PESUM DEIVAM J K SIVAN

‘பேசும் தெய்வம்  –   நங்கநல்லூர்   J K  SIVAN
”என் கோபாலனா?”        –
கும்பகோணத்தில்  ஸ்ரீ  கோபாலய்யர்  மஹா பெரியவாளுக்கு  அணுக்க தொண்டர்.  ”டேய் கோபாலா” என்று அடிக்கடி  மஹா பெரியவா அவரைத் தேடுவார்.  அவர் வீட்டுக்கு  மஹா பெரியவா வருவார்.   கோபாலய்யர் வீட்டு சுவர்கள் பூரா            நிறைய  மஹான்கள் படங்கள் மாட்டி இருக்கும். அவற்றில் ஒன்று  மௌன குரு ஸ்வாமிகள் படம்.  மஹா பெரியவா இந்த மௌனகுரு பற்றி ரொம்ப  சொல்லியிருக்கிறார்.  கோபாலய்யர் வீட்டு மௌன குரு படத்துக்கு   மஹா பெரியவா  தண்ட நமஸ்காரம் பண்ணி இருக்கிறார்  என்று கோபாலய்யர் மகன்  க்ரிஷ்ணமுர்த்தி  திருவிடை மருதூரில் தனது வீட்டில்  ஒரு பேட்டியளிக்கும்போது  சொல்லி இருக்கிறார்.  கிருஷ்ணமுர்த்தி கும்பகோணம்   பாணாதுறை ஹை  ஸ்கூல் ஹெட் மாஸ்ட ராக பணி  புரிந்தவர்.
கோபாலய்யர்  அப்பா  காலத்தில் அந்த வீட்டுக்கு  மௌனகுரு ஸ்வாமிகள் வந்திருக்கிறார். மூன்று நாள்  அன்ன  ஆகாரம் இன்றி தவத்தில் இருந்திருக்கிறார் என்று சொல்லும்போது அந்த வீடு எவ்வளவு தெய்வீகமான, புனித க்ஷேத்ரம் என்று தோன்றுகிறது.  காஞ்சி பெரியவாள் மூன்று பேருமே  அந்த  இல்லத்துக்கு அடிக்கடி வந்திருக்கிறார்கள். அது இன்னொரு கும்பகோணம் மடமாகவே  இருந்தது எனலாம்.
மஹா பெரியவா அந்த புனித இல்லத்துக்கு வந்து தண்ட நமஸ்காரம் பண்ணியது மௌன குரு ஸ்வாமிகள் படத்துக்கு.
கோபாலய்யர் நடக்கமுடியாமல் இருந்த சமயம்.  கும்பகோணத்தில்  புதுப்பெரியவா பட்டண பிரவேசம் கும்பகோணத்தில்
கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது.
”மஹா பாவி என்னால் இவ்வளவு அற்புதமான விழாவைக்  காண முடியாமல் இருக்கிறதே” என்று கோபாலய்யர்  கண்ணீர் சிந்தியது மஹா  பெரியவாளுக்கு  தெரியாமலா போகும்?
ஜெயேந்திரரைக் கூப்பிட்டு  ”நீ யானையோடு போய்  கோபாலன் வீட்டு வாசலில் நிறுத்தி  யானைமேல்  நீ எப்படியேறினாய் என்று மீண்டும்  ஒருமுறை கோபாலனுக்கு  ஏறிக்காட்டு. அவன் பார்க்கட்டும் ”  என்றார். அப்படியே  புதுபெரியவாளும் செய்தார். ”எங்க அப்பா கோபாலய்யர் காலமான செய்தி கேட்ட  பெரியவா  ”என்னது  என் கோபாலனா??”  என்று  அதிர்ச்சியுடன் கேட்டுவிட்டு  ”ஆஹா நான் ஒரு சந்நியாசி எனக்கே இவ்வளவு பந்தமா?” என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டதாகவும் கிருஷ்ணமூர்த்தி பேட்டியில் சொன்னார்.  

மஹா பெரியவா  மூன்று பேரை உதாரணமாக  சொல்வார். கும்பகோணத்தில் வாழ்ந்த மௌன குரு ஸ்வாமிகள், ஆத்ம ஞானி  சதாசிவ ப்ரம்மேந்திரா, ரமண  மகரிஷி ஆகியோர்  மௌனத்தின் மூலம் நிர்வாணம், ப்ரம்மஞானம்,  அடைந்த வர்கள்..நினைத்த நேரத்தில் நிர்விகல்ப சமாதி, சஹஜ சமாதி நிலை எட்டியவர்கள்.
மஹா பெரியவா  மௌன குரு ஸ்வாமிகள் பற்றி சொல்லும்போது  ”ஸ்வாமிகள் மணிக்கணக்காக  சமாதியில் இருக்கக் கூடியவர். உடம்பு கற்சிலையாக அசையாமல் இருக்கும். நாட்கணக்கில் அன்ன  ஆகாரமின்றி இருப்பார். கண்கள் மூடி இருக்கும். மூச்சு விடுவது கூட  கண்டுபிடிக்க முடியாது. கண் திறந்திருந்தால்  இமைகள் மூடாது, வெறித்துப் பார்த்துக் கொண்டே  இருக்கும்.  எந்த  உணர்வும் சலனமும் இருக்காது.  கண்ணுக்கு  அருகில் விரலைக் கொண்டு போனால் கூட  கண்  இமைக்காது.  ஆகாரத்தை பக்தர்கள் வாயில்  பலவந்தமாக ஊட்டி விடுவார்கள்.  சில சமயம் ஆகாரம் தொண்டைக்குள் இறங்கும் சில சமயம் இறங்காது.  எறும்பு ஈ  போன்ற  பூச்சிகள் வண்டுகள்,  வாயை சுற்றி மொய்த்துக் கொண்டு இருக்கும், கடித்து துன்புறுத்தும்.அதனால் உடல் சிவக்கும். ஆனாலும் துளியாவது சமாதி  நிலையிலிருந்து மௌனகுரு ஸ்வாமிகள் மீள மாட்டார்.
சில பக்தர்கள் அவர் வாயைத் திறந்து நாக்கில் நிறைய  சீனி சர்க்கரையை தடவுவார்கள். அப்போதும் எச்சில் ஊறாது. அப்படியே இருக்கும். புலன்களை முற்றிலும் அடக்கிய  ஞானி.

சுவாமி விவேகானந்தர்   கும்பகோணம் வந்தபோது மூன்று நாள் தொடர்ந்து மௌன ஸ்வாமிகளை தரிசித்தார்.
22.4.1899  அன்று மௌன குரு ஸ்வாமிகள் விதேக முக்தி அடைந்தார். இன்றுவரை அவருக்கு இயற் பெயர் என்ன என்று எவருக்கும் தெரியாது. பேசாமல் மௌனமாக இருந்ததால் உலகம் அவரை மௌன குரு ஸ்வாமிகள் என்றே அடையாளம் கண்டு வழிபட்டது. ஆரம்ப காலத்தில் ஸ்வாமிகள்   கும்பகோணத்துக்கு  8-10 கி.மீ. தூரத்தில் உள்ள  திரிபுவனத்தில் வாழ்ந்தவர் என்கிறார்கள்.  

நல்ல பிள்ளை என்று ஒருவர்  மௌனத்துகுரு ஸ்வாமிகளுக்கு சீடராக இருந்தார். அவர் வெள்ளைக்கார ஆட்சியில்  வாடா ஆற்காட்டு கலக்டருக்கு உதவியாளர்.   கலெக்டர் அவரை  ”எல்லா சிறைச்சாலைகளுக்கும் சென்று  கைதிகளின்  விவரம், போட்டோ எல்லாம் எடுத்துக் கொண்டு வாருங்கள் அரசாங்க ஆவணத்துக்கு வேண்டும்”என்று அனுப்பினான்.  நல்லபிள்ளை திருவண்ணாமலைக்கு வந்தபோது அங்கே  ரமணரை தரிசனம் செய்ய சென்றார். மஹரிஷியைக்  கண்டதுமே  ரமணரின் மௌனம் அவரை ஈர்த்து நல்ல பிள்ளை அவர் சிஷ்யனாகி விட்டார்,  தன்னிடமிருந்த குருநாதர்  மௌனகுரு ஸ்வாமிகள் படத்தை ரமணருக்கு நல்ல பிள்ளை அளித்தார்.
 கும்பேஸ்வரர்  ஆலயத்துக்கு அருகே  இன்னும்  மௌனகுரு ஸ்வாமிகள் சமாதி அதிஷ்டானம் இருக்கிறது. அதன் மேல் ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை பண்ணி இருக்கிறார்கள். வலையப்பேட்டை அக்ரஹாரத்தில் உள்ளது. ஒரு முறை சென்று தரிசிக்க வேண்டும்.  எண்ணற்ற  பக்தர்கள் தரிசித்தவர்கள் பாக்கியசாலிகள்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *