அருமையான குரு அபிமான சிஷ்யன்-6நங்கநல்லூர் J.K. SIVAN
சமீபத்தில் ஸ்ரீ ரங்கம் போனபோது ராமானுஜர் சந்நிதியின் முகப்பில் இடது வலது பக்கமாக ரெண்டு பேர் சிலை. அவர்கள் தான் கூரத்தாழ்வான், முதலியாண்டான் என்ற ராமானுஜரின் ரெண்டு நிழல்கள். வலது இடது கரம் போன்றவர்கள். ஒரு சிலைக்கு தாடி இருக்கிறது. அவர் தான் கூரத்தாழ்வான். திருகோஷ்டியூர் நம்பியிடம் உபதேசம் பெற ராமானுஜர் சென்றபோது 17 முறை திருப்பி அனுப்பப்பட்டார். பதினெட்டாவது தடவை சென்றபோது நம்பி ராமானுஜரைப் பார்த்து ”தண்டமும் பவித்திரமுமாகத் நீர் மட்டும் வாரும்” என்று சொல்ல அடுத்து அவரைப்பார்க்க போகும்போது தன்னுடன் கூரத்தாழ்வானையும், முதலியாண்டானையும் அழைத்துக் கொண்டு சென்று வணங்கினார்.
திருக்கோஷ்டியூர் நம்பி; “ ராமானுஜா நீ மட்டும் வா என்று தானே சொன்னேன். ஏன் இந்த இருவரை நீ இங்கே அழைத்து வந்தாய்?”
ராமானுஜர்: “தேவரீர் தண்டமும் பவித்திரமுமாக வரச் சொன்னீர்கள் – முதலியாண்டான் எனக்கு த்ரிதண்டம், கூரத்தாழ்வான் என் பவித்திரம்” சுவாமி.ராமாநுஜரைப் போலவே கூரத்தாழ்வானும் ஹரித கோத்ரத்தவர். ”ஹரித குல திலகர்” என்று அவரைப் போற்றுவார்கள். கூரம் கிராமத் தலைவர். ஏக சந்தக்ரஹி . ஒரு முறை கேட்ட விஷயத்தை அப்படியே காந்தம் மாதிரி மனதில் பதித்துக் கொள்பவர். இரக்கம், தான தர்ம கருணை சிந்தனை யுள்ளவர். பொறுமை, நிதானம், பணிவு அவருடைய ஆபரணம். ராமானுஜரை தெய்வமாக பின்பற்றுபவர். தினமும் ததியாராதனை கைங்கர்யம் கூரத்தில் நடத்துபவர். “ திருவாய்மொழி “சூழ்விசும்பு” என்று தொடங்கும் பாசுரங்களில் ஸ்ரீவைகுண்டத்தில் புகுகின்ற புதியவர்களுக்கு வரவேற்பு பற்றி கூறப்பட்டுள்ளது. நான் முன்னே சென்றால் தான் பரமபதத்துக்கு பின்னே வரப்போகின்ற என் தலைவன், ஸ்ரீராமானுஜரை வாசலிலேயே நின்று எதிர்கொண்டு மரியாதையுடன் வரவேற்க முடியும். சீடரான தாம் முறைப்படி வரவேற்பு அளிப்பது தானே சரியாக இருக்கும் என்று எண்ணியவர் கூரத்தாழ்வான். அவர் விரும்பிய அந்திம நேரம் வந்தது. ஆழ்வான் பரமபதம் புறப்படப்போகிறார். அந்த சமயம், ராமானுஜர் அங்கே வந்தார். ஆழ்வானின் காதுகளில் திருமந்திரத்தை ஓதினார். பிறகு மீண்டும் ஓதினார். பக்கத்தில் இருந்த சீடர்கள் ஏன் மறுபடியும் ஓதினீர்கள் என்று கேட்க ஆசார்யன் என்ன பதில் சொன்னார்?’ஓரூ ராஜகுமாரன் வாயில் கற்பூரத்தைப் போட்டு கொள்ளாமல் இருந்தால் அவன் நாக்கு உலர்ந்து போய்விடும். அதே போல ஆழ்வானுக்குத் திருமந்திரம் தான் கற்பூரம், கூரேசர் நாக்கு உலந்து போகாமல் இருக்க மீண்டும் திருமந்திரத்தை ஓதினேன்”
கூரத்தாழ்வான் வீட்டுக்கு அருகே அப்பன் என்ற தனவந்தர் வசித்தார். அவருக்கு ஆழ்வானின் சீடராக விருப்பம். ஆனால் அவர் ஆழ்வான் இல்லத்துக்கு வந்த நேரம் ஆழ்வானின் ஜீவன் உடலை விட்டு பிரியும் நேரம். அப்பன் ஆழ்வானைப் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் கண்ணீர் சிந்தினார். அருகில் இருந்த பட்டரிடம் என்ன செய்யலாம் என்று கேட்க அதற்குப் பட்டர் “எப்பொழுது நீங்கள் ஆழ்வானை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தீரோ அப்போதே ஆழ்வானின் சீடராகிவிட்டீர் ” என்றார்.
மேல் கோட்டை திருநாராயணபுரத்திலிருந்து திரும்பி வந்த ஆசார்யன் ஸ்ரீ ரங்கம் வந்தவுடன் தனக்காக கண்ணைத் தியாகம் செய்த ஆழ்வானைச் சந்தித்து மிகவும் வேதனையுடன் கண்ணீர் மல்க , ஆழ்வானை வாரி அணைத்துக் கொண்டார். ஆழ்வானும்ஆசார்யனும் காஞ்சிபுரத்துக்கு வந்தார்கள். ”கூரேசா நீ வரதாராஜஸ்தவத்தை பேரருளாளன் முன்பு விண்ணப்பம் செய். வரமாக கண்களை பெற்றுக்கொள்ளுங்கள் என்று நியமித்தார்.
கூரத்தாழ்வானும் ஆசாரியர் கட்டளையை மறுக்கவிரும்பாமல் அப்படியே செய்ய ஆரம்பித்தார் அப்போது ஸ்ரீராமானுஜர் கோயிலை பிரதக்ஷணம் செய்யப் போய்விட்டார். அந்த சமயம் வரதராஜன், பேரருளாளன் கூரத்தாழ்வானை கேட்டான். “கூரேசா, உனக்கு என்ன வேண்டும் ?” ”பகவானே, “எனக்கு கெடுதல் செய்தாலும் நான் உங்களிடம் பெறுகின்ற மோக்ஷத்தை அந்த நாலூரானும் பெற வேண்டும்”
அதாவது ஸ்ரீராமானுஜ சம்பந்தத்தால் தான் மோக்ஷம் அடைவது மாதிரி நாலூரானும் பெற வேண்டும் என்றுஆழ்வான் வேண்டியதாக பொருள் கொள்ளலாம். )
கூரத்தாழ்வான் ராமானுஜரை விட எட்டு வருஷம் பெரியவர். தாடிக்கார சிஷ்யர். அடியார்களுக்கு தினமும் அன்னதானம் செய்வதையே பெரும்பேறாய்ச் செய்துவந்தவர். அரங்கன் அருளால் புத்ர பாக்யம் பெற்றவர். வியாசபட்டர், பராசரப்பட்டர் என இரு புதல்வர்கள். பராசரப்பட்டர் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு இன்றும் புகழப்படும்படியான ஓர் உரை இயற்றியவர். ராமானுஜ நூற்றந்தாதி இயற்றிய திருவரங்கத்தமுதனார் கூரத்தாழ்வாரின் மாணாக்கருள் ஒருவர்.
ஆழ்வான் இயற்றிய நூல்கள்
ஸ்ரீ அதிமாநுஷ ஸ்தவம்
சுந்தரபாஹூ ஸ்தவம்
வரதராஜ ஸ்தவம்
வைகுண்ட ஸ்தவம்
ஸ்ரீ ஸ்தவம்,
தாடீபஞ்சகம்
ப்ரார்தனபஞ்சகம்
இதெல்லாம் சமஸ்க்ரிதத்தில் எழுதப்பட்டவை. கூரத்தாழ்வானை ஸாஷ்டாங்கமாக நமஸ்கரித்து விடை பெறுகிறோம். அவரைப் பற்றி எத்தனையோ விஷயங்கள் பாக்கி இருக்கிறது.