KAMBA RAMAYANAM J K SIVAN

கம்ப ராமாயணம் – நங்கநல்லூர் J K SIVAN
கம்பனின் பாக்களில் ஆங்காங்கே பெண்களின்
மார்பகங்கள்,குறி பற்றியோ, மற்றும் ஆண் பெண் கலவி இன்பம் பற்றிய சிறிய பாதிப்பு இருந்தாலும் அவற்றை தொடாமல் மற்றவற்றை மட்டுமே எனது தொகுப்பில் காணலாம்.
எனக்கென்னவோ அது தேவை இல்லை என்ற திடமான எண்ணம். ராதா கிருஷ்ணன் பிருந்தாவன லீலைகளை, ஜெயதேவர் கீதகோவிந்த பாடல்கள் விவரிக்கும் போதும் இதே மன உறுதி தான் எனக்கு என்பதை என் எழுத்து பிரதிபலிப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். வயதான என் வாசக நண்பர்களின் மனோ நிலையும் இவ்வாறு தான் என்று எனக்குள் ஒரு எண்ணம். இல்லை யென்றால் என்னை ஆதரிக்க மாட்டார்களே…கவிதை இன்பம், தமிழின் அழகு, இயற்கை வர்ணனை, பக்தி ரசம் போதுமே. நிறைய இதை கம்பனும் மற்ற சிறந்த கவிஞர்களும் பல மொழிகளில் அளிக்கிறார்களே. அவற்றை அனுபவிக்கவே வாழ்நாள் போதாதே என்று தோன்றுகிறது.
74. இடைஇற மகளிர்கள்‌. எறி புனல்‌ மறுகக
குடைபவர்‌. துவர்‌ இதழ்‌ மலர்வன. குமுதம்‌;
மடை பெயர்‌ அனம்‌ என மட நடை. அளகக
கடைசியர்‌ முகம்‌ என மலர்வன. கமலம்‌.
கோசல நாட்டில் எங்கும் நீர்வளம் நிலவளம் பற்றி சொல்லவே வார்த்தை போதாது. ஓடிவது போல் மெல்லிடை கொண்ட பெண்டிர் தடாகங்களில், ஆறுகளில் அமிழ்ந்து நீந்தி ஸ்னானம் பண்ணுகி றார்கள், அவர்களது பவளச் செவ் வாய்கள் எது போல இருக்கிறதாம் தெரியுமா?. நீரில் மலர்ந்து காணும் குமுத மலர்கள் போல. அவர்களுடைய நடை, அன்னங்கள் உலவுவதை போல் இருக்கிறது. கரு நிற வளமையான சுருண்ட கூந்தல் படர்ந்தமுகம். சேற்றில் செந்தாமரை போல், அழகுக்கு அழகு செய்கிறது என்கிறார் கம்பர்.
77. காரொடு நிகர்வன. கடி பொழில்‌; கழனிப்‌
போரொடு நிகர்வன. புணர்மலை; அணை சூழ்‌
நீரொடு நிகர்வன. நிறை கடல்‌; நிதி சால்‌
ஊரொடு நிகர்வன. இமையவர்‌ உலகம்‌.
ஆஹா,இதென்ன ஆச்சர்யம். கோசல நாட்டு மலர்ச் சோலைகள் தேவலோகமா என்று திணறடிக்கி றது. மேகங்களைப் போல காண்கிறதே அவை வயல்களில் அறுவடை செய்த நெற் குவியல் போர் போராக மலை போல உயர மேல் நோக்கி பார்க்கும் வகையில் உயர்ந்து காணப்படுகிறது. நதிகள். ஆறுகள் நீரோட்டத்தோடு பொங்கி கரை புரண்டு ஓடுகிறது. அவற்றின் இரு பக்க அணைகள் ஆஹா இது கடலல்லவா, அதையா இவர்கள் தேக்கி வைத்திருக் கிறார்கள் என்று தோன்றுகிறது. மொத்தத்தில் இது மனிதர்கள் வாழும் பிரதேசமா அல்லது தேவலோகமா? பொன்னும் மணியும் எங்கும் கண்ணில் படுகிறதே.
78. நெல்‌ மலை அல்லன்‌ – நிரை வரு தரளம்‌;
சொல்‌ மலை அல்லன்‌ – தொடு கடல்‌ அமிர்தம்‌;
நல்‌ மலை அல்லன்‌ – நதி தரு நிதியம்‌;
பொன்‌ மலை அல்லன்‌ – மணி படு புவினம்‌.
இதைக் கவனித்தீர்களா? எங்கே நெல் மலைபோல் குவித்து காணப்படவில்லையோ, அங்கே வரிசை வரிசையாக கும்பாச்சியாக முத்துக் குவியல்கள். அதுவும் இல்லாத இடத்தில் வெள்ளை வெளேரென கண்ணைக் கூசும் உப்பளங்களில் சேகரித்த உப்புக்
குவியல்கள். உப்பு மலைகள். இந்த மூன்றுமே இல்லாமல் சில இடங்களில் ஆற்று வெள்ளம், நதி நீர் கொண்டு சேர்த்த ,மணிகள் கலந்து குவிந்த பொன்னிற ஆற்று மணல் மேடுகள், திட்டுகள்.
79. பந்தினை இளையவர்‌ பயில்‌ இடம்‌. – மயில்‌ ஊர்‌
கந்தனை அனையவர்‌ கலை தெரி கழகம்‌. –
சநதன வனம்‌ அல. சண்பக வனம்‌ ஆம்‌;
நந்தன வனம்‌ அல. நறை விரி புறவம்‌;
கோசல நாட்டு பெண்கள் பந்து விளையாட பல பொது இடங்கள் உண்டு. அங்கே கலகலவென சிரிப்போடு குதூகலமாக அவர்கள் விளையாடும் இடம் சந்தன வனம் என்று நினைக்காதீர்கள். அவர்கள் பூசியுள்ள வாசனை சந்தன, நறுமண மேனிப் பூச்சுக்களிலிருந்து பரவும் சுகந்தம் ஓஹோ இது ஒரு சண்பக வனமோ என்று எண்ணச்செய்யும்.
நெற்றி நிறைய வெண்ணிற திருநீறு, கழுத்தில் மணி, மலர் மாலைகள், கையிலே வேல், அழகிய சுருண்ட கூந்தல் பளிச்சென்ற முகம் … இது தான் அந்த பிரதேச ஆண்களின் தோற்றம். எல்லோரும் சுப்பிரமணியன்
தானோ இங்கே என்று நினைக்கச் செய்யும். அவர்கள் வில் அம்பு, ஈட்டி வேல் கத்தி வீச்சு பயிற்சிகளை பெறுவார்கள்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *