உள்ளது நாற்பது – நங்கநல்லூர் J K SIVAN பகவான் ரமண மஹரிஷி
38 பொய்யும் மெய்யும்.
”வினைமுதனா மாயின் விளைபயன் றுய்ப்போம்
வினைமுதலா ரென்று வதனையறியக்
கர்த்தத் துவம்போய்க் கருமமூன் றுங்கழலு
நித்தமா முத்தி நிலமத்தனாய்ப் 38”
ஒரு பெரிய மரத்தை பார்க்கிறோமே . அதற்கு எது காரணம் ? ஒரே ஒரு சின்ன விதை. அது இல்லாமல் அவ்வளவு பெரிய மரம் ஏது?
எல்லை காணமுடியாமல் ஸம்ஸாரம் என்னும் கடலில் மூழ்கியிருக்கிறோமே, அதற்கு எது காரணம்?
இது வரை பல ஜென்மங்களில் நாம் செய்த கர்மா, செய்து கொண்டிருப்பது, இனி செய்யப்போவது. இது தான். நாம் செய்த காரியத்தின் பலனை நாமே அனுபவித்து தான் ஆகவேண்டும்.
அது சரி, இந்த கர்மங்களை செய்ய எவன், எது, காரணம். அவன்/அது எங்கே இருக்கிறது?
இது முக்கியமான கேள்வி. ஆத்மா என்று நாம் தப்பாக எண்ணிக்கொண்டிருக்கும் தேகம், மனம், அகந்தை என்ற மூன்றும் ஏமாற்று பேர்வழிகள். தீய கூட்டாளிகள்.
இந்த மூன்றிற்குமே, மூன்றில் எது ஒன்றிற்கும், ஆத்மா சம்பந்தமில்லாதது என்று உணரும்போது, மற்றதெல்லாம் இருக்கிற இடமே தெரியாமல் காணாமல் போய்விடும்.
உண்மையில் ”நான் யார்?” என்ற ஆராய்ச்சியில் தீவிரமாக விடாமுயற்சியுடன் ஈடுபடும்போது, இந்த பித்தலாட்ட ”நான் ” ஆகிய தேகம், அகந்தை, மனம் ஆகிய மூன்றின் செயல்பாடுகளும் ஓடிவிடும்.
தூரத்தில் பூதாகரமான பேய் ஒன்று ஆடிக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு, குப்புசாமி உளறி அடித்துக்கொண்டு உடனே தலைதெறிக்க ஓடினான். ஊரிலுள்ளோர் அவன் பயத்தை பார்த்துவிட்டு கம்பும் விளக்கும் கொண்டுவந்து அவன் சொன்ன இடத்தில் போய் பார்த்தால் அது ஒரு வேப்ப மரம் என்று தெரிந்தது. அதன் உருவம் தான் அவனை பிசாசு என பயப்பட வைத்து விரட்டி இருக்கிறது. அது போல் தான் ஆத்மஞான நான்யார் விசாரத்தில் இறங்கினால்தான் பொய் தோற்றங்கள் மறையும்.