END OF BHEESHMA J K SIVAN

பீஷ்மர்.   –  நங்கநல்லூர்  J K  SIVAN

மஹா  பாரதத்தில்  ஒரு  மஹா வீரன்  பீஷ்மன்  முற்பிறப்பில் சர்வ  சக்தி வாய்ந்த அஷ்ட வசுக்களில் ஒருவனானப்ரபாஸன்.    வசிஷ்டரின்  சாபத்தால் மனிதனாக பிறக்கிறான். கங்கையும்  சாபம் காரணமாக  பூமியில் பிறக்க நேரும்போது அவளுக்கும்  சந்தனு மஹாராஜாவுக்கும் மகனாக பிறந்த  ப்ரபாஸன்,  தேவ வ்ரதன் என்று பெயர் கொள்கிறான்.  தந்தைக்காக தன் குடும்ப வாழ்வை தியாகம் செய்து பீஷ்மன் என புகழடைந்தவன்.  காசி ராஜன் மகள் அம்பையின் காதல் வாழ்க்கைக்  கனவைப்   பாழாக்கி  அவளை சிறையெடுத்த  பீஷ்மனை பழிவாங்க   அம்பை தவமிருந்து  தன்னால் தான்  பீஷ்மனுக்கு மரணம் என்ற  வரம் பெறுகிறாள். சிகண்டியாக    மறு உருப்பெற்ற  அம்பையை முன்னிறுத்தி அர்ஜுனன் மஹா பாரத யுத்தத்தில் பீஷ்மனோடு மோதுகிறான்.   பீஷ்மர்  பெண்களோடு போர் புரியாதவர்.  ஆகவே   அர்ஜுனனால் / சிகண்டி எனும்  அம்பையின்  அம்புகளால்  துளைக்கப்பட்டு, வீழ்த்தப் பட்ட பீஷ்மர் நினைத்த நேரத்தில் மரணத்தை  தழுவும் வரம் பெற்றவர்.  உத்தராயணத்தில்  பூவுலகத்தைத்  துறக்க  குருக்ஷேத்ர யுத்த களத்தில்  அம்புப் படுக்கையில் காத்திருந்தார். உத்தராயணம் வந்த பிறகும்   ஏன் அவர்  உயிர் பிரியவில்லை?
ஒருநாள் பீஷ்மரை வேத வியாசர் யுத்த களத்தில் சந்திக்கிறார்.”வியாஸா, நான் என்ன பாவம் செய்தேன்? உத்தராயணம் வந்தபிறகும் ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை?”
“பீஷ்மா, நீ மனோ வாக்கு காயத்தால் தீங்கு புரியாவிட்டாலும் பிறர் செய்யும் தீமை களைத் தடுக்காமல் பேசாமல்  இருந்தது பாபம். அதற்கான தண்டனையிலிருந்து தப்பமுடியாது.” –வியாசர்.
ஆம்.  துரியோதனன் சபையில்  பாஞ்சலியின் உடையை துச்சாதனன் பறித்து அவமானம் செய்தபோது   பீஷ்மர்  அதை தடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தது மிகப்பெரிய தவறு என பீஷ்மர் உணர்ந்தார்.
”வியாஸா,  இதனால்  எனக்கு  எப்போது விமோசனம் ?
‘பீஷ்மா  நீ எப்பொழுது உன் தவறை உணர்ந்து வருந்துகிறாயோ, அப்போதே உன் பாபம் கணிசமாக  குறைந்து விட்டது.  அனைத்தையும் கண்டும் காணமல் இருந்த   உன்னுடைய கண்கள், செவி, வாய், தோள், கைகள், புத்தி  தலை ஆகியவை தண்டனை அனுபவித்து தான்  ஆக வேண்டும் என்றார் வியாசர். ” வியாஸா,   நீ சொல்வது சரி.  உடனே சூரியனின் நெருப்பைக் கொண்டுவா.  தவறு செய்த  என்னைச்  சுட்டுப் பொசுக்கு’
 ”பீஷ்மா,   ”அர்க்கன்” என்றால் சூரியன்.  எருக்கம்  என்று  தமிழில்  சொல்கிறோம்.  எருக்கம்பூவை தலையில் சூடுபவர்  சூரியன். பிரம்மச்சாரியான விநாயகருக்கு உகந்தது எருக்க இலை.அதேபோல் பிரம்மச்சாரியான  பீஷ்மா, உன்னையும்  இந்த எருக்க  இலையால் அலங்கரிக்கிறேன்.அது உன்னை சூரியனின் வெப்பத்தால்  பொசுக்குவதற்கு சமம் ‘
வியாசர்  எருக்க இலையை பீஷ்மர் தலையில், கண்களில்,தோளில் , காலில் சூட்டிய   சிறிது  நேரத்தில் பீஷ்மர் விரும்பிய மரணம் நிகழ்கிறது. மெதுவாக  கொஞ்சம் கொஞ்சமாக பூரண அமைதி அடைந்த பீஷ்மர் மறைந்து மீண்டும் விண்ணுலகத்தில்  ப்ரபாசனாகிறார்.
நமது பாபங்கள் தீர நாமும் எருக்க இலையை என்று தலையில் வைத்து ஸ்நானம் செய்வது இதற்காகத்தான்.
எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு காரணம் உண்டு அல்லவா? ரத சப்தமி  பீஷ்மஅஷ்டமி  ரெண்டுமே  பீஷ்மரை நமக்கு ஞாபகப் படுத்தும்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *