‘சித் சோர் ‘,உள்ளங்கவர் கள்வன் – நங்கநல்லூர் J K SIVAN பில்வமங்கள்
நான் பிறக்கு முன்பே M. K. தியாகராஜ பாகவதர் கொடி கட்டி பறந்தார். தமிழ் பட உலகின் முதல் சூப்பர் ஸ்டார் அவர் தான். அதோடு அவருடைய சிறப்பு அம்சம், முகம் கோணாமல் கந்தர்வ கானமாக பாடுவார். பாகவதரின் நடிப்பை விட பாடல்களுக்காகவே படங்கள் வருஷக்கணக்கில் ஓடின என்றால் அதுவே உண்மை. ஒரு படத்தில் குறைந்தது 25-30 பாட்டாவது இருக்கும். காதல் காட்சியோ, சாதாரணமாக கதாநாயகியோடு பேச்சோ, எதுவாக இருந்தாலும் நாலரை கட்டையில் கர்நாடக சங்கீத ஆலாபனை பாட்டு தான். பாகவதரின் ஒவ்வொரு படமும் 3 மணிக்கு குறையாமல் ஓடும். கொடுத்த காசுக்கு ரசிகர்கள்மனம் நிறைந்து பாடிக்கொண்டே வீடு திரும்புவார்கள். வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி போன்ற இரவுகளில் ரெண்டு படம் பார்த்தால் பொழுது விடிந்துவிடும்.
எங்கள் வீட்டுக்கு வழக்கமாக ரிக்ஷா வண்டி இழுத்துக்கொண்டு வரும் கோவிந்தசாமி ‘ராதே உனக்கு கோபம் ஆகாதடி ” பாடிக்கொண்டு தான் எங்களை ரிக்ஷாவில் இழுத்துச் செல்வார். கர்நாடக சங்கீதம் பட்டி தொட்டிகளில் எல்லாம் பரவ MKT ஒரு மூல காரணம் எனலாம். தமிழ் நாட்டில் முக்கால் வாசி பேர் ஜில்பா (பாகவதருடைய தலை முடி மாதிரி பின் கழுத்து வரை ) சிகை அலங்காரம், நெற்றியில் காலணா அளவு பெரிய வட்டமான குங்குமப்பொட்டு இப்படி தான் அலைந்தார்கள். எல்லோராலும் பாகவதர் மாதிரி ஜவ்வாது போட்டு வைத்துக்கொள்ள வசதி இல்லையே. காதிலும் வைர கடுக்கன் அணிந்து கொள்ளமுடியாது. அவர் பன்னீரில் குளித்தவர்.
கச்சேரிகளில் முதல் வரிசையில் உட்காரும் தெலுங்கு பாட்டு மட்டுமே பாடிய கர்நாடக இசை வித்வான்களுக்கு பாகவதர் மேல் உள்ளூர ஒரு பொறாமை உணர்ச்சி இருந்தது. காரணம் அவரது காந்த சக்தி தோற்றம், நெருங்க முடியாத கணீர் குரல், ஜன ஆகர்ஷணம். ஒரு சரியான ஜோடியாக பாபநாசம் சிவன் பாடல்கள் அவருக்கு அமைந்தது வரப் பிரசாதம்.
இது இருக்கட்டும். இன்று திருச்சி சங்கிலியாண்டார் புரம் இடுகாட்டில் எத்தனையோ கல்லறைகளுக்குள் ஒன்றாக MKT சமாதி சப்தமில்லாமல் காண்கிறது.
சிந்தாமணி என்று ஒரு படம். சிந்தாமணி என்கிற வேசியாக நடித்தவர் அஸ்வத்தம்மா என்கிற இழுத்து போர்த்திய ஆந்திர பெண்மணி. அவள் படத்தை அனேக வீடுகளில் மாட்டி வைத்து ரசித்த காலம். மன்னார்குடியில் ஒரு வீட்டில் அரிசி குதிரின் மேல் அவள் படம் தொங்கியது பத்து பதினோரு வயதில் நான் பார்த்த கவனம் இருக்கிறது.
பாகவதர் தான் பில்வ மங்கள். ”பில்வ மங்கள்” யாரா?
வேசி மீது கண்மூடித்தனமாக மையல் கொண்ட ஒரு வாலிபன். ஒரு இரவு. கொட்டும் மழையில் ஆற்றுக்கு அக்கரையில் இருக்கும் சிந்தாமணி வீட்டுக்கு போகவேண்டும் என்ற ஈர்ப்பு ஏற்பட்டு ஆற்றில் வெள்ளம் புரண்டோட அங்கு மிதக்கும் ஒரு பிணம் தோணியாகிறது. அக்கரை சேர்ந்தாலும் வேசி வீடு வாசல் சார்த்தபட்டிருக்கிறதே?.
உப்பரிகையில் அவள் குரல் கேட்க எப்படி மேலே செல்லலாம் என்று யோசிக்கும் பில்வமங்கள் ஒரு கயிறு கிளையில் தொங்குவதை கவனித்து அதைப் பிடித்துக்கொண்டு மரம் ஏறி அதன் வழியாக அவள் உப்பரிகையில் செல்கிறான்.
”ஏன் இந்த நேரம் வந்தாய்? ஏன் உன்மீது இவ்வளவு ரத்தம்? யாரையாவது கொலை செய்தாயா?”
”நானா? கொலையா ?என் மீது ரத்தமா? ”
பிலவ மங்கள் திகைக்கிறான். சிந்தாமணி யோடு அவனும் வெளியே வந்து பார்க்க பெரிய பாம்பு ஒன்று செத்து உப்பரிகை அருகே கிடக்கிறது. அதன் ரத்தம் அவன் மீது எப்படி வந்தது?
பில்வ மங்கள் நடந்ததை சொல்கிறான். தீராக் காமம் காதல் வயப்பட்டு இரவு நேரம், மழை, வெள்ளம், பாம்பு எதையும் லட்சியம் செய்யாமல், ஒரு பிணத்தையே தோணியாக யாக உபயோகித்து பாம்பைக் கயிறாக உபயோகித்து அவளை அடைந்தது அறிகிறாள்.
அழியும் இந்த தேகத்தில் மீது இத்தனை மோகம் கொண்ட நீ அழியாத பரந்தாமன் மீது துளியாவது மனதை ஈடுபடுத் னால் எத்தனை புண்யம் பெறுவாய்?. வலுக்கட்டாயமாக பாபத்தை சேர்த்து மூட்டை கட்டிக்கொள்கிறாயே என்று அவனுக்கு இதமாக சொல்கிறாள் அந்த வேசி பெண்மணி. கல்லும் கரையும் அவள் பக்திப் பேச்சு பில்வமங்களை சிதைத்து ஒரு சிறந்த கிருஷ்ண பக்தன் உருவாகிறான்.
பின்னர் லீலா சுகர் என்ற பெயர் கொண்டு அசாத்திய மாக ஒரு 108 ஸ்லோகங்கள் உருவாகிறது. அதுவே ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ரிதம்.
எனது நண்பர் ஒருவர் மும்பையிலிருந்து இந்த புத்தகத்தை நேற்று எனக்கனுப்பி ரசியுங்கள் என்று சொல்லுமுன்பே அசை போட ஆரம்பித்ததன் விளைவே இந்த பூர்வ பீடிகை.
ஜெய தேவர் அஷ்டபதி, கீத கோவிந்தம் என்னை எப்படி உலுக்கியதோ அதைப்போலவே இந்த புத்தகமும் என்னை ஈர்த்து விட்டது. இரு கண்களில் எந்த கண் உயர்ந்தது?
என்னை சிந்தாமணி பாடல்களால் கவர்ந்த MKT ஆத்மா சாந்தி பெறவும், மும்பை நண்பர் S விஸ்வநாதனின் ஆன்மா சாந்திபெறவும் அந்த கிருஷ்ணனையே , ”சித் சோரை” யே பிரார்த்திக்கிறேன்.
சிட்சோர் யார் என்று புரியவில்லையா ?சித் = சித்தம் சோர் = கள்ளன் . பில்வ மங்கள் இப்படித்தான் லீலா சுகராக மாறியபின் கிருஷ்ணனை அழைக்கிறார். தமிழில் அதி அற்புதமாக இதையே ”உள்ளங்கவர் கள்வன் ‘ என்று அழைக்கிறோம்.
இந்த சிவன் போல பில்வ மங்கள் கூட ஒரு சைவராயிருந்த கிருஷ்ண நேசர்.
லீலா சுகர் என்று பின்னர் அழைக்கப்பட்டவர்.வட மதுரையில் அவர் சமாதி உள்ளது. அவர் கேரளத்துக்காரர் என்பதில் சற்று உண்மையுள்ளது. ஏனெனில் கேரளாவில் கிருஷ்ண கர்ணாம்ருதம் மிகவும் பிரபலம். ஒருவேளை குருவாயூரப்பனின் கிருபையோ ?
ஒரு சில ஸ்லோகங்களில் குட்டி கிருஷ்ணன் புலி நகம் தரித்தவனாக வர்ணித்திருப்பதால் கேரளா பக்கம் இந்த பழக்கம் உண்டென்பதால் பில்வ மங்கள் மலையாள தேசம் என்பது ஊர்ஜிதமாகிறது.
சைதன்ய மகாபிரபு ஆந்திர தேசம் வந்தபோது அவருக்கு கிருஷ்ண கர்ணாம்ரிதம் முதல் பகுதி மட்டும் கிடைத்து மிக்க ஆர்வத்தோடு மற்ற இரு பாகங்களை தேடிக்கண்டு பிடிக்க அவரது சிஷ்யர்கள் சிலர் மலையாள தேசம் சென்றார்கள்.
”உன்னி கிருஷ்ணா என்னோடு வாடா” என்று பில்வ மங்கள் கூப்பிட்டபோதெல்லாம் குருவாயூரப்பன் கூடவே வந்தான் என்பார்கள்.இனி கொஞ்சம் கொஞ்சமாக க்ரிஷ்ணகர்ணாம்ரிதம் கடலில் மூழ்குவோம்