ஒரு அற்புத ஞானி – நங்கநல்லூர் J K SIVAN
அதிசயம் தொடர்கிறது….!
வித்யா கர்வம் என்றால் தெரியும் அல்லவா. சில பண்டிதர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள், கல்விமான்கள் தங்களை போன்ற திறமை பெற்றவர்கள் கற்றவர்கள் வேறு யாரும் இல்லை, எனக்கு முன் இவர்கள் தூசு என்ற எண்ணத்தோடு பேசுவார்கள், பாடுவார்கள். நடந்துகொள்வார்கள். மற்றவர்களை அலக்ஷியப் படுத்து வார்கள். இப்படி ஒரு சிலர் கூடிய இடத்தில், நன்றாக கற்றுணர்ந்த சாதுவாக எல்லாரையும் தன்னை விட உயர்ந்தவர்களாக கருதும் நல்ல மனது கொண்டவர் ஒருவர் மேலே சொன்னவர்கள் கூடிய ஒரு சபையில் கலந்து கொண்டால்??? அவர் எப்படி அனலிலிட்ட மெழுகு போல் உருகுவார். அவஸ்தைப்படுவார்?
நான் இப்போது சொல்வது அப்படிப்பட்ட ஒரு சம்பவம். பானு கவி என்று ஒரு சிறந்த கல்விமான். திருவண்ணாமலையில் சேஷாத்ரி ஸ்வாமிகளின் பக்தர். சாது. ஸ்வாமிகள் பற்றி யாராவது பேசினாலே நெஞ்சம் உருகுபவர். நேரில் பார்த்தால் சிலையாக கண்களில் நீர் வழிய பக்தி பரவசத்தில் ஊமையாகி விடுவார். அதிகம் பேசமாட்டார். ம்ருது பாஷி.
இப்படிப்பட்ட சாது பண்பாளர் பானு கவியை சொற்பொழிவு ஆற்ற திருவண்ணாமலையில் ஒரு கல்விமான்கள் சங்கம் அழைத்திருந்தது. பானுகவி உண்மையில் சிறந்த பேச்சாளர். சிந்தனையாளர். நிறைய விஷய ஞானம் உள்ளவர். ”யோகமும் யோகியும்” என்ற தலைப்பு கொடுத்து பேச சொன்னார்கள்.
நிறைய பேர் கூடிய அந்த கூட்டம் திருவண்ணாமலை அன்னசத்திரம் மாடியில் நடந்தது. தலைவர் சிதம்பரம் மஹா மஹோபாத்யாய தண்டபாணி தீக்ஷிதர். மெத்த படித்த பிரபலம். மேலே சொன்ன வித்யா கர்வம் கொண்டவர். தலை கொழுத்தவர். பேச்சாளர்கள் ஒவ்வொருவராக பேசினார்கள்.
தலைவர் தீக்ஷிதர் ”அடுத்தபடியாக, யாரோ பானு கவியாம்.. அவர் ‘யோகமும் யோகியும்’ என்பது பற்றி பேசப் போகிறாராம். யோகம் மட்டும் பற்றி பேசிவிட்டு கரையேறினால் போதாதோ. எதுக்கு யோகியை அல்லாம் பற்றி ? சரி சரி என்ன தான் பேசுகிறார் இந்த ”பானு” (சூரியன்) ஏதாவது வெளிச்சம் போடுவாரா பார்க்கலாம்” என்று பேச அழைத்ததும் எல்லோரும் ஹா ஹா என்று சிரித்து விட்டார்கள். பானு கவி திடுக்கிட்டார்.
”என்ன இப்படி சொல்கிறாரே. நமது பேச்சு இங்கே எடுபடுமா?” என்று நினைத்தவருக்கு வாய் குழறியது. பேச இயலவில்லை. உதாசீனப் படுத்தவா கூப்பிட்டார்கள்? என்ற துக்கம் தொண்டையை அடைத்து, நாலைந்து வாக்கியங்கள் பேசவே தடுமாறினார். அனைவரும் சிரித்தார்கள். ”இது என்ன திருஷ்டி கழிப்பு இந்த வித்துவான்கள் கூட்டத்தில்” என்று முணுமுணுத்தார்கள். சிலர் எழுந்து போக ஆரம்பித்தார்கள்.
அந்த நேரம் பார்த்து புயல் போல் அந்த கூட்டத்தில் நுழைந்தார் சேஷாத்ரி ஸ்வாமிகள். எங்கே இருந்து வந்தார், எதற்கு வந்தார்? எப்படி அங்கே வந்தார். ஏன்? இதற்கெல்லாம் விடை தெரிந்தவர் ஸ்வாமிகள் மட்டுமே தானே.
சபையோர் அனைவரும் எழுந்து நின்று வணங்க, அவரைப் பார்த்த மறுகணமே பானு கவி விம்மி விம்மி அழுதார். ஸ்வாமிகளின் பக்தர் அல்லவா?
இதற்குள் சில நிமிஷங்களில் எல்லோரையும் பார்த்து ”ஹி ஹி ” என்று சிரித்துவிட்டு ஸ்வாமிகள் பானு கவியை பார்த்து ”உம் உம்” என்று கை உயர்த்தி ”ஆரம்பி” என்ற ஜாடை காட்டிவிட்டு வந்தவேகத்தில் அங்கிருந்து சென்றுவிட்டார்.
அடுத்த கணமே பானு கவிக்கு எங்கிருந்தோ ஒரு வேகம், அசுர சக்தி, தன்னம்பிக்கை தோன்றி அடுத்த ரெண்டு ரெண்டரை மணி நேரம் அசாத்யமாக யோகமும் யோகியும் பற்றி இதுவரை எவரும் அறியாத வகையில், அற்புதமான விஷயங்களை கடல்மடை திறந்தாற்போல பேசினார். அனைவரும் கைதட்டி மகிழ்ந்தார்கள். தலைவர் தீக்ஷிதர் ”அடடா என்ன ஞானம் இந்த பானு கவிக்கு ” என்று சிலாகித்து புகழ்ந்தார்.
பேசியது பானுகவி அல்ல. சேஷாத்ரி ஸ்வாமிகளின் சக்தி அவருள் நுழைந்து பிரவாகமாக பேச வைத்தது. என்று பானு கவியும் மற்ற அநேக பக்தர்களும் உணர்ந்தார்கள்.