ஒரு வீரப்பெண் கதை – நங்கநல்லூர் J K SIVAN
தைர்யம் என்பது ஆண்களுக்கு மட்டும் என்று நினைத்தால் ரொம்ப தப்பு. அநேக பெண்களுக்கும் அது ஒரு கவசம். ராஜாக்களாக இருந்தவர்கள் வீர தீரத்தில் பேர் பெற்றவர்களாக இருப்பதை சரித்திர புத்தகத்தில் படித்திருக்கிறோம்.அதே அளவு வீராங்கனைகளும் உண்டு. ஜான்சி ராணி, வேலு நாச்சியார் போன்ற பெண்களைத் தவிர இன்னும் அநேகர் பெயர்களை நாம் நினைவுபடுத்திக் கொள்வதில்லை. அவர்களுள் ஒருவள் தான் சாந்த் பீபீ. எத்தனை பேர் இவளை ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்கள்?
இது அக்பர் காலத்திற்கும் அதற்கு அப்புறமும் நிகழ்ந்த சரித்திர சம்பவம்.
சாந்த் பீபீ பீஜபூர் சுல்தான் அதில் ஷா வம்ச ராணி. சுல்தான் அலி அதில் ஷாவின் மனைவி. அவளிடம் 80 ஆயிரம் குதிரைப்படை வீரர்கள் இருந்தார்கள். நிறைய கப்பல்கள் வாணிபத்தில் ஈடுபட்டு செல்வம் சேர்த்தன.
அதில் ஷா ஒருநாள் எதற்காகவோ கொல்லப்பட்டான். அவனுக்கு வாரிசு இல்லை. பீஜப்பூர் கொந்தளித்தது. பிரபுக்கள் பலமுள்ள தளபதிகள் ராஜ்யத்தை தங்கள் வசமாக்க போட்டியிட்டு துடித்தனர். ஒரு பலமுள்ள தளபதி ராணி சாந்த் பீபீயை சிறையிலடைத்துவிட்டு ராஜ்யாதிபதி ஆனான்.
சாந்த் பீபி அப்பா ஹுசைன் நிஜாம் ஷா அஹ்மத்நகர் அதிகாரி. அஹ்மத் நகர் சுல்தான் ராணியின் சகோதரி. பீபீக்கு நிறைய பாஷைகள் பேச தெரியும். அரபிக், பெர்ஷியன், துருக்கி, உருது, மராத்தி, கன்னடம் எல்லாம் ஜோராக பேசுவாள். இதைத் தவிர சித்தார் வாசிப்பாள் . பூக்கள் படம் தத்ரூபமாக வரைவாள் . அக்காலத்தில் ராஜாக்கள் சுல்தான்கள் பெண் கொடுத்து சம்பந்தம் வைத்து இணைவார்கள். இப்படித் தான் அஹமத் நகர் பீபீக்கு பீஜப்பூர் சுல்தான் அதில் ஷாவோடு கல்யாணம் ஆகியது. குழந்தைகள் இல்லை. அதில் ஷா கொலை அவனது ஆட்களாலேயே செய்யப்பட்டு மறைந்தான். அடுத்த சுல்தான்??
அதில் ஷாவின் மறுமான் 9வது குழந்தை அடுத்த சுல்தானாக ஏற்றுக்கொள்ளப்பட்டான். சுல்தான் ஆட்சியில் இருந்த கமால் கான் என்பவன் படைகளைத் தன் வசம் வைத்துக் கொண்டு சாந்த் பீபீக்கு ஆட்சி நடத்த பலமில்லாமல் ஓரம் கட்டிவிட்டான். எப்படியோ சாந்த் பீபீ இன்னொரு நம்பிக்கையான தளபதி ஹாஜி கிஷ்வர் கான் என்பவனோடு ரகசியமாக திட்டமிட்டு, கமால் கானை பதவியிலிருந்து நீக்கி அவனை சிரச்சேதம் செய்தார்கள். கிஷ்வர் கான் தானே சுல்தானாக வேண்டும் என்று திட்டமிட்டு சாந்த் பீபியை சிறையிலடைத்தான். அவனை சுல்தானாக ஏற்றுக்கொள்ள மற்ற அதிகாரிகள் ஒப்புக்கொள்ளாததால் கிஷ்வர் கான் தப்பியோடினான். கோல்கொண்டாவில் அவனும் கொல்லப்பட்டான்.
இனி சாந்த் பீபி தான் ராணி. அஹமத் நகர், பீஜப்பூர் நிலைமை கலவரத்தில் இருந்ததால் சாந்த் பீபி மராத்தா படைகளின் துணையை நாடினாள். கலவரத்தை தனக்கு சாதகமாக்க திட்டமிட்ட இக்லாஸ் கான் என்பவனும் முறியடிக்கப்பட்டான். சாந்த் பீபீ தன்னுடைய பலத்தை நிரூபித்து ராணியாக செயல்பட்டாள் . ஷாஜஹான் புதல்வன் மூரத் அஹமத் நகர் மீது படையெடுத்தான். சாந்த் பீபீயின் படைகள் பஞ்சத்தில் பீடிக்கப்பட்டு போராடும் சக்தி இழந்த நிலையில் கிஆந் பீபீ பேரார் எனும் பகுதியை மூரத்துக்கு விட்டுக்கொடுத்து முகலாய சாம்ராஜ்யத்தோடு சமரச உடன்படிக்கை செய்து கொண்டாள். முகலாய சாம்ராஜ்ய படை திரும்பி சென்றது.
முகலாய படைகளை எப்படியாவது வஞ்சம் தீர்த்து வீழ்த்த சாந்த் பீபி தன் கணவன் உறவினன் பீஜப்பூர் சுல்தான் 2ம் அதில் ஷா, மற்றும் கோல்கொண்டா சுல்தான் முஹம்மது குலி குதுப் ஷா ஆகியோர் நட்புறவோடு செயல்பட்டாள், பீஜப்பூர் சுல்தான் 25,000 வீரர்களை சாந்த் பீபிக்கு உதவ அனுப்பினான்., கோல்கொண்டா சுல்தான் வீரர்கள் 6000 பேரும் அவர்களோடு சேர்ந்து கொண்டார்கள். பீபீ தனது படை தலைவனாக முஹம்மத் கான் எனும் மந்திரியை அனுப்பினாள் . முஹம்மத்கான் ராணி சாந்த் பீபீக்கு துரோகம் செய்து முகலாய படைகளிடம் சரணடைந்தான்.
பேராரில் முகலாய ராஜா மூரத்துக்கு வசமான பகுதிகளை விட்டு மற்ற ஊர்களை தனதாக்கிக் கொண்டான். இதற்கிடையில் மற்ற வீரர்களோடு பீஜப்பூர், அஹ்மத் நகர், கோல்கொண்டா சுல்தான் படைகள் முகலாய சாம்ராஜ்ய படைகளோடு கோதாவரி நதிக்கரையில் சோன் பெட் என்ற ஊரில் மோதின. ஷாஜஹான் மகன் மூரத் முகலாய படைத்த தலைவன். சில தினங்கள் தொடர்ந்து நடந்த போரில் முகலாய படை வென்றது. இருந்தாலும் அவர்கள் முன்னேற வில்லை. ஷாபூர் திரும்பி சென்றது படை. முகலாய படைத்தலைவன் ரஜா அலிகான் கொல்லப் பட்டான். முகலாய படைகளுக்குள்ளே அநேக சச்சரவுகள். படைத்தலைவன் காணிக்கானா என்பவன் திரும்ப தலைநகர் ஆக்ராவுக்கு அழைக்கப்பட்டான். ஷாஹஜான் மகன் முகலாய படைத் தலைவன் மூரத் இறந்து விட்டான். மீண்டும் ஒரு பெரும்படையை காணிக்கானா தலைமையில் ஷாஜஹான் அனுப்பினான்.
சாந்த் பீபீயின் அஹமத் நகர் கோட்டை முற்றுகையிடப்பட்டது. முகலாய படைத்தலைவன் தனியல் கான் என்பவனோடு போரை நிறுத்தி சாந்த் பீபீ சமரசம் செய்து கொண்டாள் . சிறு சிறு மோதல்கள் வெடித்தன. சாந்த் பீபீ தனது படைவீரர்களாலேயுயே கொல்லப்பட்டாள் . அஹமத் நகர் முகலாயர் வசமாகியது.
தக்ஷிணம் எத்தனையோ அதிர்ச்சிகளை சந்தித்திருக்கிறது. கூட்டணிகள் எப்போதுமே காலை வாரிவிடும் என்பது 1500களிலேயே தெரிந்த விஷயமாக இருக்கிறது. நான் சொல்லவில்லை. சரித்திரம் சொல்கிறது. தெற்கே நமக்கு அதெல்லாம் தெரியவில்லை.
அஹமத் நகரில் இன்றும் 13 கிமீ தூரத்தில் ஒரு பச்சை பசும் புல் போர்த்திய சிறு குன்றின் மேல் ஒரு மூன்றடுக்கு கல் மண்டபம் சாந்த் பீமீ ஞாபகார்த்த மண்டபமாக காணப்படுகிறது. அது அவள் கல்லரை இல்லை. சலாபாத் கான் என்ற சுல்தான் கல்லறை என்கிறார்கள். அதிலும் சாந்த் பீபீக்கு நிம்மதியில்லாத எதிர்ப்போ?