கம்ப ராமாயணம் – நங்கநல்லூர் J K SIVAN
28. முல்லையைக் குறிஞ்சி ஆக்கி,மருதத்தை முல்லை ஆக்க.
புல்லிய நெய்தல்தன்னைப் பெருஅரு மருதம் ஆக்க
எல்லையில் பொருள்கள் எல்லாம்இடை தடுமாறும் நீரால்.
செல்லுறு கதியின் செல்லும்வினை என. சென்றது அன்றே.
வெள்ளப்பெருக்கு வந்த பிறகு நிலத்தின் தன்மையே மாறிவிடுகிறது. முல்லை நிலம் குறிஞ்சி நிலமாகிவிடும். மருத நிலம் முல்லை நிலமாகிவிடும். நெய்தல் நிலம் மருத நில தன்மையை பெறும். பண்டங்கள் இடம் மாறும். எப்படி கர்மா வினை நம்மை அதன் போக்கில் இழுத்துச் செல்கிறதோ அப்படிதான் கோசலநாட்டில் சரயு நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து மாற்றம் கொண்டு வந்து தந்தது. ஆற்றில் நீர் ஓட்டத்துக்கு ”கதி” என்று சொல்வதுண்டு. கர்ம வினை மனிதரை தேவருக்கும், தேவர்களை மனிதருக்கும் தன்மை கொண்டது. கம்பர் கவிஞன் மட்டுமல்ல சிறந்த பக்தி வேதாந்தி.
காத்த கால்மள்ளர் வெள்ளக்கலிப்பறை கறங்க. கைபோம்ச்
சேர்த்த நீர்த்திவலை. பொன்னும் முத்தமும் திரையின் வீசி,
நீத்தம் ஆன்று. அலை லயஆகி நிமிர்ந்து பார்கிழிய நீண்டு.
கோத்த கால்ஒன்றின் ஒன்று குலம் எனப்பிரிந்தது அன்றே.
ரொம்ப அருமையான பாடல் இது. சரயு நதி வெள்ளம் பெருக்கெடுத்து பல வாய்க்கால்களாக வேகமாக பிரிந்து ஓடுகிறது.
எப்படி ஓடினாலும், வேறு பெயர்கள் ஆங்காங்கே பெற்றாலும், ஒரே நதியின் ஒரே ஜலம் தானே எல்லாம் . இது எது போல என்றால், ஒரே குல மாக இருந்த நாம், அப்படிப்பட்ட குலம் பல கிளைகளாகப் பிரிந்து மக்கள் பிரிந்து வாழ்கிறோம். எதையும் மாற்ற நம்மால் முடியாது. கால்வாய் ஒன்று பலவாகப் பிரிந்து போனாலும் அதன் உள் ஓடும் நீர் ஒன்றே.உலகில் மக்கள் உயிர்க் குலம் பல கிளைகளாகப் பிரிந்தாலும் உயிர் ஒன்றே.
கல்லிடைப் பிறந்து. போந்து. கடலிடைக் கலநத நீத்தம்.“எல்லைஇல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள்ஈது” என்னத்
தொல்லையில் ஒன்றேஆகி. துறைதொறும். பரந்த சூழ்ச்சிப்
பல்பெரு சமயம் சொல்லும் பொருளும்போல். பரந்து அன்றே.
மேலே சொன்னதை இன்னும் அழகாக விளக்குகிறார் கம்பர். சரயு நதி வேகமாக வெள்ளமாக ஓடி சமுத்திரத்தில் கரைந்து மறைந்து போகிறது. நம்மைப் படைத்த பரமாத்மா ஒருவனே. அது போல சரயுவின் வெள்ளநீரும் ஒன்றே. பல்வேறு மதங்களாக பிரிந்து அந்தந்த சமய தத்துவங்களின் கருத்துக்கு ஏற்பப் பரமாத்மாவும் வெவ்வேறு நாம. ரூபங்களோடு விளங்குகிறார். வெள்ள நீர் ஏரி. குளம். கால்வாய், குட்டை,போன்ற பல இடங்களில் பல பெயர்களால் பரந்து காணப்படுகிறது.
31. தாது உகு சோலைதோறும் சண்பகக காடுதோறும்.
போது அவிழ் பொய்கைதோறும் புது மணல் – தடங்கள்தோறும்.
மாதவி வேலிப் பூக வனம்தொறும் வயல்கள்தோறும்.
ஓதிய உடம்புதோறும் உயிர் என உலாயது அன்றே.
காடு மேடு, பள்ளம் சோலை வயல் என்று பல்வேறு இடங்களிலும் ஒரே சரயுவின் நீர் நிரம்பி உள்ளது. அது போல ஒரே ஆன்மா தான் நம்மைப் போன்ற மக்களின் பல உடம்புகளில் உள்ளே உறைகிறது என்கிறார் கம்பர்.