ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN
ஆதி சங்கரர்
பஜ கோவிந்தம் ஸ்லோகங்கள் 19-20
19 .योगरतो वाभोगरतोवा सङ्गरतो वा सङ्गविहीनः । यस्य ब्रह्मणि रमते चित्तं नन्दति नन्दति नन्दत्येव ॥ १९॥
Yoga ratho vaa bhogaratho vaa, Sanga ratho vaa sanga viheena, Yasya brahmani ramathe chittam, Nandathi nandathi nandathyeva.
யோகரதோவா போகர தோவா சங்கர தோ வா சங்க விஹீன யஸ்ய பிரம்மணி ரமதே சித்தம் நந்ததி நந்ததி நந்தத் யேவ:
இந்த ஸ்லோகத்தை ஆதிசங்கரரின் சிஷ்ய கோடிகளில் ஒருவரான ஆனந்தகிரி என்பவர் இயற்றியுள்ளார். பேரே ”ஆனந்த” மயமாக இருக்கிறதே. சங்கரரின் ஒவ்வொரு சிஷ்யருமே மணி மணியாகத் தான் இருந்திருக்கிறார்கள், எழுதியுமிருக்கிறார்கள். இல்லையா பின்னே? குரு யார் ? எப்படிப்பட்டவர்?
”அப்பா, மானிடா, சந்தோஷம் உனக்கு பல வழிகளில் வரும். ஒன்று த்யானத்தில், அல்லது உலக கேளிக்கைகளில் ஈடுபாடுகளில், அல்லது நாலு பேரின் கூட்டத்திலோ, சங்கத்திலோ, பல விஷயங்களை, பலபேரிடம் பல பேரைப்பற்றியும் கூட, அவதூறாக கேலியாக பேசி, சிரித்து, அதில் சுகம் காண்பது, அல்லது, தனிமையில் சுகம் காண்பது. இது எதுவுமே சாஸ்வதம் இல்லையே தம்பி! . நன்றாக அறிந்துகொள். தன்னில் ‘தன்னை’ த்தேடி, ‘தானே’ யாகும் சுகம் தான் பாமரன் பரமனோடு சேர்ந்து திளைக்கும் சுகம். மனம் ஒன்றே
அனைத்து மாகும் இன்பம். இது தான் திருமூலர் ”அன்பே சிவமாய் அமர்ந்தி ருந்தாரே’ என்று சொன்ன நிலைப்பாடு. அதே பரமானந்தம். இது கிடைக்க முதல் படிக்கட்டு கோவிந்தன் நாமத்தை மனமார உச்சரித்தல்.
‘ கோவிந்தா’’ என்று அடிவயிற்றிலிருந்து உணர்ச்சி பூர்வமாகச் சொல். உனக்கே அந்த இன்ப அனுபவம் புரியும். இது கிடைக்க முதல் படிக்கட்டு கோவிந்தன் நாமமே.
20. भगवद् गीता किञ्चिदधीता गङ्गा जललव कणिकापीता ।सकृदपि येन मुरारि समर्चा क्रियते तस्य यमेन न चर्चा ॥ २०॥
Bagavat geetha kinchid adheetha, Gangaajalalava kanikaa peetha, Sukrudhapi yasya murari samarcha, Tasya yama kim kuruthe charchaam.
பகவத் கீதா கிஞ்சித்த தீதா கங்காஜல லவ கணிகா பீதா சக்ரிதபி என முராரி சமர்ச்சா க்ரியதே தஸ்ய யமேன ந சர்சா
இந்த அருமையான ஸ்லோகத்தை எழுதிய ஆதிசங்கரரின் இன்னொரு அருமையான சிஷ்யர் த்ரிடபக்தர். இப்படி ஒருவர் சிஷ்யரா? உண்டா? என்றால் உண்டு என்று இதன் மூலம் அறிவது சால சிறந்தது. அவரை நாம் இதுவரை தெரிந்து கொள்ளாததால் நஷ்டம் ஒன்றும் அவருக்கு இல்லை. அவர் என்ன சொல்கிறார்:
‘’ஹே மனிதா! நல்ல பிள்ளையாக நான் சொல்வதைக்கேள். நீ அதிகம் ஒன்றுமே செய்யவேண்டாம். வெகு சுலபமாக நம்மைத் துரத்தி வரும் இந்த யமனை விரட்ட ஒரு ரகசியம் சொல்கிறேன். அதைக்கேட்டு அதன்படி நட. அது போதும். சின்னதாக மூன்று விஷயம் போதும்: அது என்ன தெரியுமா.காதைக் கொடுத்து கேள் :
1. தினமும் முடிந்தால் ஒன்றோ ரெண்டோ, ஸ்லோகங்களே போதும், எதிலிருந்து? , பகவத் கீதையிலிருந்து தான். அர்த்தம் புரிகிறதோ இல்லையோ, விடாமல் படி, கேள். கொஞ்சம் புரிகிறதா என்று யோசி. நாளாக நாளாக கொஞ்சம் கொஞ்சமாக எல்லாமே நன்றாக புரியும்.
2. அப்புறம் ஒரே ஒரு உத்ரணி கங்கா ஜலத்தைப் பருகு. எங்கோ தென் கோடியில் இருந்தாலும் நமக்கு சிறு சிறு பாட்டில்களில் கிடைக்கிறதே. யாராவது போய் வந்தவர்கள் கொடுப்பார்களே , அதில் ஒரு துளி பருகு. ஒரு சில துளிகள் உன் மேல் தெளித்துக்கொள். ப்ரோக்ஷணம் என்று பெயர் அதற்கு. (யாரிடமாவது எனக்கு கொடுக்கும் அளவுக்கு கங்கை ஜலம் இருந்தால் கொடுத்தால், அனுப்பினால், அட்வான்ஸ் நன்றி)
3. அந்த முராரி, அது தான்,நம்ம கிருஷ்ணன், அவனை எப்போதாவது ஒரு தரமாவது சில வினாடிகள் நினை.
இதெல்லாம் செய்து முடித்துவிட்டாயா? இப்போது திரும்பிப்பார். உனக்குப் பின்னால் எப்போதும் தொடர்ந்து வந்த ஒரு கருப்பு எருமை மேல் கையில் கயிற்றோடு ஒருவன் உன்னை பிடிக்க வந்து கொண்டிருப்பானே , எங்கே அவன்? நீ செய்த காரியங்கள் அவனை எங்கேயோ விரட்டி விட்டதா? எங்கே போனான் அந்த யமன்?”
நண்பர்களே, இந்த ஸ்லோகத்திலிருந்தாவது அந்த கோவிந்தனின் நாமத்துக்கு என்ன சக்தி என்று புரியுமே . விடாமல் சொல்ல ஆரம்பிக்க வேண்டியது தான் இனிமேல் ”ஹே கோவிந்தா, ஹே கோபாலா, ஹே முராரி! . சொன்னால் வாயினிக்குமே. இந்த ஸ்லோகத்திலிருந்தாவது அந்த கோவிந்தனின் நாமத்துக்கு என்ன சக்தி என்று புரியும்.