எல்லாமே சுத்த பொய் – நங்கநல்லூர் J K SIVAN
மணிவாசகர்
உங்களில் எத்தனை பேர் மாணிக்க வாசகரின் திருவாசகம் மனமுருக படித்திருக்கிறீர்கள்.. படித்தவர்கள் பகவானிடத்தில் சரணடைவது பற்றி எண்ணியவர்களா? எல்லோரையும் விட ஏன் மாணிக்க வாசகர் எழுத்துக்கு மட்டும் இவ்வளவு சிறப்பு? ”திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்” என்று எப்படி பேர் வந்தது?
தனது வாழ்நாளின் ஒவ்வொருநாளின் ஒவ்வொரு கணத்தையும் சிவன் பால் வைத்தவர். சித்தத்தை சிவன் பாலே வை என்றவர் மணிவாசகர். அவர் வாசகங்கள் மணி மணியானவை என்பதால் தான் அவர் மணி
வாசகர். அவருக்கு இந்த பேரை வைத்ததே பரமேஸ்வரன் தான். அவர் இயற் பெயர் வாதவூரர்.
இன்று ஒரு பாடல் படித்தேன். அதை மட்டும் சொல்கிறேன். ருசி பாருங்கள்.
”யானேபொய் என்நெஞ்சும் பொய் என்அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே”
பரமேசா, நான் எனது இனிஷியல், பெயர், பட்டம், பதவி, பணம், உருவம், உடல் அழகு, என் போட்டோக்கள், என் நகைகள், சகலமும் சுத்த பொய் . நான் ஒரு ‘சும்மா’ வெத்து ஆசாமி. எனக்குள் மனம் என்று ஒன்று இருக்கிறதே அடேயப்பா, அதைப்போல ஒரு ரௌடி உலகத்திலேயே வேறே எதுவும் கிடையாது. ரொம்ப ரொம்ப அநியாய மானது. அது சொல்வது செய்ய வைப்பது எல்லாமே பலே பொய். எப்படியெல்லாம் என்னை ஆட்டி வைக்கிறது! அதன் முடியாமல் தவிக்கிறேன்.
நான் மற்றவர்களிடம் இருப்பது போல் காட்டிக் கொள்ளும் அன்பு இருக்கிறதே அதுவும் ஒரு வடிகட்டின பொய். சிவாஜி கணேசனை விட உயர்ந்த நடிப்பு என்னுடையது.
ஆனால் ஏதோ எப்போதோ செய்த முன் ஜென்ம புண்யத்தால் மேலே சொன்னதை எல்லாம் உணர்ந்து என்னைப் பற்றி நன்றாக தெரிந்துகொண்டு ”பகவானே, நீ ஒருவன் தான் மெய், சத்யம் உண்மை என்பது நீ ஒருவன் தான், என்று உன்னை அடைய உருகி உருகி அழுகிறேன் பார், அது பொய் இல்லை. அது உனக்கே தெரியும். அதால் தான், அப்படி மனம் உருகி அழுதால் தான் உன்னை அடைய என்னால் முடியும், அதனால் தான் உன்னை மனமுருக கெஞ்சுகிறேன்.திருவாசகம் என்னை அப்படி உருக பழக்குகிறது. படித்தால் உங்களுக்கும் உதவும். உருக வைக்கும்.
நீயே என் தேன் , அமுது, கரும்பு ரஸம், மற்றதெல்லாம் பொய் . நீ ஒருவன் தான் எனக்கு உன்னை அடையும் வழியை காட்ட முடிந்தவன். அதற்கு அருள் புரிவாயப்பா.
எவ்வளவு பக்தி உணர்வு மணிவாசகருக்கு
ஆஹா கொஞ்சூண்டு நாலு வரியில் எவ்வளவு பெரிய சாசுவதமான மோக்ஷ மார்க்கம். பேருண்மை.
இனிமேல் அடிக்கடி மாணிக்க வாசகர் படிக்கலாமா?