கதை கேளு கதை கேளு…… நங்கநல்லூர் J K SIVAN
நான் சின்ன வயசிலே கேட்டதை, அப்புறம் கொஞ்சம் படிக்கத் தெரிந்த பையனாகி லைப்ரரிகளில் படித்துத் தெரிந்து கொண்ட கிருஷ்ணன் கதையை இப்போது குழந்தைகளே, உங்களுக்கு சொல்கிறேன்.
நம் எல்லோருக்குமே இளமை, பால்ய பருவம் ஒரு வரப்பிரசாதம். சந்தோஷத்தைத் தவிர வேறொன்றும் தெரியாத வயசு.
வேப்ப மரத்தடியில் தாழ்வாரத்தில் வெராண்டாவில் நிலாவெளிச்சத்தில் கேட்ட கதைகள், அப்புறம் பள்ளிக்கூடத்தில் சில வாத்தியார்கள் சொன்ன கதைகள், அப்பா அம்மா, பாட்டிகள் அத்தைகள் சொன்ன கதைகள், வளர்ந்த பிறகு நானாக புத்தகங்களில் படித்த கதைகள், அப்புறம் கோயில்கள் மற்றும் பொது இடங்களில் பாலகிருஷ்ணா சாஸ்திரி, அனந்தராம தீக்ஷிதர் போன்ற அற்புத உபன்யாசகர்கள் சொன்ன கதைகள் எல்லாம் உள்ளே நிரம்பி அவற்றை உங்களுக்கும் சொல்ல ஆசை.
கொஞ்சம் கொஞ்சமாக சொல்கிறேன். நானும் இப்போது கதை சொல்லும் தாத்தா தான். 85+. எத்தனையோ குழந்தை களுக்கு நானும் கதைகள் சொல்லி இருக்கிறேன். இன்னும் எழுதிக் கொண்டு தானே இருக்கிறேன். உங்களுக்குத் தெரிந்தகதையைத் தான் நான் திருப்பிச் சொல்லப் போகிறேன்.
”ஒரு ஊர்லே ஒரு ராஜா.” என்று கதை கேட்க ஆரம்பிக்கும் போதே எவ்வளவு உற்சாகம் எனக்கு ஏற்பட்டதோ அந்த உற்சாகத்தை உங்களுக்கும் கொடுத்தால் ஆனந்தமாகமாகத்தானே இருக்கும். தமிழிலே சொன்னால் ஒரு ருசி, ஆங்கிலத்தில் சொன்னால் வேறே ஒரு ருசி. நிறைய குழந்தைகளுக்கு தமிழிலே சொன்னால் தான் பிடிக்கும். மண் வாசனை.
எந்த கதை சொன்னாலும் நான் அதில் கிருஷ்ணனை உள்ளே கொண்டு வந்துவிடுபவன். அவன் பங்கேற்ற மஹா பாரத கதை சாதாரண கதை அல்ல. ஆயிரமாயிரம் வருஷங்களாக எத்தனை தலைமுறை கேட்டு, பாடி, படித்து, சொல்லி மகிழ்ந்த அற்புத இதிகாசம். என்றும் நிரந்தரமானது.
பதினெட்டு நாட்கள் நடந்த மஹா பாரத யுத்தம் முடிந்து பல வருஷங்கள் ஆகிவிட்டன. அபிமன்யு போரில் கொல்லப்பட் டான். அவன் மகன் பரீக்ஷித் ஒரு ரிஷி சாபம் வாங்கி இன்னும் ஏழு நாட்களில் மரணம் அவனைத் தழுவப்போகிறது.
சுக ப்ரம்ம ரிஷி அவனுக்கு எழுநாட்களில் கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாற்றை ஸ்ரீமத் பாகவதத்தின் ஒரு அங்கமாக சொல்கிறார். அதில் அளவற்ற சந்தோஷம் அடைகிறான் பரீக்ஷித். பரீக்ஷித் ஏன் எழுநாளில் மரணம் அடையவேண்டும்? அதற்கும் ஒரு கதை இருக்கிறதே. அதை மட்டும் இப்போது சொல்லி விடுகிறேன்.
ராஜாக்கள் வேட்டையாடுவார்கள் இல்லையா?. பரீக்ஷித் ஒருநாள் காட்டுக்கு வேட்டையாட போனான். மான் கரடி புலி என்று மிருகங்களை வேட்டையாட துரத்தி ஓடி ரொம்ப களைத்து விட்டான். ரொம்ப தாகம். கூட வந்தவர்களைக் காணோம். அவர்களை விட்டுப் பிரிந்து வழி தெரியாமல் தனியாக எங்கோ காட்டின் உள் பகுதிக்குள் பரீக்ஷித் சென்றுவிட்டான். அவன் கண்ணில் ஒரு ஓலைக் குடிசை பட்டது. ஒரு ரிஷியின் ஆஸ்ரமம் அது. சமீகர் என்கிற ரிஷி அதன் வாசலில் உட்கார்ந்து ஜபத்தில், த்யானத்தில், ஆழ்ந்திருந்தார். ”முனிவரே, எனக்கு குடிக்க இங்கே தண்ணீர் கிடைக்குமா…. ரெண்டு மூன்று தடவை கேட்டுவிட்டான் பரீக்ஷித். ரிஷிக்கு அவன் கேட்டது காதில் விழவில்லை, அவர் கண் மூடி த்யானத்தில் இருந்தபோது காதும் கேட்கவில்லை,கண்ணும் அவனைப் பார்க்கவில்லை. ஆகவே பதில் சொல்லவுமில்லை. பரீக்ஷித் அவர் வேண்டுமென்றே பேசாமல் இருக்கிறார். நான் இந்த ஊர் ராஜா, என்று தெரிந்தும் என்னை அவமதிக்கிறார் அகம்பாவம் பிடித்த ஆள் என்று கோபித்து அங்கும் இங்கும் பார்க்கிறான். ஒரு செத்துப்போன பாம்பின் உடல் கண்ணில் பட்டது. அதை வில்லினால் தூக்கி ரிஷி சமீகர் கழுத்தில் மாலையாகப் போட்டுவிட்டு பரீக்ஷித் போய்விட்டான். சமீக ரிஷியின் குமாரர் ஸரீங்கீ , ஆஸ்ரமத்துக்கு திரும்பி வந்தபோது தனது தந்தை சமீக ரிஷியின் கழுத்தில் ஒரு செத்த பாம்பு கிடப்பதை பார்க்கிறார். கோபம் தலைக்கேறி இதை யார் செய்தானோ, இன்னும் ஏழே நாளில் பாம்பு கடித்து மரணம் அடைவான் என்று சாபம் கொடுத்து விட்டார். ரிஷி சமீகர் தியானம் கலைந்து நடந்ததை அறிந்து வருத்தப்படுகிறார். ”மகனே நீ செய்தது அவசரத்தில் செய்த தவறு. பரீக்ஷித் நல்ல ராஜா” என்கிறார். சாபம் கொடுத்தது கொடுத்தது தானே.
பரீக்ஷித் நிலைமையை புரிந்து கொண்டான். இனி வரப்போகும் ஏழு நாட்களில் தான் நல்வழி அடையவேண்டும். என்று சுகப்பிரம்ம ரிஷியை வேண்டி அவர் அவனுக்கு எழுநாளும் ஸ்ரீமத் பாகவதத்தை உபதேசிக்கிறார். சப்தாகம் என்று ஏழுநாள் நாம் இன்றும் பாகவத உபன்யாசம் கேட்கிறோம்…
தொடரும்