பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
காமாக்ஷி தான் அது !
இன்று ஆடி வெள்ளி. அம்பாளை பல கோவில்களில் கண்டு பக்தர்கள் தரிசித்து ஆசி வேண்டும் விசேஷ நாள்.
மாதுரி மீனாக்ஷி ஆலயத்திலும், காஞ்சிபுரத்தில் காமாக்ஷி அம்மன் கோவிலிலும் எவ்வளவு பேர் வரிசையாக மணிக்கணக்காக காத்திருப்பார்கள் என்று ஒரு கணம் கண்ணை மூடி யோசித்தேன். காமாக்ஷி தோன்றினாள் , அவளே அடுத்தகணம் பரமாச்சார்யார், மஹா பெரியவர் முகமாக தோன்றி புன்னகைத்தாள். பெரியவா தான் காமாக்ஷி. மகா பெரியவா எப்போதும் காமாக்ஷி தியானமாக தானே இருப்பவர். பூஜை அபிஷேகம் செய்பவர்.ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது .
அன்றும் வெள்ளிக்கிழமை இதே போல். காஞ்சி புறம் காமாக்ஷி அம்மனுக்கு மஹா பெரியவா வழக்கம்போல அபிஷேகம் முடிந்து அலங்காரம் அர்ச்சனை செய்யும் போது, அவரது அணுக்கத் தொண்டர்களில் ஒருவரான தியாகராஜ பண்டிதர் , ஓரு வெள்ளை வேஷ்டியை திரை யாக மறைத்து இருபுறமும் கைகளால் இழுத்து தூக்கி பிடித்துக்கொண்டு திரை போட்டு நின்றார். திரையின் முனையைப் பிடித்துக் கொண்டு அலங்காரம் முடிந்து , தீபாராதனைக்கு தயாராகும் வரை நிற்பார் .சில நிமிஷங்களில் பெரியவா மணி அடிப்பார். திரை விலகும்.பண்டிதர் உயரமான மனிதர். பெரியவா அலங்கார முடிந்து மணி அடிக்கும் வரை திரையை பிடித்து கொண்டிருப்பாராம் . அன்று என்னவோ அவர் திரையை பிடித்து கொண்டிருக்கும் போது வழக்கத்தை விட அதிக நேரம் ஆகிவிட்டது. ஏன் இவ்வளவு நேரம்? பெரியவா இவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளமாட்டாரே ,ஏன் இன்னும் திரை திறக்க மணி அடிக்கவில்லை? என்ன ஆயிற்று? ரொம்ப நேரமாக பண்டிதர் இரு கைகளாலும் திரை பிடித்திருப்பதால் கைகளில் வலி எடுத்தது. வலியில் கை கொஞ்சம் கீழே தாழ்ந்துவிட்டது. சில வினாடிகள் தான். அந்த நேரத்தில் உயரமான பண்டிதருக்கு திரைக்கு உள் பக்கத்தில் நடப்பது கண்ணில் தெரிந்தது.
ஆஹா! பண்டிதர் கண்ட காட்சி அவரை சிலையாக மாற்றிவிட்டது. மூச்சு நின்று போய்விடும் போல் ஆகிவிட்டது.கால்கள் தடுமாறின.
திரைக்கு உள் புறம் மஹா பெரியவா அபிஷேகம் அர்ச்சனை பண்ணிக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறவர் மடியில் ஒரு சின்ன தங்க நிற நான்கு ஐந்து வயது குட்டிப் பெண் குழந்தை. அழகாக பச்சை நிற பட்டு பாவாடை அணிந்து,அதற்கேற்ப சட்டை அணிந்து, கை கழுத்து,கால்,இடையில், சர்வாலங்கார பூஷிதையாக, தலை நிறைய சுருள் முடி, கரு நிற முடியை அழகாக வாரி பின்னல் போட்டு, தலை நிறைய அழகிய மணமிக்க மலர்கள் சூடிக்கொண்டு,சிவப்பு வாயுடன், நெற்றியில் அழகிய பெரிய பொட்டு வைத்துக் கொண்டு பெரியவாளுடன் கொஞ்சி விளையாடுகிறது. எதிரே அதே நேரம் எங்கே காமாக்ஷியைக் காணோம்? எங்கே போனாள் காமாக்ஷி அம்மன்?
இதெல்லாம் ஒரு க்ஷண நேரம் தான். மஹா பெரியவா கையில் கமண்டலத்தில் இருந்து ஒரு துளி ஜலத்தை மேலே பண்டிதர் முகம் நோக்கி வீசினார்.மீண்டும் பண்டிதர் பூலோகத்துக்கு, காஞ்சிபுரத்துக்கு,காமாக்ஷி அம்மன் ஆலயத்துக்கு வந்து விட்டார்.அது மட்டுமல்ல, அவர் இரு கரங்களும் வெள்ளை வேஷ்டி திரையை சரியாக உயர்த்தி பிடித்தன. சில நிமிஷங்கள் ஓடின.
பூஜை முடிந்து பெரியவா மணி அடித்தார். திரையை விலக்கினார் பண்டிதர். அவர் மனதில் ஆயிரம் கூரான ஈட்டி முனை கேள்விகள்?
யார் அந்த குழந்தை?,எங்கிருந்து எனக்கு தெரியாமல் உள்ளே சென்றாள்? எதற்கு மஹா பெரியவா மடியில் போய் அமர்ந்தாள்? மடத்தில் இந்த விஷயம் தெரிந்தால் என்னை எவ்வளவு கேள்விகள் கேட்பார்கள்? அதெல்லாம் சரி,நான்பார்த்த அந்த ஒரு க்ஷணத்தில் எனவே அம்மன் சந்நிதியில் அம்பாள் காமாட்சியை காணவில்லை? எப்படி காமாக்ஷி அம்மன் விக்ரஹம் காணாமல் போகும்? இவ்வளவு நேரம் மஹா பெரியவா அலங்காரம் பண்ணி அர்ச்சனை பண்ணிக் கொண்டிருந்தாரே. அம்பாள் தான் குழந்தையோ? எனக்கு இருவர் தரிசனமும் கிடைத்ததே.நான் பாக்யசாலியா?
அதிர்ச்சியும், ஆனந்தமும் ,குழப்பமும்,அரை மயக்கமுமாக தான் திரையை விலக்கினார் பண்டிதர். எல்லோரும் கன்னத்தில் போட்டுக்கொண்டு கண்களில் ஆனந்தகண்ணீரோடு அம்மனை தரிசித்தனர். காமாக்ஷி அம்மனுக்கு தீப ஆராதனை பண்ணிக்கொண்டிருந்தார் மஹா பெரியவா. பண்டிதர் உன்னிப்பாக கவனித்தார். எங்கே அந்த குழந்தையை இப்போது காணோம்?
பக்தர்கள் யாவரும் வழிபட்டு மடங்கினர். பயத்தோடும் அதிர்ச்சியோடு, மனக்குழப்பத்தோடும்,குற்ற உணர்ச்சியோடும் பண்டிதர் துடித்துக் கொண்டிருந்தார்.
எல்லோருக்கும் ஆசி வழங்கிய பின் மஹா பெரியவாவின் கண்கள் பண்டிதரைத் தேடின. ஓரமாக கை கட்டி நின்றவரை சொடுக்கு போட்டு கூப்பிட்டார்.”இங்கே வா ”
”என்ன ஒரு மாதிரியா இருக்கே?பக்தி பணிவோடு..தன் குழப்பத்தை திக்கித் திக்கிச் சொன்னார் பண்டிதர். கண்களில் கண்ணீர். பெரியவா அமைதியாக பேசினார்.”ஆமாம், நீ கண்டது ஸ்ரீ காமாக்ஷி அம்மனை தான்..உனக்கு இன்று தரிசிக்கும் பாக்கியத்தை அம்பாள் கொடுத்திருக்கா.இல்லேன்னா உன்னாலே அவளை பார்த்திருக்க முடியாது.பூர்வ ஜென்ம புண்யம் உனக்கு. இதை வெளியே போய் சொல்லிண்டு இருக்காதே.” அப்புறம் எப்படியோ எங்கேயோ பல வருஷங்கள் பின் சொல்லி இருப்பார். இல்லெயென் றால் நமக்கு எப்படி இது தெரிந்திருக்கும்?