பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
அப்பாவைப் பார்க்கணும்
அடியார்கள், பக்தர்களுக்கு இறைவன் ,அப்பா, அம்மா, சகோதரன், நண்பன், காதலன், காதலி… உதராணமாக இருக்கவே இருக்கிறார் மஹாகவி பாரதியார். அவர் எழுதாத கண்ணன் என் காதலன், காதலி, ஆசான், எஜமான் , வேலைக்காரன், சீடன், கண்ணம்மா வா…
கர்நாடகவாவில் ஹாஸ்பெட் எனும் ஊரில் ஒரு டாக்டர் ஆனந்தவல்லி. மஹா பெரியவாளைப் பெற்ற தந்தையாகவே-அடையாளம் கண்டவர். வாய் நிறைய ‘அப்பா’ ‘ அப்பா” தான் எப்போதும். மஹா பெரியவா அப்போது கர்நாடகாவில் ஹம்பி யில் முகாம். தினமும் டாக்கா ஆனந்தவல்லி வந்துவிடுவாள் . ஐந்து நிமிஷமாவது மஹா பெரியவாளுடன் பேசாமல் போக மாட்டாள்.நம்மைப் போல, மஹா பெரியவா எதிரில், கூனிக் குறுகி, வாயைப் பொத்திக்கொண்டு பேசுகிற பக்திப் பாசாங்கு அவளிடம் கிடையாது. அவள் பேச்சு தோரணை வீட்டில் அப்பா பெண் பேசுவது போல் தான் குரல் இயல்பாக இருக்கும். பெரியவாளோடு ரொம்ப காலம் பழகி ”நீ இல்லை என்றால் வேறு கதி இல்லை’ என்பது போல் இருக்கும்.
ஐந்து நிமிஷத்துக்குள், ஐம்பது ‘அப்பா’ வந்துவிடும். அப்பா என்ற வார்த்தையே ஆனந்தவல்லியின் மூச்சு. அவளுடைய ஒவ்வொரு சொல்லிலும் ஒரு அம்மாவின் கரிசனம், நேசம் , பாசம் தெரியும். “அப்பா, நீங்க தினமும் ஃப்ரூட் ஜூஸ்,ரெண்டு தடவையாவது சாப்பிடணும்,அப்பா..’ ஏகாதசி அன்னிக்கு நாலு தடவையாவது பால் சாப்பிடணும் அப்பா, அது ஒண்ணும் தப்பில்லே, உபவாசம் ஒண்ணும் கெட்டுப் போயிடாது அப்பா.” மஹா பெரியவாளுக்கே இப்படி எத்தனையோ உபதேசங்கள் பண்ணுவாள்.. அவளிடம் கர்வமே கிடையாது.
மஹா பெரியவாளுக்குக் கைங்கரியம் செய்யும் தொண்டர்களுக்கு, ஆனந்தவல்லியைக் கண்டால் ஓர் வித அவமதிப்பு, இளக்காரம். கோபமும் கூட.
டாக்டர் வந்து, ஆயிரம் அப்பாக்களால் பெரியவாளுக்கு சஹஸ்ர நாமம் செய்து விட்டுப் போனபின்னர், தொண்டர்கள் தங்கள் ஏளனங்களை வாய்விட்டுப் பேசி, திருப்தி அடைவார்கள்.
‘என்னப்பா,சந்த்ரமௌளி,அப்பா, குளிச்சுட்டயாப்பா? கண்ணப்பா, துணி துவச்சுட்டயாப்பா..’ குமரேசப் பா, இன்னும் சாப்பிடலயாப்பா..” என்று ஒருவருக்கொருவர் கேலி செய்வார்கள் .
ஒரு நாள் இரவு நள்ளிரவு தாண்டிவிட்டது. மஹா பெரியவா தங்கியிருந்த இடத்தின் வாசல் கதவு ”பட பட” வென்று தட்டப்படும் ஓசை. தொண்டர்களுக்கு அலுப்பு,ஆயாசம்,களைப்பு, அடியார்கள் சிலரும் அங்கே தங்கியிருந்தார்கள். வேறு வழியில்லாமல் ஒரு தொண்டர் தட்டுத் தடுமாறி நடந்து வாசற் கதவைத் திறந்தார்.திகைத்தார், வேரோடிப் போனார், யா…யார்?டாக்டர் ஆனந்தவல்லி அந்நேரத்தில் அங்கே நிற்கிறாள்.!
“அப்பாவைப் பார்க்கணும்…”
கெஞ்சல் இல்லை; அதட்டல் இல்லை; ஆவேசம் இல்லை. இயல்பான குரல்.
தொண்டருக்கு வந்ததே, கோபம். “உங்களுக்கு என்ன பைத்தியமா,டாக்டர்?..இந்த ரத்திரி வேளையிலே பெரியவாளை எப்படிப் பார்க்கிறது?..”
“அப்பாவை நான் இப்போ பார்க்கணும்”
“என்னடா அங்கே தகராறு?” என்று உட்புறத்திலிருந்து மட நிர்வாகி குரல் கேட்டது.
“அப்பாவைப் பார்க்கணுமாம்..”
“யாரு? டாக்டரா?”
தொண்டர்களை இடித்து தள்ளிக்கொண்டு டாக்கா உள்ளே வந்து விட்டாள் . ”நான் அப்பாவை இப்போ பார்க்கணும் ” என்றார்,சாந்தமாக.
“நீங்க..மண்ணாங்கட்டி மரியாதை என்ன? நீ நிஜமான டாக்டரா? போலி டாக்டரா?..
ராத்திரியில் பெண்கள் மடத்துக்கு வரக்கூடாது.
“நான் இப்போ அப்பாவைப் பார்க்கணும்” என்றாள் அவள் உறுதியாக.
“இவ சொன்னா போகமாட்டா…அடிச்சுத்தான் அனுப்பணும். ஐந்தாறு ஆவேசக் குரல்களை மீறி, உள்ளே ஒரு கதவு திறக்கப்படும் மெல்லிய ஒலி.
திரும்பிப் பார்த்தார்கள், மஹா பெரியவாள்! தான் படுத்திருந்த அறைக்கு வெளியே வந்து இதெல்லாம் பார்த்துக்கொண்டு நின்றார்.ஆனந்தவல்லி தடாலென்று கீழே விழுந்து அவரை நமஸ்கரித்தாள். “அப்பா..அப்பா…அப்பா.”அமுதத்தில் தோய்ந்த பாசம்.
தரிசனம் ஆகிவிட்டது போகவேண்டியது தானே? போகவேண்டியது தான். ஆனால் சைகைகாட்டிப் பெரியவாள் அழைக்கிறார்களே?”என்ன அவசரம், எதுக்கு வந்தே இந்த அர்த்த ராத்திரிலே”
“பக்கத்து கிராமத்திலே ஒரு ப்ரஸவ கேஸ், அப்பா, ரொம்ப க்ரிடிகல். தேவையான மெடிஸின்ஸ் கைவசம் இல்லே.. பாவம் பா. சின்ன வயசுப் பொண்ணு.. ரொம்பப் போராடினேன். என்னாலே முடியல்ல.. அப்பா,அப்பான்னு நூற்றெட்டு தடவை சொன்னேன்…அந்த பொண்ணுக்கு உயிர் வந்துடுத்து..! பகல்லே அப்பாவைப் பார்க்கமுடியல்லே. கிராமத்திலேர்ந்து
வந்தவுடனே இங்கே நேரே வந்துட்டேன். உங்களாலே ஒரு உயிர் பிழைச்சுதுப்பா .”
ஐந்து நிமிஷம் ஓர் அரவம் இல்லை.
பெரியவா மெல்லிய குரலில் கேட்டார்கள். “ராத்திரி வேளையிலே ஸ்திரிகள் மடத்துக்கு வரக்கூடாது..நான் தற்செயலா முழிச்சிண்டு வெளியே வந்தேன். இப்போ என்னைப் பார்க்க முடியல்லேன்னா என்ன பண்ணியிருப்பே?”
கண்களில் நீர் மல்க அழுதாள். “என்னப்பா, இது? இவர்கள் மாதிரி, நீங்களும் கேட்கிறேள்? அப்பாவைப் பார்க்கணும் என்கிற எண்ணம் இருந்ததே தவிர உங்களை பாக்க முடியாமல் போகும் எகிருபா எண்ணமே தோணலேப்பா. எப்படி முடியாமற்போகும்? என் அப்பாவைப் பார்க்கணும்..அவ்வளவு தான். ராத்திரியோ,பகலோ எதுவா இருந்தா எனக்கு என்ன அப்பா?”
பெரியவா சுற்றிப்பார்த்தார். தொண்டர் புரிந்து கொண்டு ஒரு முழம் மல்லிகைச் சரத்தையும்,மாம்பழத்தையும் தட்டில் வைத்து, பெரியவாளிடம் நீட்ட ஆசியுடன் அதை பெரியவா டாக்டரிடம் கொடுத்தார்,வந்தனம் செய்துவிட்டு,”அஞ்சு மணிக்கு விசுவரூப தரிசனத்துக்கு வந்துடறேன்”ப்பா என்று சொல்லிவிட்டு ஓர் ராஜகுமாரி மாதிரி வீறாப்புடன் வாசல் நோக்கி நடந்தாள் ஆனந்தவல்லி.
நடந்ததெல்லாம் கனவா,நனவா என்றே புரியவில்லை. தொண்டர்களுக்கு. விடியற்காலம், விசுவரூப தரிசனத்துக்கு ஆஜரானார் டாக்டர். அப்போது தொண்டர்கள் கண்களுக்கு டாக்டர் ஒரு தேவதையாகக் காட்சி தந்தார்.மதிப்பும் மரியாதையும் கொண்ட பக்தராக அவர்கள் அறிந்து கொண்டு வணங்கினார்கள்.