ஷீர்டி ஸாயி பாபா. – நங்கநல்லூர் J K SIVAN
உலகெங்கும் ஹிந்துக்கள் முஸ்லீம்கள் அநேகர் இன்றும் என்றும் வணங்கும் தெய்வமாக விளங்கும் மஹான் ஷீர்டி ஸாயிபாபா. எளிய பரதேசியாக காட்சி அளித்த அந்த மஹான் எண்ணற்றவர்களின் துயர் தீர்த்தவர். இன்றும் தீர்ப்பவர். ”யாமிருக்க பயமேன்” என்ற ஆறுதல் வார்த்தைக்கு காரணமானவர் ஸாயி பாபா.அவர் வாக்களித்திருக்கிறார் பக்தர்களுக்கு. இது அரசியல் வாதிகளின் தேர்தல் வாக்கு போல் அல்ல. எந்த பிரதிபலனையும் எதிர்பாராது அன்பினால் பாசத்தினால் பக்தர்களுக்கு அனுக்ரஹம் பண்ணும் ஒரே நோக்கத்தோடு பெற்ற தாயினும் சாலப்பறிந்து அளித்த வாக்குறுதி.அதை தான் இன்று சொல்கிறேன். பாபா என்ன வாக்குறுதி தருகிறார் என்று அவர் வார்த்தைகளிலேயே அறிவோம்.:
1. எந்த பக்தன் இந்த ஷீர்டி மண்ணில் காலடி எடுத்து வைக்கிறானோ, அன்றே அவன் துன்பங்கள் துயரங்கள்,கஷ்டங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும். 2. என் சமாதி ஆலயத்தில் படியேறி வந்தவர்களின் துன்பம்,துயரம் எல்லாம் இன்பமும் சுகமுமாக, சந்தோஷமாக மாறிவிடும். 3. நான் என் பூதவுடலை விட்டு பிரிந்தாலும் என்றும் முனைப்பாகவும் சதா என்னை நாடி வரும் பக்தர்களின் நலனையே கருதி அதை அளிக்க எப்போதும் தயாராக இருப்பேன்.4. என் பக்தர்களின் குறையை கேட்டு அவர்களுக்கு நிவாரணம் வழங்கி ஆசிர்வதிக்க என் சமாதி செயல்படும்.பக்தர்களுடன் பேசும். .5. நான் முன்பே சொன்னபடி என் சமாதியிலிருந்தபோதும் பக்தர்கள் துயர் தீர்க்க முழு சக்தியுடன் செயல் படுவேன்.
6. என் சமாதி ஆலயத்தில் உள்ள என் பூத உடல் என்றும் பக்தர்களோடு பேசும்.
7. நான் என்றும் வாழ்பவன். எதற்கு என்றால் எனைத் தேடி வரும் என் பக்தர்களுக்கு, நீயே கதி என்று எனைச் சரணடைந்தவர்களுக்கு அடைக்கலம் அளிக்க, உதவ, நல்வழி காட்டி வழி நடத்த .
8.என்னை நீ பார்க்கிறாய். உன்னை நான் பார்க்கிறேன், பாதுகாக்கிறேன்.9 நான் எதற்கு இருக்கிறேன். உன்சுமைகளை என்மேல் இறக்கு. நான் சுமக்கிறேன். சந்தோஷமாக நிச்சயம் ஏற்கிறேன்.10. என் அறிவுரை வேண்டுமா? என் உதவி வேண்டுமா? அதற்காக என்னை நீ நாடி இவ்வளவு தூரம் வந்தாயா? அப்படியென்றால் அதை உடனே உனக்களிக்க நான் தயார்.11. என் பக்தர்கள் இல்லத்தில் எந்த குறையும் எப்போதும், என்றும், எதற்கும் இருக்காது என்பது நிச்சயம். ஷீர்டி ஸாயி பாபா வுக்கு ஏன் உலகமெங்கும் பக்தர்கள் என்று இப்போது புரிகிறதா? எனக்கு தெரிந்து தன்னைக் கடவுளாக விளம்பரமின்றி காட்டி, மகிழ்வித்தவர் பாபா ஒருவரே என்று அவர் சரித்திரம் படித்து புரிந்து கொண்டேன்.