாக வர்ணிப்பது? உயிர் அப்படிப்பட்டது தானே. எங்கோ சாஸ்திரத்தில் ஒரு கற்பனை வர்ணிக்கப் பட்டிரு க்கிறது. பசுவின் வால் நுனியில் உள்ள ஒரு சிறு கேசத்தை (முடியை) நூறு பங்காக்கி அதில் ஒரு பங்கை பார்க்க முடியுமானால் அது கிட்டத்தட்ட ஜீவனின் அளவு என்று ! ஸூக்ஷ்ம சரீரமான இப்படிப்பட்ட ஜீவாத்மா ஒவ்வொருவருள்ளும் இருக்கிறது. அதை துல்லியமாக பார்க்கும் சக்தி சில மகா பெரிய ஞானிகளுக்கு உண்டு. அவர்களின் இந்த சக்தியைத் தான் ஸூக்ஷ்ம திருஷ்டி என்கிறோம். அப்படி ஒரு மஹான் ப்ரம்ம ஞானி சேஷாத்ரி ஸ்வாமிகள். அவருக்கு இந்த வித்தையெல்லாம் ஒரு சுண்டைக்காய். ஆத்ம சாக்ஷாத் காரம் அவ்வளவு சுலபம் அந்த ஞானிக்கு. பார்க்கும்போதே மட்டும் அல்ல ஒருவரைப் பற்றி நினைக் கும்போதே அவர் மனதில், அவர் ஆத்மாவின் எண்ணங்கள் ஓடுவது ஸ்வாமிகளுக்கு புரிபடும்.
தெருவில் ஒரு பிணத்தை யாரோ சுமந்து கொண்டு போனார்கள். சேஷாத்ரி ஸ்வாமிகள் பார்த்து விட்டார் அதை. அந்த பிணத்தின் முன் விழுந்து வணங்கினார்.
”அந்த ஆளைத் தெரியுமா உங்களுக்கு?” யாரோ கேட்டார்கள் சுவாமியிடம்.”மேலே அவர் ஆத்மா போய்க் கொண்டிருக்கிறதே அதை நமஸ்கரிக்கிறேன்” என்றார்.
நாம் மஹா கெட்டிக்காரர்கள். புத்திமான்கள். சர்வ சுதந்திரமாக இதெல்லாம் ”பைத்தியக்காரத்தனம், முட்டாள்தனம்” என்று கால் மேல் கால் போட்டுக்கொண்டு வாழைக்காய் பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டே சொல்லிவிடுவோம்.
கூடு விட்டு கூடு பாய்வது இது சம்பந்தப் பட்ட விஷயம். ஒரு உடலில் இருந்து ஜீவன் இன்னொரு உடலுக்குள் புகுவது தான் பர காய பிரவேசம். ஆதி சங்கரர் செய்திருக்கிறார், அருணகிரிநாதர் செய்திருக்கிறார்.திருமூலர் செய்திருக்கிறார் என்று படிக்கிறோம். விரல் விட்டு எண்ணக்கூடிய மஹான்கள் இன்னும் எத்தனையோ பேர். ஒரு உடல் விட்டதும் ஒரு கணம் கூட தாமதிக்காமல் அடுத்த தகுந்த உடல் காத்திருக்கும் அந்த ஆத்மாவுக்கு. அந்த ஆன்மா, ஜீவன், எந்த உலகத்துக்கு, எந்த உடலில் புகுந்தது என்று சேஷாத்ரி ஸ்வாமிகள் போன்ற ஆத்ம ஞானிகளுக்கு நன்றாக புலப்படுவது தான் சூக்ஷ்ம திருஷ்டி.
ஒரு சின்ன சம்பவம் சொல்கிறேன். ஸ்வாரஸ்யமாது.சின்ன குருக்கள் என்று ஒருவர். அவர் பெயர் உண்மையில் குப்புசாமி குருக்கள். அவருடைய வயதான தாய் மீனாம்பாள் பல காலம் காச நோய் அவதியில் தவித்து மரணத் தருவாயில் எந்த கணமும் இறந்துவிடும் நிலையில் இருந்தாள் . நேரம் வந்து விட்டது. மாலை நாலு மணிக்கு மேல்ஆகிவிட்டது. வீட்டில் இருப்பது குருக்களின் மாமியார் ஸ்வர்ணாம்பாள் இன்னொரு கிழவி. அவளுக்கு ரெண்டு கண்ணும் தெரியாது. அவள் மடியில் தலை வைத்து குருக்களின் அம்மா படுத்திருக்கிறாள். மூச்சு பிரிந்து விட்டது. ஆன்மா அமைதியாக வெளியேறிவிட்டது. ஸ்வர்ணாம்பாளுக்கு தனது மடியில் படுத்த இன்னொரு கிழவி மீனாம்பாளுக்கு உயிர் போனது தெரியாது. எங்கோ உள்ளே சமையல்கட்டில் குருக்களின் மாட்டுப்பெண் வேலையாக இருக்கிறாள். அவளுக்கும் தெரியாது. குருக்களோ திருவண்ணாமலை கோவிலில் வேலையாக இருக்கிறார்.
மீனாம்பாள் உயிர் பிரிந்த நேரத்தில் சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவண்ணாமலை வல்லாள மஹாராஜா கோபுரத்தின் அருகில் நிற்கிறார். மேலே பார்த்து ”அதோ மீனா போகிறாள். ஸ்வர்கம் போகிறாள்” என்று நாலைந்து முறை கத்தினார். அருகில் இருந்த எவருக்கும் புரியவில்லை. வழக்கம்போல் ஏதோ ”கிராக்” பைத்தியம் கத்துகிறது என்று அலக்ஷியமாக இருந்தார்கள்.
அதில் ஒரு சிலர் குருக்களுக்கு வேண்டியவர்கள். அவரிடம் சொன்னதும் அவர் அலறி அடித்துக்கொண்டு வீட்டுக்குப் போனதும் தான் அரை மணி நேரத்துக்கு முன்பு சேஷாத்ரி ஸ்வாமிகள் பார்த்தது தனது அம்மாவின் ஜீவன் என்று புரிந்திருக்கும். கிழவியின் மடியில் இருந்த மீனாம்பாள் பிணத்திற்கு செய்யவேண்டிய காரியங்கள் தொடங்கினார்கள்.
இன்னுமொரு அதிசயமும் சொல்லட்டுமா?
திருவண்ணாமலை பக்கத்தில் 10 கிலோ மீட்டர் தூரத்தில் போளூர் என்று ஒரு ஊர். அதில் விடோபா சுவாமி என்ற ஞானி, யோகி, வாழ்ந்துவந்தார். எல்லோருக்கும் அவரைத் தெரியும். நிறைய பக்தர்கள் அவரை தரிசித்து இருக்கிறார்கள். சேஷாத்ரி ஸ்வாமிகளுக்கு அவரைத் தெரியும்.
செக்கடி மேடு என்ற இடத்தில் போளூரில் ஒரு நாள் விடோபா சுவாமி தேக வியோகமானார். போளூர் சேஷாத்ரி ஸ்வாமிகள் இருந்த திருவண்ணாமலையிலிருந்து 10 கிமீ. தூரம்.
காலை சூரிய உதயம் ஆரம்பித்த நேரம். சேஷாத்ரி ஸ்வாமிகள் அன்ன சத்திரம் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். திடீரென்று திண்ணையை விட்டு எழுந்து தெருவில் நின்று மேலே பார்த்து ”அடடா, அதோ விடோபா போகிறான். ஹா ஹா என்ன ஜோரா விடோபா போகிறான் பார். ”என்று மேலே கையைக் காட்டி உரக்க கத்துகிறார். மேலே பார்த்துக்கொண்டே தெருவில் ஓடுகிறார்” .
அருகில் இருப்பவர்களால் மேலே ஒரு காக்கை பறப்பதை மட்டுமே பார்க்க முடிகிறது. காலை பதினோரு மணிக்கு கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் கழித்து எல்லோருக்கும் தந்தி போய் சேருகிறது விடோபா ஸ்வாமிகள் மறைந்தார் என்று.
இன்னும் என்ன சொல்ல இருக்கிறது. இருந்தாலும் என்னால் சொல்லத்தான் முடியுமா? நான் என்ன ஒரு ஞானியா? ANY ONE INTERESTED IN MY BOOK ON SESHADRI SWAMIGAL ”ORU ARPUDHA GNANI” in tamil pl contact me in whatsapp 9840279080 with your address.