ULLADHU NARPADHU 34 J K SIVAN

உள்ளது நாற்பது – நங்கநல்லூர் J K SIVAN 
பகவான் ரமண மஹரிஷி
34. ”ஜாக்கிரதையாக இரு”
”என்று மெவர்க்கு மியல்பா யுளபொருலை
யொன்று முளத்து ளுணர்ந்துநிலை – நின்றிடா
துண்டின் றுருவருவென் றொன்றிரண் டன்றென்றே
சண்டையிடன் மாயைச் சழக்கொவொண்டியுளம் ” 34
மனம் என்றால் அடேயப்பா, அதன் ஓட்டம் தான் பிரமிக்க வைக்கிறது. அது செல்லாத இடமே இல்லை, நினைக்காத விஷயமே இல்லை. ஒரு கணத்தில் எத்தனையோ ஆயிரம் எண்ணங்களை உருவாக்கும் ராக்ஷஸன் அது. மனத்தின் குஞ்சு குடுவா, பிள்ளைகள் தான் அது உருவாக்கும் எண்ணங்கள். அப்பப்போது அது சேர்த்து வைத்த எண்ணங்களைத் திரும்பி பார்ப்பது தான் நினைப்பது. அடுக்கி அடுக்கி வைத்திருக்கும் எண்ணங்கள் தான் நினைவுகள். இதற்கும் ஆத்மாவுக்கும் எந்த வித சம்பந்தமுமில்லை. எண்ணங்கள் ஐம்புலன்களை சார்ந்தது. அகந்தையின் வெளிப்பாடுகள். அதைத் தடவிக் கொடுத்து, வளர்த்து, பாதுகாப்பது மனம். இந்த கூட்டத்தையே ஒழிக்கவேண்டும். அப்போது தான் உண்மை, ஸத்யம் நமக்குப் புரியும். துன்பம் இன்பம், துயரம் எதுவுமில்லாத உள்ளே இருக்கும் ”நான்” எது என்பதை உணரமுடியும். ஹ்ருதயத்தில் அனுபவிக்க வேண்டிய அனுபவம் அது. அதற்கு பெயர் உண்டு உருவம் உண்டு, அது ஒன்று இரண்டு, பலவிதம் என்றெல்லாம் வாதம் பிரதிவாதம் செய்வது மாயையின் பயங்கர சக்தியால் தான். இதை எல்லாம் மொத்தமாக அறவே விலக்கவேண்டும்.
ஆத்மா எனும் ”நான்” நித்ய சித்தமான வஸ்து. ஒருவித முயற்சியுமின்றி அது எப்படி இருக்கிறதோ அப்படி எல்லோராலும் அனுபவிக்கப்படுவது. கவனக் கண்ணால் மட்டும் அறிய முடிவது. மனனம் செய்து அதிலேயே நிலையாக நிற்கவேண்டியது அவசியம். அப்போது தான் புரிபடும். இதை தான் ஞான தவம், தபஸ் என்கிறோம். ரிஷிகள், முனிவர்கள், மஹான்கள் இதில் தான் சதா ஈடுபடுபவர்கள். அப்படி ஈடுபட்டால் நாமும் அந்த ரிஷிகள் தான். இதை அடைந்தவனுக்கு அகம் புறம், ஒன்று இரண்டு, சத், அஸத் எதுவுமே இல்லை. மௌனமாக இருந்து கொண்டு ப்ரம்ம ஸ்வருபத்தை ருசிக்கும் வண்டு தான் ஞானி. தேனைத் தேடும்போதுதான் வண்டு ஒய்ங் ஒய்ங் என்று ரீங்காரிக்கும்,. தேனைப் பருகத்தொடங்கினால் மௌனம்.
டாக்டர்கள் நம் உடலில் பரிசோதிக்கும் இதயம் என்ற பெயர் கொண்ட ஹார்ட் HEART மார்பகத்தின் இடது பக்கம் ரத்த நாளங்களுடன் குழாய்களுட னுள்ளது. எக்ஸ்ரே, ஸ்கேன் எல்லாம் அதை தான் காட்டும். ரமணர் சொல்லும் ஆத்மா உறைகின்ற ஹ்ருதயம் வேறே. மார்பகத்தின் வலது பக்கம், , நடு மார்பு, அடி வயிறு இந்த பிரதேசத்தில் மேலே ஆறு வஸ்துக்கள் பல நிறங்களில் உள்ளன. அதில் ஒன்று ஆம்பல் அரும்பு மாதிரி ரெண்டு விரல்கடைநீளத்தில் மார்பின் வலது பக்கம் இருப்பது தான் ஹ்ருதயம். அதைக் காண முடியாது. நன்றாக உணரமுடியும். ரமணரின் பாடல் இது தான்:
”இருமுலை, நடுமார்பு, அடி வயிறு இதன்மேல்
இரு முப்பொருள் உள , நிறம் பல, இவற்றுள்,
ஒரு பொருள் ஆம்பல் அரும்பென உள்ளே
இருவிரல் வலத்தே இருப்பது இதயம்”
மனம் இந்த ஹ்ருதயத்தை நாடாமல் தடுப்பது தான் மாயை. நமது பிறப்பின் லக்ஷ்யமே ஆத்ம அனுபூதி பெறுவது தான். மாயையின் திரைகள் அதை மறைத்திருக்கிறது. அவற்றை ஒவ்வொன்றாக விலக்க வேண்டும். இந்த வேலையில் ஈடுபடும்போதே பல பிறவிகள் எடுக்க வேண்டிவரலாம் .சுலப வழி ”நான்” யார்? எனும் ஆத்ம விசாரம்.
ஒரு ஆந்திர பக்தர் ”எனக்கு உங்கள் சந்நிதியில் இன்று உங்கள் அருளால் ஸ்வரூபத்தில் நிலைத்து எல்லையற்ற ஆனந்தம் பெற்றேன். மேலும் ஆசி வழங்கவேண்டும்” என ஒரு காகிதத்தில் எழுதி பகவானிடம் சமர்ப்பித்தார். மத்தியானம் பகவானுக்கு அதை ஒரு பக்தர் படித்துக் காட்டினார். பகவான் ஒன்றும் சொல்லவில்லை.
”இதைக் கொடுத்துட்டு ”ஜாக்கிரதையா இருக்கச் சொல்லு ” என்றார் . அதற்கு அர்த்தம், ஒரு தடவை ஆத்மானுபவம் பெற்றால் அந்த அனுபவத்தில் விடாமல் நிலையாக நிற்க வேண்டும்” கயிறுமேல் நடப்பது போல கவனமாக இருக்கவேண்டும். ஜாக்கிரதை என்று அதற்காக தான் மகரிஷி அப்படிச் சொல்லி இருக்கிறார்.
Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *