பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
தூங்குவதற்கு முன்
மஹா பெரியவாவின் நூறு வருஷ வாழ்க்கையில் எண்ணற்ற உபதேசங்கள் எத்தனையோ பேருக்கு கிடைத்திருக்கிறது. அவர் பேசியவை எழுத்தில், ஒலி நாடாவில் பதிந்திருக்கிறது. கேட்க கேட்க ஆனந்தம் தருபவை. எதையும் யோசிக்காமல், சிந்திக்காமல், ஆராயாமல் பேசியதே கிடையாது. பரிபூர்ண ஆத்மானுபவத்தோடு கலந்த வார்த்தைகள் அவை.
இதோ கொஞ்சம் அனுபவியுங்கள் :
வாழ்நாள் முழுக்க ஒருத்தன் எதைப்பற்றி அதிக நேரம், அடிக்கடி, நினைத்துக் கொண்டிருக்கிறானோ, அவன் மனசில் அது ஜாஸ்தியாக நின்றுவிடுகிறது. ஆகவே அதுவே அவனது கடைசி காலத்திலும் நினைவில் வந்து நிற்கும். ஆகவே தான் மனதில் அதிகமாக, அடிக்கடி பகவத் ஸ்மரணம் நிலைக்க வேண்டும். இது நமக்கு வருமா? என்று நிச்சயப்படுத்திக் கொள்ள ஒரு சின்ன பரீக்ஷை செய்து பார்ப்போம்.
ஒவ்வொரு நாளும் இரவு தூங்கப்போகிறோம் அல்லவா? ஒவ்வொரு இரவு நித்திரையும் ஒரு குட்டி மரணம் ரிஹெர்சல், ஒத்திகை மாதிரிதான் என்று சாஸ்த்ரங்களில் சொல்கிறது. தூங்குகிறபோது கட்டை போல ஒன்றும் தெரியாமல், ஞானமே இல்லாமல்தானே கிடக்கிறோம்? இதனால்தான் இப்படிச் சொல்லியிருக்கிறது.
‘நித்யப் பிரளயம்’ என்று தூக்கத்துக்கு ஒரு பெயர். இப்படி ஒவ்வொரு நாளும் நாம் ‘சாகிற’போது பகவானை யே ஸ்மரித்துக் கொண்டு ‘சாக’ முடிகிறதா என்று அப்யாஸம் பண்ணிப் பார்ப்போம்.
தூங்குவதற்கு முன் நம் இஷ்ட தேவதையை நினைத்து வேண்டிக் கொள்வோம். அந்த நினைப்போடே யே தூக்கத்தில் ஆழ்ந்துவிட வேண்டும். வேறே நினைப்பு வரக்கூடாது. இப்படி நான் சொல்லும்போது ஸுலபமாக இருக்கும். ஆனால் அதை பண்ணிப் பார்த்தால் எத்தனை கஷ்டம் என்று தெரியும். மனது கூசாமல் எங்கெங்கோ ஓடிவிடுமே .
காமாக்ஷியோ, நடராஜாவோ, தக்ஷிணாமூர்த்தியோ, வேங்கடரமண ஸ்வாமியோ, முருகனோ -எந்த தெய்வ மாக வேண்டுமானாலும் இருக்கட்டும்/ அந்த இஷ்ட தெய்வத்தையே அல்லது தெய்வத்துக்கு உவமானமாக நமக்குச் சாந்தியும் ஸந்துஷ்டியும் தருகிற ஒரு குரு அல்லது மஹானையோ வேறே நினைப்பு வராமல் ஸ்மரிப்பதென்றால், ‘இதிலே என்ன கஷ்டம் இருக்கிறது?
மனஸுக்கு ரம்யமாகவும். ஆறுதலாகவும் இருக்கப்பட்ட இந்த ரூபங்களை நினைப்பதில் என்ன
சிரமம்?’ அப்படி என்றுதான் தோன்றும். ஆனால் எதனாலோ, சிறிது நேரமானால் இத்தனை நல்ல, திவ்யமான ஸ்மரணையை விட்டுவிட்டு மனஸ் வேறெங்கேயாவதுதான் போய் விழும். அப்படியே கண்களை
அசத்தித் தூக்கத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்.
இப்படி ஏமாறாமல் பழக்கிக் கொண்டால் சாகிற ஸமயத்திலும் பகவானை விடாமல் நினைக்க முடியும்
என்ற நிச்சயத்தைப் பெறலாம். எல்லாம் அப்யாஸத்தில், விடாமுயற்சியில் தான் இருக்கிறது. நம்முடைய
சிரத்தையைப் பொருத்து பரமாத்மாவே கைகொடுப்பார்”
விடாமல் தொடர்ந்து முயற்சித்து நடைமுறையில் கொண்டு வர முயல்வோம்.