கண்ணன் காட்டிய வழி- நங்கநல்லூர் J K SIVAN
கௌதமன் ராஜா வீட்டு செல்ல பையன். சாக்கிய ராஜா சுத்தோதனர் அவனை கண்ணில் வைத்து வளர்த்தான். அவனுக்கு ஒரு கஷ்டமும் உலகில் தெரியக்கூடாது என்று அப்பாவுக்கு எண்ணம். எவர் கண்ணிலும் படாமல் பையனை வளர்த்தான்.
பையன் கௌதமன் சுகமாக வளர்ந்தான், ஒருநாள் தன்னைச் சுற்றி சிலர் வியாதி, முதுமை, நோய், வறுமை இவற்றால் துடிப்பதை கண்டு திகைத்தான். ஏதோ ஒருவனை ”இறந்து விட்டான்” என்பதால் புதைக்கவோ எரிக்கவோ தூக்கிக் கொண்டு போவதை வேறு பார்த்து விட்டான். இதெல்லாம் அவனுக்கு ரொம்ப பெரிய அதிர்ச்சியை தந்தது. ஏன் எல்லோரும் இப்படி கஷ்டப்படுகிறார்கள்? எதற்கு இந்த துன்பம்? ஏன் இந்த அவஸ்தை? எதனால்? இதற்கு எது நிவாரணம்? எப்படி விடுபடுவது? ஆழமாக அவன் மனதில் இந்த எண்ணம் பதிந்து அவன் தொடர்ந்து சிந்தித்தான்? கௌதமன் பின்னர் புத்தனானான். உலகமே சூன்யம் என்று உபதேசித்து நிர்வாணம் எனும் மோக்ஷத்தை, பிறப்பற்ற நிலையும் புத்தன் உபதேசித்தான். பௌத்த மதம் உருவானது.
கீதையில் கிருஷ்ணன் யுத்த களத்தில் என் சொந்த பந்தங்களை கொல்ல மாட்டேன் என்று வில்லைக் கீழே போட்ட அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் பந்தம் பாசம் எல்லாம் மாயை, பிறப்பு இறப்பு எதுவும் ஆத்மாவுக்கு இல்லை, நீ உடல் இல்லை, உன் அடையாளம் உருவற்றது என்று போதிக்கிறான். நீ கொல்லா விட்டாலும் பிறந்தது எதுவுமே ஒருநாள் மறையத்தான் போகிறது என்று கீதோபதேசம் செய்தானே இது கௌதமனுக்கு சின்ன வயதில் தெரியாதே. புரியவில்லை. தெரிய வில்லை.
பற்றற்றான் பற்றினை பற்றுக என்று வள்ளுவர் சொன்னதும் கிருஷ்ணன் மேலே சொன்னது தான். நான் தான் அந்த பற்றற்றவன் என்னை கெட்டியாக பிடித்துக் கொள் , உன்னை காப்பாற்றவேண்டியது என் கடமை என்றான்.
அஞ்ஞானம் ஒன்றே சர்வ துக்க, துன்பங்களுக்கும் ஆதாரம். தன்னலமற்ற எண்ணங்கள், செயல்கள் ஒன்றே மனதை பரிசுத்தமாக்கும். பலனை எதிர்பாராமல் செய்த காரியம் ஒன்றே ஆனந்தத்தை அளிக்கும். மாறுதல் அத்தியாவசியமானது. இன்றியமையாதது. மாறாதது ஆத்மா ஒன்றே. ஐம்புலன்களை அடக்கி ஆள்பவனே அரசன். ஜிதேந்திரியன் அவனே. ஆத்ம ஞானம் பெற்றவனுக்கு சுகம் துக்கம், எதுவுமே சமம். எதுவுமே அவனை பாதிக்காது. சர்வமும் அவனிலிருந்து தோன்றி அவனிடமே அடைக்கலம் புகும். ப்ரம்மம் எங்கும் வியாபித்திருப்பது,எல்லையற்றது. அதைக் கடலோடு, வானத்தோடு ஒப்பிடுகிறார்கள். எல்லாம் நீல மயம் . கண்ணன் சர்வ வ்யாபி என்பதால் அவனையும் நீல வண்ணத்திலேயே நாம் காண்கிறோம். கண்ணன் பூர்ணாவதாரம்.
கிருஷ்ணன் மனிதனாக பிறந்தாலும் தான் கடவுள் என்று உணர்ந்தவன். எனினும் மனித வாழ்க்கையே வாழ்ந்து காட்டியவன். ஆயுதம் எதுவுமின்றியே எதிரிகளை, தீய சக்திகளை அழிக்க எடுத்த எளிமையான அவதாரம் .கண்ணனின் கீதோபதேசம் ஆச்சர்யமாக யுத்தகளத்தில் நிகழ்கிறது.
முழுக்க முழுக்க மனதை அடக்க, ஐம்புலன்களை ஒடுக்க பற்றை நீக்க, பரந்தாமன் ஒருவனையே சரணடைய வேண்டும் என்ற உபதேசம் அர்ஜுனனுக்கு மட்டும் அல்ல , நமக்காக அர்ஜுனன் மூலம் . அர்ஜுனன் நர நாராயணர்களில் ஒருவன் அவனுக்கு கீதோபதேசம் தேவை இல்லை. ”பாண்டவர்களில் நான் அர்ஜுனன்” என்று கண்ணனே கூறுகிறான். அவனுக்கு எதற்கு உபதேசம்?. பக்தியை பிரதிபலிக்க, பாண்டவன் அர்ஜுனன் நமக்கு உதாரணமாக காட்டப்படுகிறான்.