உள்ளது நாற்பது – நங்கநல்லூர் J K SIVAN பகவான் ரமண மஹரிஷி
36 ஞான ஒளி
”நாமுடலென் றெண்ணினல நாமதுவென் றெண்ணுமது
நாமதுவா நிற்பதற்கு நற்றயாமென்று
நாமதுவென் றேண்ணுவதே னான்மனித னெறெணுமோ
நாமதுவா நிற்குமத னாதேமுயலும் 36”
நம் எல்லோருக்கும் நன்றாக தெரியும் . என்றாலும் வேண்டுமென்றே மறந்து போகிறோம். இந்த உடல் என்றும் நிலையல்ல. ஏதோ ஒரு வயதில், முன்னெச்சரிக்கை கொடுக்காமல் ஒருநாள் இது நம்மை விட்டு போகப்போகிறது. இவ்வளவு காலம் இரவு பகல் அதைப் பொத்தி பொத்தி பாதுகாத்ததற்கு நன்றி கூட சொல்லப்போவதில்லை. அப்படியும் அது பிரியும் வரை இந்த உடல் தான் நாம் என்ற எண்ணமும் நம்மில் அநேகருக்கு முழுதுமாக இருக்கிறது.
இது ”என்” ” உடல்” , ”எனக்கு” ”உடம்பு ” சரியில்லை, ”என்” உடம்புக்கு” இது ஒத்துக்காது. ”என் உடம்புக்கு ” இந்த சைஸ் ஆடை போதாது… என்றெல்லாம் சொல்கிறோமே அப்போது அந்த ”என்” யார்? ”உடம்பு” யார்? ”நான்” யாரோ அது என் உடல், உடம்பு,தேகம் இல்லை. என்று சொல்கிறோம். ஆனால் மனது ஒப்புக்கொள்ள மறுக்கிறது. என் உடல், உடம்பு என்று சொல்லும்போது ரெண்டாக பார்க்கப்பட்டு தானே அந்த வார்த்தை வருகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும், இதை எண்ணும் போதெல்லாம் விவரமாக உள்ளே செல்ல மறுத்து விடுகிறோம்.
நான் ப்ரம்மம், ‘ அஹம் ப்ரம்மாஸ்மி . அது இந்த உடல் அல்ல. உடல் நான் அல்ல, என்ற எண்ணம் கொஞ்சமாவது தோன்றுமானால் ஆத்ம ஸ்வரூபம் பெற அது ரொம்ப உதவும்.
மனம் தான் நமது முதல் எதிரி. அது எளிதில் நான் இந்த தேகம் இல்லை என்று ஒப்புக்கொள்ளாது. ஏனென்றால் அரசியல் வியாதிகள் கூட்டு சேர்வது போல், மனம் தேகத்தோடும் அகந்தையோடும் சேர்ந்து தான் பல காரியங்களை செய்ய வைத்து நம்மை அநேக துன்பங்களுக்கு ஆளாக்குகிறது.
ஆத்மா இல்லாத மற்ற எல்லா வஸ்துக்களையும் மனம் நீக்கினால், முதலில் மனமே நீங்க வேண்டும் அல்லவா?. ஆத்மாவில் மனத்தின் பங்கே இல்லை. நான் ஆத்மா என்று சொல்லும்போது அது ஆத்மா இல்லாததால் தானே அப்படி உரிமை கொண்டாடுகிறது? ” நான்” என்றால் பிரகடனப்படுத்த அவசியம் எங்கே இருக்கிறது. எல்லாமே அது வாக இருக்கும்போது, தனியாக அதை அடையாளம் காட்டவேண்டியதே இல்லையே. எல்லாமே பிரம்மமாக இருக்கும்போது எதற்கு ஒன்று இன்னொன்றிடம் போய் ”நான் தான் ஆத்மா” என்று அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும்? அதை அதுவே அறியும் போது அங்கே மனமே இல்லை.
நமது சிந்தனைகளுக்கு அடிப்படையாக, அஸ்திவாரமாக நாம ரூப பேதங்கள் வேண்டும். ஐம்புலன்களின் ஈர்ப்பு வேண்டும், அகந்தை மனதில் கலந்து செயல்படவேண்டும். இப்படிப்பட்ட அனாத்ம வஸ்துக்களை இது இல்லை, இது இல்லை என்று ஒவ்வொன்றாக தள்ளிய பிறகே, எஞ்சி இருப்பது ஆத்மா என்று புலப்படும். திரையெல்லாம் விலக வேண்டும். அப்போது தான் நான் எனும் அனுபவம் கிடைக்கும். அதுவே ப்ரம்ம ஞானம். மனதின் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டது. நாம ரூப குணம் அற்றது. எல்லையற்ற ஆனந்த ஸாக்ஷாத் காரம்.
ஒரு நாள் படித்தால் இதை புரிந்து கொள்ள முடியாது. ஒரு வருஷம் படித்தாலும் பயனில்லை… மனதில் உள் வாங்கிக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக மனதில் இது திணிக்கப் படவேண்டும். நிறைய விட்டு விட்டு சிந்திக்க வேண்டும். அப்புறம் ஒருநாள் பளிச்சென்று பிரகாசமாக ஒளிவீசிய வாறு புரியும். ஒரு சரியான குரு வழிகாட்ட வேண்டும்.