ஆதி சங்கரர் – நங்கநல்லூர் J K SIVAN
கௌபீன பஞ்சகம்/ யதி பஞ்சகம் 1
ஆதி சங்கரர் – நங்கநல்லூர் J K SIVAN
கௌபீனம் என்றால் கோவணம். இது கெட்டவார்த்தை இல்லை. அநாகரீகமான சொல் அல்ல. ஆண்டிகள், சந்யாசிகள், யோகிகள், துறவிகள் மானத்தை மறைக்க உடுத்தும் ஒரு குறைந்த பக்ஷ ஆடை. இதில் என்னய்யா பெருமைப்பட இருக்கு? இதைப் பற்றி ஏன் எழுதறே? நீங்கள் இப்படி கேள்வி கேட்கலாம். பெருமை இருப்பதால் தான் மஹா பெரியவா. ரமண மகரிஷி, தாயுமானவர், சித்தர்கள், யோகிகள் எத்தனையோ பேர் கௌபீனத்தை அணிந்தார்கள். நாடெங்கும் நடமாடினார்கள், தரிசனம் கொடுத்தார்கள். பட்டினத்தார் அழகாக சொல்கிறாரே:
”உடை கோவணம்உண்டு உறங்கப் புறத்திண்ணை யுண்டு உணவிங்கு
அடை காய் இலையுண்டு அருந்தத் தண்ணீர்உண்டு அருந்துணைக்கே
விடை யேறும் ஈசர் திருநாமம் உண்டு இந்த மேதினியில்
வட கோடு உயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே !
இந்த பூவுலகில் வாழ வழியில்லை, இடமில்லை என்று யார் சொன்னது? கௌபீனம் எனும் கோவணத்தை எல்லோராலும் அணிய முடியாது. இடுப்பில் அரை ஞாண் கயிறு வேண்டும். அதை தான் அரணாக்கயிறு, அண்ணா கவுறு என்கிறார்கள். அதைச் சிறு குழந்தையிலிருந்து ஆண் பெண் எல்லா குழந்தைகளுக்கும் கட்டி, அதில் தாயத்து, நாய்க்காசு, எல்லாம் கோர்த்து வைப்போம். அரைஞாண் கயிறு இருந்தால் தான் முன்னும் பின்னும் இடையில் துணி செருக வழி உண்டு.
கவலையே இல்லை என்கிறார் பட்டினத்தார். எப்படி தெரியுமா?
‘ எனக்கு உடுத்துக் கொள்ள கோவணம் எனும் கௌபீனம் இருக்கிறது. படுத்து உறங்குவதற்கு ஏதோ ஒரு வீட்டின் வாசல் திண்ணை கண்ணில் படுகிறது. பசித்த போது மட்டும் கடித்து விழுங்க இலைகள், காய்கள் எங்கும் கிடைக்கிறது. தாக மெடுத்தபோது எங்காவது குளம் குட்டை, ஓடை தண்ணீர் இருக்கவே இருக்கிறது. நான் தனியன் இல்லை, எனக்கு சுற்றம் பந்தம் சொந்தம் எல்லாமே உண்டு. யார் தெரியுமா? ரிஷப வாகனம் மீது அமர்ந்திருந்து அருள் பாலிக்கும் சிவ பெரு மானின் ஐந்தெழுத்துத் திருமந்திரம் ”ஓம் நம சிவாய ” எனும் பஞ்சாக்ஷரம். அது என்னை பாதுகாக்கிறது அப்புறம் எனக்கு என்ன கவலை? அமாவாசைக்குப் பின் வரும் மூன்றாம் பிறைச் சந்திரனுடைய வடகோடு உயர்ந்தால் என்ன, தென்கோடு தாழ்ந்தால்தான் அது பற்றி நான் ஏன் கவலைப்படவேண்டும்? (மூன்றாம் பிறையின் வடகோடு உயர்ந்து, தென்கோடு தாழ்ந்திருந்தால் மழைக்கு அறிகுறி)
கோவணம் அணிவது என்பது உலகைத் துறந்த தைரியசாலியின் வைராக்யத்தை குறிக்கும் ஒரு அடையாளம். முற்றும் வெறுத்தவன் ஏற்றுக்கொள்ளும் ஆடை. சாஸ்திரம் சம்ப்ரதாயம் எல்லாமே இந்த உலகத்தில் ஆசை வயப்பட்டவர்களுக்கு தான். திருவோடு கூட இல்லாத கோவணாண்டி துறவிக்கு, சந்திரனின் பிறையில் வடபக்கம் உயர்ந்தால் என்ன, தென் பக்கம் உயர்ந்தால் என்ன ஆச்சு?
மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசையாகிய மூவாசைகளையும் அவற்றின் கிளைகளாக பல்கிப் பெருகிக் கொண்டே போகும் லக்ஷோப லக்ஷம் ஆசைகளையும் துறந்தால் ஒழிய நற்கதியை அடைய முடியாது.
பற்று அறுந்தவனுக்கு ஒரு நிஷ்டையும் தேவையில்லை. அப்படி ஒருவர் இருப்பாரேயானால் அவரை அறியாதவர்கள் கள் தேடிப்பிடித்து பாருங்கள். அவரே சிவ சொரூபம். அவருக்கு நல்வினைகளும் இல்லை, தீவினைகளும் இல்லை. அவரே பரம், அவரே சத்தியம். அவர் பார்த்தால் வினைகள் பொசுங்கிப் போகும். அவரை ஸ்பரிசித்தால் எல்லா தடைகளும் நொறுங்கிப் போகும். ஞான வாசல் திறக்கும். மெய்யறிவு துலங்கும். நான்கு வேதங்களாலும் அறிய முடியாததை நீ அறிந்து கொள்வாய். அவரையே சற்குருவாய் ஏற்றுக் கொள்.
ஆகாயத்தில் உள்ள நக்ஷத்திரங்களைப் போல, பாலைவனத்தில் உள்ள மணலைப் போல, எண்ணிக்கையில் அடங்காத ஆசைகளைக் கொண்டிருக்கிறோம். இவ்வளவு ஆசைகளையும் அடைவதென்பதோ அல்லது முழுமையாக்க முயற்சி செய்வதோ அஞ்ஞானம் எனப்படும். அதுவே அறியாமை. இந்த ஆசைகளே நம்மைக் குழப்பி விடுபவை. எந்த அளவுக்கு இந்த ஆசைகளை அடையத் தலைப்படுகிறோமோ அல்லது அனுபவிக்கிறோமோ அந்தளவுக்கு அவை அதிகமாகிக் கொண்டே இருக்கும். முடிவே இல்லை.
அதனால்தான் உடலுக்குத்தான் வயதாகி விட்டது மனதளவில் இன்னும் நான் இளைஞன் என்கிறோம். உடல் கிழப்பருவம் அடைந்தாலும் ஆசைகள் கிழவனாகவில்லை என்றும் நிரூபிக்கும் பலரை பார்க்கிறோம். ‘மீசை நரைச்சாலும் ஆசை நரைக்கலே , அறுபதிலும் ஆசை வரும்” என்ற வாசகங்கள் தெரியுமே. ஆசைகளை அனுபவித்து அனுபவித்து நம் பல், கண், காது போன்ற எல்லா உறுப்புகளும் பலவீனமாகி விட்டாலும் மனம் அதை விடாமல் குரங்குப் பிடியாகப் பற்றிக் கொண்டே இருக்கிறது. ஆசை என்றால் என்ன என்று அறியாத நிலையை அடைந்தால் மட்டுமே மேன்மையடைய முடியும் என்பதை தான் அழகாக திருமூலர் கூறுகிறார். ரொம்ப பிரபலமான திருமந்திரம் இது: .
”ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே!
ஆசைகள் அனைத்தையும் நாம் அறவே அற்றுப் போகச் செய்ய வேண்டும். அறவே ஆசைகளை அறுத்து நாம் இறைவனான சிவ பெருமானை அடைந்த பின்பும் கூட பழைய ஆசைகள் மீண்டும் கிளர்ந்தெழக் கூடும். அந்திலைநிலும் அதனை அறுத்தெறிய வேண்டும். ஏனென்றால், ஆசை படப்பட துன்பங்கள் புற்றீசல் போல் வந்து கொண்டேயிருக்கும். ஆசை ஒழிய ஒழிய ஆனந்தம் விளையும்.
தொடரும்