ULLADHU NAARPADHU 3 J K SIVAN

உள்ளது  நாற்பது  –   நங்கநல்லூர்   J K  SIVAN
பகவான்  மகரிஷி ரமணர்

3” ஸர்வம் ப்ரம்ம மயம் ”

”பார்வை சேர், நாம் உலகம் காண்டலால் நானா ஆம் சக்தி உள ஓர் முதலை ஓப்பல் ஒருதலையே – நாம உருச்
சித்திரமும் பார்ப்பானும் சேர் படமும் ஆர் ஓளியும்
அத்தனையும் தான் ஆம் அவன் ”

நாம் என்னென்னவோ வித விதமான வஸ்துக்களை, யார் யாரெல்லாமோ  மனிதர்களை,  எத்தனையோ உயிர்களை உலகில் பார்க்கிறோம். அவற்றுக்கு மூலமான, ஆதாரமான ஏதோ ஒன்று இருக்கிறது என்ற அளவில் நாம் அறிகிறோம்.   இதெல்லாம் பார்க்கிற, இல்லை, அனுபவிக்கிற, நாம்,— நமக்கு முன் தோன்றும் விதவிதமான உருவம், பெயர்களோடு கொண்ட வஸ்துக்கள், உயிர்கள், அனைத்தும், —-இந்த  மனிதர்களை, பொருள்களை உயிர்களை எல்லாம் நாம் அனுபவிக்க வைக்கும், உணரவைக்கும் ஏதோ ஒரு சக்தியும் — ஒன்றே தான். அது தான் ப்ரம்மமாகிய ஈஸ்வரன்.  சர்வம்  ப்ரம்ம  மயம் எனப்படுவது இது தான். 

நமக்கு கண்ணில் பட்டது, நாம் இந்த உலகத்தில் அறிந்ததை, அனுபவித்ததை, ” ப்ரத்யக்ஷம்”   நேரடியாக, என்கிறோம். நாம் அனுபவிக்க வைத்த சக்தி ”அபரோக்ஷம்” நமது ஐம்புலன்கள் வழியாகத் தான் இந்த உலக அனுபவம் பெற்றோம்.அந்த அனுபவத்தை ”ப்ரதீதி” என்கிறோம். இதிலிருந்து என்ன புரிகிறது? கண் வழியாக பார்த்தது, காதால் கேட்டது, மெய் வாய் மூக்கு செவி இதனால் எல்லாம் அறிந்த ப்ரத்யக்ஷம் தான் நமது அனுபவமான ப்ரதீதி. ரெண்டும் ஒன்று தானே.    இதற்கு பின்னால்,  ஏதோ ஒன்று இதற்கெல்லாம் ஆதாரமாக  இருந்து, நம்மை  உணர வைத்ததே அது தான் ”ஸத் ‘  எனப்படுவது.  ப்ரம்மம்.   அதால் தான் உலகத்தில் எல்லாம் ஜீவர்களுக்கு புலனாகியது. ஆகவே அதிலிருந்து தான் எல்லாமே உருவாகியது. காட்சி, காணுதல், காண்பவன் இந்த மூன்றுக்கும்  காரணமான ”ஸத் ” தை மறைக்கும் திரை (ஆவரணம்)யைத் தான்   ‘மாயை’  என்கிறோம். 

சாயந்திர அரை இருட்டில் கோபாலசாமி ஒரு கயிறைப்  பார்த்துவிட்டு  பாம்பு அலறி, பயத்தில் ஐந்தடி உயரம் தாண்டி குதித்தான். அந்த பயம்  உண்மையில்  வெறும்  பிரமை. கயிறு  நிச்சயம்  பாம்பு இல்லை, கயிறு  பாம்பாக மாறவில்லை. கோபாலசாமி புத்தியில் உண்மையை மறைத்து ,கயிறு என்ற  உண்மையை   பாம்பாக இல்லாத  ஒன்றாக  மாற்றி காட்டியது.   உண்மைக்கு திரை போட்டது. இந்த ஆவரணம்,  திரை,   உண்மையை, ஸத்  என்பதை, ஆத்மாவை,  கொஞ்சமும் பாதிக்காது .  வெறும்  புத்தியின் தோஷம். அருகே இருந்த ஒருவன் டார்ச் அடித்து பார்த்த  பின் கயிறு  தான்  கோபாலசாமி பார்த்து மிரண்டது. பாம்பு அல்ல என்று தெரிகிறது. இதை தான் ‘அவித்யா தோஷம்’  என்பது. விகல்பங்களை உண்டாக் குவது. இல்லாததை  இருப்பது போல் மாற்றிக் காட்டுவது. எல்லாம் நான், நீ, அது, அவன்,  என்று வித்தியாசப்படுத்தி,  ஏதோ ஸ்வரூபத்தில் காட்டுவது. அனைத்தும் ஸத்தில் மறைந்துவிடும்.   இந்த  ஞானம் நமக்கு வேண்டும்.

எதிரே பெரிய கடல். அதில் அலை, நுரை, குமிழிகள், என்று பல வஸ்துக்கள் தெரிகிறது. உண்மையில் அத்தனையும் நீர் ஒன்றே. இப்படி உணர்பவன் தான் ”ஏக தர்ஸி” ஒன்றாக காண்பவன்,உணர்பவன். எல்லாவற்றிலும் இறைவன் இருக்கிறான், ஸர்வம் ப்ரம்ம மயம் அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பது இப்போது புரிகிறதா?  சகலமும் ஆத்மாவின் விகல்பம் .
முதல் தடவை புரியவில்லை என்றால் இந்த பதிவை மெதுவாக  ரெண்டாவது தடவை மனதைச்  செலுத்தி படித்துப் பாருங்கள். அப்போதும் புரியவில்லை என்றால்  என் எழுத்துக்கு விளக்கும் சக்தி இல்லை என்று  தான் அர்த்தம்.
 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *