அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN
கோச்செங்கட் சோழநாயனார்
சோனாடு சோறுடைத்து என்று வளமை மிக்கது சோழநாடு. காரணம் காவிரியாறு. வீரமும், பக்தியும், தர்மமும் நிறைந்த அரசர்களாக சோழ ராஜாக்கள் ஆண்டுவந்த பிரதேசம். அப்படி புகழ் எய்திய ஒரு சோழ ராஜா தான் கோச் செங்கட் சோழன். சரித்திரம் அவனைச் செங்கணான் என்றும் கூறும்.
காவேரி ஆற்றின் ஒரு பகுதிக்கு சந்திர தீர்த்தம் என்று பெயர். அதை ஒட்டி அடர்ந்த மரங்கள் நிறைந்த காடு இருந்தது. சூரிய ஒளியே தெரியாமல் காட்டு மரங்கள் இலைகளால் கூரை போட்டிருந்த இருண்ட காடு. காடு என்றால் அநேக மிருகங்கள் இருக்கும் அல்லவா. அதில் ஒரு பலம் மிக்க அழகிய வெள்ளை யானை ஒன்று இருந்தது. அடர்ந்த காட்டின் உட்பகுதியில் ஒரு பெரிய வெண்ணிற நாவல் மரம் ஒன்று. அதன் கீழே ஸ்வயம் புவாக ஒரு சிவலிங்கம் காணப்பட்டது. அந்த வெள்ளை யானைக்கு எப்படியோ அந்த சிவலிங்கத்தின் மீது ஒரு பற்றுதல். பக்தி. தினமும் காட்டிலிருந்த அருவியில் நீராடி விட்டு, துதிக்கையில் நிறைய நீர் முகர்ந்து கொண்டு வரும். அதால் சிவலிங்கத்துக்கு ஜம்மென்று அபிஷேகம் பண்ணும். கட்டு மலர்கள் நிறைய பறித்து வந்து சிவலிங்கத்தின் மேல் போட அந்த யானைக்கு ரொம்ப பிடிக்கும். அப்படி யானை வழிபட்ட சிவ லிங்கம் இன்னும் இருக்கிறது. நம் அனைவருக்கும் தெரிந்த திருவானைக்கா சிவன் கோவிலில் இருக்கும் ஜம்புகேஸ்வரர் தான் அந்த சிவலிங்கம். அந்த கோவிலுக்கு மேலே சொன்ன வெள்ளை யானையைத் தவிர இன்னொரு சிவபக்தரும் வருவதுண்டு. பூர்வ ஜென்ம பக்தி ஞான உணர்வு கொண்ட ஒரு சிலந்தி தான் அந்த பக்தர். யானையைப் போல சிலந்தியால் நிறைய நீர் கொண்டுவந்து அபிஷேகமோ, பூக்கள் கொண்டு வந்து அர்ச்சனையோ பண் ண எப்படி முடியும்? ஆகவே அது தன்னாலான வழியில், சிவலிங் கத்தின் மேல் சருகுகள் உதிராமல் இருப்பதற் காகவும், பறவை முதலானவை எச்சமிடாமல் இருப்பதற்காகவும் தனது வாய் நூலால் ஒரு சிலந்தி வலை விதானம் அமைத்து கூரையை அமைத்தது.
இப்படி சிலந்தி சிவலிங்கத்துக்கு வலைக் கூரை அமைத்ததை மறுநாள் யானை பார்த்து விட்டது. வாய் நிறைய காவேரி ஜலமும், பூக்களுமாக வந்த யானைக் கு சிவலிங்கம் மேல் சிலந்தி வலை இருப்பது பிடிக்க வில்லை. ஒரு நிமிஷத்தில் சிலந்தி வலையைக் களைந்து தூர வீசியது. அப்புறம் வழக்கம்போல அபிஷேகம் பூக்கள் அலங்காரம் தொடர்ந்தது
வெள்ளை யானை இவ்வாறு செய்தபிறகு சிவந்தி வந்தது. ”ஆஹா யார் நான் ரொம்ப கஷ்டப்பட்டு அமைத்த வலை விதானத்தை நாசப் படுத்தியது? மறுபடியும் சிலந்தி வலை பின்னி சிவனுக்கு விதானம் அமைத்தது. யார் வந்து இப்படி வலையை நாசம் பண்ணுவது என்று கண்டுபிடிக்க சிலந்தி அங்கே யே ஒளிந்து கொண்டிருந்தது.
ஒவ்வொரு நாளும் இப்படியே சிலந்தி வலை மீண்டும் மீண்டும் அழிந்து புதிதாக விமானம் அமைத்தது. இப்போது இதற்கு காரணம் வெள்ளை யானை தான் என்று தெரிந்துவிட்டது. யானையின் மீது கோபத்தோடு அதன் தும்பிக்கைக்குள் சிலந்தி புகுந்து கொண்டு உள்ளே கடித்து துன்புறுத்தியது.
வலி பொறுக்க முடியாத வெள்ளையானை துதிக்கை யை கீழே மோதி சுழற்றி என்னென்னவோ செய்து பார்த்தும் சிலந்தியின் போன கடி நிற்கவில்லை. பாவம் வெகு நேரம் அவஸ்தைப்பட்ட வெள்ளையானை துடி துடித்து வலிமிகுதியால் கீழே விழுந்து இறந்து விட்டது. தும்பிக்கையை தரையில் மோதிய வேகத்தால் தும்பிக்கைக்குள் இருந்த சிலந்தியும் அதே நேரம் தானும் உயிரை விட்டது. ஜம்புகேஸ்வரன் வெள்ளை யானைக்கு கைலாச பதவி அளித்தார். சிலந்திக்கு என்ன செய்தார் என்று அறிந்து கொள்வோமா?
மேலே சொன்ன சம்பவம் நடந்த காலத்தில் சோழ நாட்டை ஆண்டு கொண்டிருந்த ராஜா சுபதேவன் என்பவன். அவன் மனைவி கமலாவதி அழகும், கற்பும் நிறைந்த பட்டத்து ராணி. அவர்களுக்கு வெகு காலமாக புத்ர பாக்யம் இல்லை. அடிக்கடி சிதம்பரம் போய் நடராஜ பெருமானை தரிசித்து புத்ர பாக்யம் வேண்டி னார் கள். யானையோடு யுத்தம் செய்து மாண்ட சிலந்தியை சுபதேவன் மகனாக பிறக்க பரமேஸ்வரன் அருள் புரிந்தார். கமலாவதி நிறை மாத கர்ப்பிணி. எந்த நேரமும் பிரசவம் நேரும் என்ற சமயத்தில் அரண்மனை ஜோசியர்கள் ”மஹாராஜா இபோபோது எந்த நேரமும் ராணிக்கு புத்ர சந்தான பாக்யம் நிகழப்போகிறது. குழந்தை இப்போது பிறக்காமல் இன்னொரு நாழி நேரம் கழித்து பிறந்தால் ரொம்ப நல்லது. உலகமுழுதும் ஆளக்கூடிய அரசனாக உங்கள் மகன் பிறப்பான் என்கிறார்கள்.
கமலாவதிக்கு தனக்குப் பிறக்கப் போகும் ஆண்மகன் உலகம் முழுவதையும் அரசாள வேண்டுமென்ற ஆசை இருக்காதா?. தனக்குஇன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிரசவம் ஆகவேண்டும் என்று முடிவெடுத்தாள்.
அதனால், தன்னைத் தலைகீழாகக் கட்டி தொங்கவிட கட்டளையிட்டாள். ராஜாவும் அப்படியே ஒப்புக் கொண்டு கமலாவதியைத் தலைகீழாகக் கட்டித் தொங்க விட்டனர்; ஒரு நாழிகை சென்றதும் அவிழ்த்து விட்டார்கள். உடனே கமலாவதியின் வயிற்றிலிருந்து அழகான ஆண்குழந்தை யொன்று பிறந்தது. காலங் கடந்து பிறந்தமையால் அக் குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன. கமலவதி ” அட என் ராஜாப்பயல் சிவந்த கண்ணனோ” என்று சொன்னாள் . ஆகவே அந்த குழந்தை ”கோச் செங்கணான்” என்று பெயர் பெற்றான்.
கமலாவதி இறந்து போனாள் . ராஜா சுபதேவன் மகனை ரொம்ப பாசத்தோடு வளர்த்தான். கல்வி கேள்விகளில், அரசனுக்குரிய வித்தைகளில் கோச் செங்கணான் சிறந்து தேர்ச்சி அடைந்தான். எல்லோரும் போற்றும் நீதி நேர்மையுள்ள ராஜாவானான். சிறந்த சிவபக்தன். பல சிவாலயங்களை நிர்மாணித்தான். தான் முற்பிறவியில் திருவானைக்காவில் ஒரு சிவபக்தி கொண்ட சிலந்தி என்பதை உணர்ந்தான். அங்கே சென்று அந்த வெள்ளை நாவல் மரத்தோடு சேர்த்து ஒரு சிவாலயம் எழுப்பினான்.
சேரநாட்டு ராஜா கணைக்கால் இரும்பொறைக்கும் கோச்செங்கட் சோழனுக் கும் பெரிய யுத்தம் கழுமலம் என்ற ஊரில் நடந்து சோழன் வென்றான். சேரனை சிறையிலிட்டான். சேரன் கணைக்கால் இரும்பொறை யின் நண்பர் பொய்கையார் என்ற ஒரு புலவர் யுத்தத்தில் கோச்செங்கணான் வீரத்தை போற்றி புகழ்ந்து களவழி நாற்பது என்ற நூலை இயற்றி கோச்செங்கணானிடம் அளித்தார். அதன் மூலம் சோழன் சேர ராஜாவை விடுதலை செய்தான். சிவபக்தன் கோச்செங்கணான் 78 சிவாலயங்களை எழுப்பியவன். சிவனடியார்களை ஆதரித்தான்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவனாக இன்றும் சிவாலயங்களில் ப்ரஹாரத்தில் நாம் வணங்கும் தெய்வ மானான். திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு செல்பவர்கள் கோச்செங்கணானை ஒரு நிமிஷமாவது நினைத்துக் கொண்டு வணங்குவோம்.