திருவாசகம்…. ஒரு நினைவு. நங்கநல்லூர் J K SIVAN
ரமண மஹரிஷியின் அம்மா, அழகம்மா, திருவண்ணாமலைக்கே வந்துவிட்டாள் . கடைசி காலம்வரை அவரோடு ஆஸ்ரமத்தில் இருந்தாள் .தன்னாலான சேவைகளை ஆஸ்ரமத்தில் எல்லோருக்கும் செய்தாள். வயதாகி உடல்நிலை குன்றியது. அந்திம நேரம் நெருங்கிவிட்டது. நடமாட்டம் இல்லை. படுத்த படுக்கை. சில கணத் துளிகளில் அவள் உடலிலிருந்து உயிர் பிரியப்போகிறது என்று மஹரிஷிக்கு தெரியும். ஆகவே அருகே அமர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அம்மா மோக்ஷம் எய்தினாள்.++
திருவாசகம் என்ற போது ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று பரமேஸ்வரன் ஒரு கிழ பிராமணன் உருவில் பட்டை பட்டையாக விபூதி பூசியவராக மாணிக்க வாசகர் தங்கி யிருந்த மடத்திற்கு வருகிறார். மாணிக்கவாசகரிடமே கேட்கிறார்.”ஐயா மாணிக்கவாசகர் என்பவர் இங்கே தானே இருக்கிறார்?” ”ஆமாம் ஸ்வாமிகள். உங்களுக்கு என்ன கைங்கர்யம் நான் செய்யவேண்டும் சொல்லுங்கள். சந்தோஷமாக செய்கிறேன்.””அவரைப் பார்க்கவேண்டுமே .அவரிடம் ஒரு கார்யம் ஆகவேண்டும்””அடியேன் தான் அது. சொல்லுங்கள் செய்கிறேன்.””ஆஹா , நீங்கள் தானா அது.? நீங்கள் பாடிய ‘திருவாசகத்தை’ இன்னொரு முறை எனக்கு சொன்னால் அதை என்னுடைய ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்ள விரும்புகிறேன் ஐயா””ஈஸ்வரன் ஆணை. அப்படியே ஆகட்டும்.இப்போதே ஆரம்பிக்கிறேன்”
இருவரும் அமர்ந்து கொள்ள. மாணிக்கவாசகர் திருவாசகம் 658 பாடல்களையும் பாடுகிறார். முதியவர் ஓலைச்சுவடிகளில் படி எடுக்கிறார்.
முடித்தவுடன் அத்தனை ஓலைச் சுவடிகளையும் முதியவர் சிதம்பரம் நடராஜர் சந்நிதிக்கு எடுத்துச் சென்று அங்கே பாதத்தில் வைத்து விட்டு மறைந்துபோகிறார்.
மறுநாள் ஆனி மாதம் மக நக்ஷத்ரம். நடராஜர் சந்நிதிக்கு வந்த தீக்ஷிதர்கள் கதவுகளைத் திறந்தவர்கள் நடராஜன் பாதத்தின் கீழ் நிறைய ஓலைச்சுவடிகள் இருப்பதை கண்டு ஆச்சர்யம் அடைகிறார்கள். ஒவ்வொன்றாக பார்த்து கடைசி ஓலையில் ‘மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான்’ எழுதியது என கையொப்பம் இடப்பட்டிருந்ததைப் பார்த்ததும் மயிர்க்கூச்செறிகிறது.
மாணிக்கவாசகர் தங்கி இருக்கும் மடம் அவர்களுக்கு தெரியுமே. அங்கே ஓடி வருகிறார்கள். அவரிடம் தாங்கள் கண்ட அதிசயத்தை சொல்லும்போது மணிவாசகர் கண்களில் ஆனந்த பாஷ்பம். உடல் வியர்க்கிறது. நடராஜன் மேல் கொண்ட பக்தியால் உடல் நடுங்குகிறது. ”அவனேயா வந்து என்னருகே அமர்ந்து நான் சொன்னதை எழுதிக்கொண்டவன். அம்பலவாணா , திருச்சிற்றம்பலம். ஓம் நமசிவாய”என்று ஆடுகிறார். ஆலயத்துக்கு ஓடிவருகிறார். அங்கே திருவாசக பாடல் ஓலைச்சுவடிகள் இருப்பதை பார்க்கிறார். கடைசி ஓலையில் நடராஜ பெருமான் கையொப்பத்தை கண்டு மணிவாசகர் ப்ரமித்தார் .
‘ஆம் அடியேன் சொல்ல எழுதப்பட்டது தான்’’ என்றார். சிதம்பரம் தீட்சிதர்கள் மற்ற எல்லா பக்தர்களும் மணிவாசகரை நமஸ்கரித்து வேண்டினார்கள்.”சுவாமி எங்களுக்கு நீங்கள் திருவாசகத்திற்கு பொருள் கூறவேண்டும்”
மணிவாசகர் நடராஜனைச் சுட்டிக்காட்டினார். ”இதோ நடராஜன் இருக்கிறானே. இந்த அனைத்துப் பாடல்களுக்கும் இவன்தான் பொருள்’’ என்றார்.அப்புறம் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. மணிவாசகர் சொல்லி முடித்த அடுத்த கணம் அங்கே ஒரு ப்ரகாசமான கண்ணைப்பறிக்கும் ஒளி ஒன்று தோண்றியஹது. காந்தம் இழுத்த இரும்புத்துண்டு போல மணிவாசகர் அதைப் பின் தொடர்ந்து கர்பக்ரஹத்துக்குள் சென்றார். உள்ளே சென்றவரை அப்புறம் காணோம் .அப்படியேசிவபெருமானோடு கலந்து விட்டார்.திருவாசகம் சிவபுராணம் எனவும் பெயர் கொண்டது. மாணிக்கவாசகர் சொல்ல சிவபெருமான் திருவாசகம் எழுதிய இடம் சிதம்பரத்தில் உள்ளது. நான் அங்கே சென்று காணும் பாக்யம் இன்னும் பெறவில்லையே. வடக்கு கோபுரத் தெருவும் கிழக்கு கோபுரத் தெருவும் சந்திக்கும் இடத்திலிருந்து சுமார் 5 நிமிட நடையில் உள்ளது. காமராஜர் பள்ளிக்கூடத்திற்கு அருகில் வேங்கன் தெருவில் உள்ள ஆத்மநாதர் கோயில் அல்லது மாணிக்கவாசகர் மடம் என்று கேட்டு போகலாம் என்று அறிந்தேன். ஒருநாள் போகவேண்டும். எப்போதோ?
அங்கு ஒரு அதிசயம். சந்நிதி படி தாண்டி எந்த கதிர் வீச்சும் உள் ளே வராது. இன்டர்நெட் வேலைசெய்யாது.