PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம்.-  நங்கநல்லூர்    J K  SIVAN
தெய்வம் வேறு  தேவர்கள் வேறு
மஹா பெரியவா  வார்த்தைகள் எளிமையானதாக இருந்தாலும்  ரொம்ப   ஆழமானவை, ஆணித்தரமானவை.  ஒரு சாம்பிள்  இது:
”கடவுள் னு  யாரோ  ஒருதத்தர்  தானே இருக்க முடியும்?  உங்களுக்கு மட்டும் என்ன முப்பத்து முக்கோடி தேவதைகள்?” என்று மற்ற மதஸ்தர்கள் நம்மைப் பரிஹாஸம் செய்கிறார்கள்.வாஸ்தவம் .ஸ்வாமி ஒருவர்தான். அவரைத்தான் நாம் பேச்சு வழக்கில் ‘தெய்வம்’, ‘தெய்வம்’ ‘ஸ்வாமி ‘  என்கிறோம். தெய்வம் என்றால் ‘விதி’ என்றே அர்த்தம். விதி என்பது ஸ்வாமி நமக்குத் தருகிற கர்ம பலன்தான். ஆனால் நாம் ‘ஸ்வாமி’  என்ற அர்த்தத்திலேயே தெய்வம் என்ற பதத்தை உபயோகிக்கிறோம். அதோடு, அந்த தெய்வமும்  ‘தேவர்களும்’  ஒன்று என்று நினைத்துக் கொண்டு, ‘முப்பத்து முன்று கோடி தெய்வமானது’ என்று நாமும் மற்ற  மதஸ்தர்களோடு சேர்ந்து கொண்டு  எண்ணுகிறோம்.

தெய்வம் (ஸ்வாமி) வேறு. தேவர்கள் வேறு. ஸ்வாமி ஒருவர்தான் என்பதே நமது மதம். அவரே மூன்று ரூபங்களை எடுத்துக்கொண்டு பிரம்மாவாக சிருஷ்டிக்கிறார். விஷ்ணுவாகப் பரிபாலிக்கிறார். ருத்ரனாக சம்ஹாரம் செய்கிறார்.

உண்மையில் இவர்களும் வேறு வேறு இல்லை. கோர்ட்டுக்குப் போகும்போது தாசில்தார் ஸுட் போட்டுக் கொண்டிருக் கிறார். பூஜை செய்யும்போது அவரே பஞ்சகச்சம் கட்டிக் கொள்கிறார்; மனைவி  வீட்டில்  இல்லாத போது அவரே சமைக்க நேர்ந்தால் அப்போது துண்டை மட்டும் இடுப்பில் சுற்றிக் கொள்கிறார். நாம் சாமானிய ஜீவர்கள். வேலைக்குத் தக்கபடி உடுப்பை மட்டும் மாற்றிக் கொள்கிறோம். சர்வ சக்தனான ஸ்வாமி  தனது வேலைக்கு ஏற்ப ரூபத்தையும் மாற்றிக் கொள்வார். பார்க்கப் போனால் சரீரம் என்பதே ஆத்மாவுக்கு ஒரு உடுப்பு மாதிரிதான். கீதையில் பகவான் இப்படித்தான் சொல்லியிருக்கிறார்.

அல்ப சக்தி கொண்டவர்களான நமக்கு வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு வேஷங்கள்  தேவையாகிறது. சர்வ சக்தரான ஸ்வாமி ஒரே சமயத்தில் பல காரியங்களில் ஈடுபட்டுப் பல வேஷங்களையும் போடுபவர். நாம் ஒரு சமயத்தில்  ஒரு வேலைதான் செய்கிறோம்; ஸ்வாமி ஒரே சமயத்தில் சகல வேலையும் செய்வதால் எல்லா வேஷமும் போடுகிறார்.இவற்றை எல்லாம் தான்  வெவ்வேறு தெய்வ வடிவங்களாகச் சொல்கிறோம்.  வணங்குகிறோம்.
இந்த தெய்வ ரூபங்களில் மஹா விஷ்ணு, ஈஸ்வரன், அம்பாள், விக்நேசுவரர், ஸுப்ரமண்யர் போன்றவர்கள் ஒரு சமயத்தில் ஏதோ ஒரு மாதிரி காரியம் மட்டும் செய்தாலும் கூட அவர்களுக்கு உள்ளுக்குள் தாங்கள் தான்  முழு முதல் ஸ்வாமி என்பது நன்றாக  தெரியும். அதனால் அவர்கள் பக்தர்களுக்கு மோக்ஷ பரியந்தம் எல்லா அனுக்ரஹங்களும் செய்கிறார்கள்.

ஆனால், தேவர்கள் யாவரும் இப்படி முழு ஸ்வாமியாகத் தங்களைத் தெரிந்து கொண்டிருக்கிற தெய்வ வரிசையைச் சேர்ந்தவர்களல்ல.   அவர்கள் யார் என்று சொல்கிறேன்:
ஸ்வாமி சிருஷ்டித்துள்ள எண்ணி முடியாத அண்டங்களில் இருக்கும் பிராணிகளுக்கெல்லாம் இருக்க இடம், உண்ண உணவு முதலியன  தேவை. ஆகாயம், காற்று, தீ, நீர், மண்  என்று அடையாளம் கொண்ட  இந்த பஞ்ச பூதங்களைப் பல வித மாகக்  (தன்மாத்ரைகள்)   கலந்தே அவர் இத்தனை ஜீவன்களுக்கும்  வாழ்வதற்கு உபகரணங்களைத் தந்திருக்கிறார். ஆறே சுவைக் குள் அடங்கும் சரக்குகளை வைதத்துக்கொண்டு நாம் ஆயிரக்கணக்கான பக்ஷண  தினுசுகளைச்செய்வது மாதிரி.      ஐந்தே பூதங்களைப் பலவிதங்களில் கலந்து எல்லா உயிர்களுக்கும் ஜீவனோபாயம் தருகிறார் ஸ்வாமி.புரிகிறதா?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *